Header image alt text

தியாகிகள் தின நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உரை-

Sithar ploteஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் அனுஷ்டிக்கப்படும் 23ஆவது தியாகிகள் தின நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், கடந்த 1977ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழீழத்திற்கு வாக்களித்திருந்தபோதிலும், 1981ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவுடன் ஏற்பட்ட ஓர் உடன்பாட்டிற்கமைய மாவட்ட சபைகள் கொண்டுவரப்பட்டன. அதற்கான தேர்தல் நடத்தப்பட்டபோது சுமுகமான ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ் மக்கள் மாவட்ட சபைக்கான தேர்தலில் வாக்களித்தார்கள். இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்ற போதிலும் அதிகமான அதிகாரங்களைக் கொண்டிராவிட்டாலும்கூட மாவட்ட சபைகளைச் சரிவர இயங்குவதற்கு அரசாங்கம் அன்று அனுமதிக்கவில்லை. அதனால் அது கேலிக்கூத்தாகியது. அதை ஏற்று தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூடடணி தலைவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். அன்று தலைவர் அமிர்தலிங்கம் இந்த மாவட்ட சபையில் போட்டியிடுவதற்கு எடுத்த துணிகரமான தீர்மானத்தைப் போலவே, ஏனைய கட்சிகளும், இயக்கங்களும் புறந்தள்ளிய வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளர் நாயகம் பத்மநாபா துணிவுடன் முன்வந்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவான இந்த மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்குத் தகுந்த தீர்வாக மாட்டாது என்பதை எமது தலைவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். அதனை ஏற்றுக்கொண்ட அவர், இதனை ஓர் ஆரம்பமாக ஏற்றுக்கொண்டு செயற்படுமாறும், வேண்டிய உதவிகளைத் தாங்கள் செய்வதாகவும் உறுதியளித்திருந்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தத்;திற்கமைய இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஒன்றரை இலட்சம் இந்திய அமைதிகாக்கும் படையினர் நிலை நிறுத்தப்பட்டிருந்தார்கள். அத்தகைய ஓர் இராணுவ அழுத்தம் இருந்தபோதிலும் அன்றைய அரசாங்கம் மாகாண சபையை சரிவர இயங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இருந்தபோதிலும், மாகாண சபையின் ஊடகத்தான் அதிகாரபூர்வமாக சட்டரீதியாகத் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இந்த மாகாண சபைதான், குறைந்தளவாக இருந்தாலும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் படிப்படியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பலருக்கும் புரிய வைத்திருந்தது. இன்று வடக்கில் வட மாகாணசபைக்கான தேர்;தலை உப்புச்சப்பற்ற வகையில் நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு அமைய அங்கு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியின்கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்றார்கள் என்பதைத் தேர்தலின் மூலம்; காட்டியிருக்கின்றார்கள். இப்போது வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டால், தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போவதில்லை எனக் கூறுகின்ற அரசாங்கத்திற்குத் தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் பலரும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதன் ஊடாகத்தான் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட முடியும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு இன்றைய நெருக்கடியான ஓர் அரசியல் சூழலில் எடுத்துக்காட்ட வேண்டிய பொறுப்பு வட மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களைச் சார்ந்திருக்கின்றது. அந்தப் பொறுப்பை அவர்கள் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகள் இருப்பதை எல்லோரும் அறிவார்கள். இருந்த போதிலும் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலின் மூலம் அரசியல் தீர்வைக் கொடுக்க விரும்பாத அரசாங்கத்தை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனைச் சரியான முறையில் நிறைவேற்றுவதன் ஊடாகத்தான் தமிழ் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் உயிர்களைத் தியாகம் செய்த பத்மநாபா சிறீசபாரத்தினரம், உமா மகேஸ்வரன் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்குச் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாகவும் கைமாறாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

News

Posted by plotenewseditor on 2 July 2013
Posted in செய்திகள் 

இந்தியப் பிரதமரின் செய்தியுடன் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்-

manmogansinghஇந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் செய்தியுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். எதிர்வரும் 07ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். அவர் ஜுலை 9ஆம் திகதி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள, 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 13ஆவது அரசியல் அமைப்பு தொடர்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் விசேட செய்தியொன்றையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை ஜனாதிபதிக்கு கொண்டுவரவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சிவ்சங்கர் மேனனின் இலங்கைக்கான விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ – சல்மான் குர்ஷித் டெல்லியில் சந்திப்பு-

pasil13ஆவது திருத்தச்சட்டம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 04ஆம் திகதி புதுடில்லி செல்லவுள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை நேரில் சந்தித்து 13ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச திருத்தங்கள் சம்பந்தமான விடயங்கள் உள்ளிட்ட அரசியல் நிலைவரம் குறித்து எடுத்துரைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்கள் முடிவடையும் வரை 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை கொண்டுவருவதனை நிறுத்துமாறு இந்தியா கொழும்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளதென அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிகாரங்களை குறைத்தால் அரசிலிருந்து விலகுவேன்-அமைச்சர்

vaasudevaஅரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படல் வேண்டுமென்று தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மாகாண சபைக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கோ இன்றேல் அதிலிருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கோ எடுக்கப்படும் முயற்சிகளை தான் முழுயாக எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவற்றைக் கூறியுள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளாமல் 13ஆவது திருத்தச் சட்டமூலம் மாற்றியமைக்கப்பட்டு மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமாயின் இந்த அரசிலிருந்து நான் விலகிவிடுவேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதுவரிடம் வெளியுறவு அமைச்சு விளக்கம் கோரல்-

us & sriஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன், இலங்கை வெளியுறவு அமைச்சினால் விளக்கம் கோரலுக்காக அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை தொடர்பில் விளக்கம் கோரலுக்காகவே மிச்செல் ஜே சிசன் அழைக்கப்பட்டுள்ளார். இதன்போது, மிச்செல் ஜே சிசனிடம், குறித்த எச்சரிக்கை விடுத்தமை தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்கர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்கள் வாய்மூலமாக, உடல்ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே, வெளிநாட்டவர்கள் குறிப்பாக பெண்கள், இலங்கையின் ஏனைய பயணிகளுடன் பஸ்களில் பயணம் செய்யும்போது கவனமாகப் பயணிக்க வேண்டுமென அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
புலிகளுக்கு  எதிரான தடைஇந்தியாவில் நீடிப்பு-

Ltte & indiaபுலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக கணிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு வரை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தடையுத்தரவினை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தடையுத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வை.கோபாலசுவாமி கருத்து தெரிவித்துள்ளார். புலிகள் சார்பாக வழக்கறிஞரான அவரே முன்னிலையாகி சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கான நியாயபூர்வ இறையாண்மையான தீர்வை பெறுவதற்காகவே புலிகள் முயற்சித்ததாக அவர் வாதிட்டார். அவர்களின்  நடவடிக்கைகள்  எந்தவிதத்திலும் இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்த அவர், ஆகவே புலிகளை தொடர்ந்தும் தடைசெய்த இயக்கமாக கணிப்பது சட்டவிரோதமானது என கூறியுள்ளார். எனினும் புலிகள் இயக்கம்மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

 வெலிக்கடையிலுள்ள இந்தியக் கைதிகளை இடமாற்ற தீர்மானம்-

velikadaகொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியக் கைதிகள் அந்நாட்டு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர், 11தமிழக கைதிகளே இவ்வாறு இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்த தமிழகப் பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த தமிழக கைதிகளுக்கான தண்டனை குறைக்கப்படாது என்ற போதிலும் தமிழக சிறைகளில் தண்டனை அனுபவி;த்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களினால் அவர்களை பார்வையிட சந்தர்ப்பம் கிட்டும் எனக் கூறப்படுகின்றது.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தம்-

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயத்துடன் தொடர்புடைய ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை இதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் தொடர்பான கொள்கைகளை சிறப்பாகப் பேணும் வகையில் இத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இக் கொள்கைகளை கிராமிய மட்டங்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் திருத்தங்கள் அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக ஒட்டுக்கேட்கும் உபகரணம் கண்டுபிடிப்பு-

teleகையடக்க தொலைபேசிகள், வீடு மற்றும் அலுவலங்கங்களில் பயன்படுத்தப்படும் வயர் இணைப்பு தொலைபேசிகளின் உரையாடல்களை இரகசியமான முறையில்  ஒட்டுக்கேட்கும் உபகரணங்கள், கணனி பாகங்கள் என்ற போர்வையில், இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சில இலங்கை தூதுவர்களின் தொலைபேசிகள் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளால் ஒட்டுக்கேட்கப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்த உபகரணங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம் வெளியாகியுள்ளது. ரொவின் பக் என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைகள் வெளிநாடுகளில் செயற்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் புலனாய்வுச் சேவையின் வெளிநாட்டு விசாரணை சட்டத்தின்கீழ் மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கையடக்க தொலைபேசி பயன்படுத்தப்படாத நிலையில், அதன் பட்டரி சூடேறுதல், தொலைபேசி அடிக்கடி வெளிச்சத்தை வெளியிடுதல், பீப் என்ற சத்தம் ஏற்படுத்தல் என்பவற்றின் மூலம் தொலைபேசி ஒன்று பிறிதொரு தரப்பினரால்   ஒட்டுக்கேட்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என இலங்கை புலனாய்வுப்பிரிவின் தகவல்கள்மூலம் தெரியவருகின்றது.