Header image alt text

அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானது

235F8890CBFA3BAA7E4CB2D113C75Fஇலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். Read more

வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.       

 

TNA-Leaders_4இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆளுங்கட்சிகாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.             ஆனால் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றது என்று இராணுவப் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். Read more

News

Posted by plotenewseditor on 25 July 2013
Posted in செய்திகள் 

கறுப்பு யூலையின் 30ம் ஆண்டு நினைவுதினம்-

images 4கறுப்பு யூலையின் 30ம் ஆண்டு நினைவுதினம் நேற்று முன்தினம் 23ம் திகதிமுதல் நாளை மறுதினம் 27ம்திகதி வரையான ஐந்து நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ்அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான  தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் வருடாவருடம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை-கலாநிதி மன்மோகன்சிங்-

இலங்கையின் மீளமைப்பு மற்றும் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு விடயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று இந்தியப் பிரதமர் கலாநிதி மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்hளர். ஒரே இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்குளுக்கான அரசியல் தீர்வினை வழங்குவதற்கு இந்தியா இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் 13ம் திருத்தச்சட்டத்தை மாற்றி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையியே மன்மோகன்சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திற்கான முதலாவது வேட்புமனு தாக்கல்-

வட மாகாணசபை தேர்தலுக்கான முதலாவது வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கட்சியினால் யாழ். மாவட்டத்திலேயே இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் பி.ஜிதயானந்த போட்டியிடுகின்றார். இந்த வேட்புமனு இலங்கை தொழிலாளர் கட்சியின் முதன்மை வேட்பாளரினால் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் பி.ப 1.05 மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஒருபடி மேல் சென்று தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும்-சோமவன்ச-

இலங்கையின் அரசியலமைப்பு சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான, இனவாத அரசியலமைப்பாகும். இதனை தற்போதைய அரசாங்கம் முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது. உரிய உரிமைகள் உள்நாட்டில் வழங்கப்படாத நிலையில், தமிழர்கள் இந்தியாவிடமோ, ஏனைய சர்வதேச நாடுகளிடமோ செல்வதை குறைகூற முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உரிய பாடம் புகட்ட வேண்டுமாயின் இந்தியா வலியுறுத்துவதைவிட ஒருபடி மேல்சென்று தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அப்போது சர்ச்சைக்குரிய இலங்கை – இந்திய ஒப்பந்தமும் தானாக இரத்தாகிவிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை-

வட பகுதியிலுள்ள 13 இராணுவ முகாம்களை ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள 13 சிறிய முகாம்களிலுள்ள இராணுவத்தினர் பலாலி பிரதான இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே மூன்று பிரதான முகாம்கள் உட்பட 16 முகாம்கள் யாழில் இயங்கி வருகின்றன. யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது இயல்புநிலை திரும்புவதையடுத்து சிறிய படைமுகாம்களை அகற்ற இராணுவதட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. 13 இராணுவ முகாம்கள் இயங்கி வருகின்ற கட்டடங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிகேடியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை கண்காணிக்க சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கண்காணிப்பதற்காக மூன்று சர்வதேச கண்காணிப்பாளர் அமைபுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்துள்ளார். ஆசிய தேர்தல்கள் அதிகாரிகள் அமைப்பு, தேர்தல்கள் முகாமைத்துவம் தொடர்பான தெற்காசிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் அமைப்பு ஆகியவற்றுக்கு எழுத்துமூல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதற்கமைய இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு- வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் நேற்று தனது வீட்டு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 17வயதான சுப்பிரமணியம் பத்மயோகா என்ற மாணவியே கிணற்றுக்குள் குதித்து மரணமடைந்துள்ளார். இம்மரணம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோஸ் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்-

ஈரோஸ் என்கிற ஈழவர் ஜனநாயக முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில் ஈரோஸ் ஏர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் 24ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-

aதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 24ஆம் வருட நினைவுதின நிகழ்வு புளொட்டின் பிரான்ஸ் கிளையின் ஏற்பாட்டில் பிரான்ஸ், 75013-பாரீஸ் என்னுமிடத்தில் கடந்த 21.07.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகத் தோழர்கள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது தோழர் சபா அவர்கள் தீபச் சுடரினை ஏற்றி 24ஆவது வீரமக்கள்தின நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் மற்றும் மறைந்த தோழர்களின் உருவப்படங்களுக்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரான்ஸ்கிளை தோழர்கள் மற்றும் நண்பர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிநீத்தவர்களின் கனவுகள் மற்றும் இலட்சியங்களை நினைவுபடுத்தி தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து புளொட் தலைவரின் வீரமக்கள்தின செய்தியினை பிரான்ஸ் கிளை சார்பில் தோழர் ஜோன்சன் அவர்கள் வாசித்து உரையாற்றியதுடன், நன்றியுரையினையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் புளொட்டின் பிரான்ஸ் கிளைத் தேரழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். (-பிரான்ஸ் கிளை சார்பாக திரு. ஜோன் திருச்செல்வம்-)

ihjgcebd

 

 

ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தல்-

எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் பொருட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, உரிய ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமானது என தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வேட்புமனுவில் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

மன்னார் ஆயருடன் அமைச்சர்கள் சந்திப்பு-

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை சிரேஷ்ட அமைச்சர்கள் நேற்றையதினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திஸ்ஸ கரலியத்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் மன்னார் மாவட்ட கத்தோலிக்க குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நேரில் கண்டறிவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகவே இரு அமைச்சர்களும் மன்னாருக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையர்கள் பயணித்த படகு மூழ்கியது-

Australia[1]இலங்கை மற்றும் ஈரானைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளுடன் பயணித்த படகொன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளின் கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த இப் படகு அனர்த்தத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, காணாமற்போயிருந்த 157பேர் மீட்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றவாசிகள் 170 பேருடன் பயணித்த படகே விபத்திற்குள்ளானதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தினம்-

images 4தமிழ் தேசிய வீரர்கள் தினம் எதிர்வரும் 27ம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். 27ம் திகதி பிற்பகல் 2.30 க்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 1983ஆம் ஆண்டு ஜூலை 25,27 ஆகிய தினங்களில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட டெலோவின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட போராளிகள் மற்றும் பொதுமக்கள் 53பேரின் 30ஆவது நினைவு தினத்தை முன்னிட்டே குறித்த அஞ்சலி நிழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவம், இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடம் கோரி படகில் சென்றோர் கைது-

புகலிடம் கோரி படகில் சென்றோர் இன்று இலங்கை கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். காலியிலிருந்து சுமார் 250 மைல் தூரம் தென் கிழக்கு பகுதியிலேயே இவர்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படகிலுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜீவன் குமாரதுங்கமீது தாக்குதல்

தச்சுத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று காலி வீதியில் மொரட்டுவ ராவத்தாவத்தை பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. தமது உற்பத்தி பெருட்களுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி காலிவீதியை மறித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திப்பதற்குச் சென்றிருந்தபோது அவரை இலக்கு வைத்து, தண்ணீர் போத்தல் வீச்சு தாக்குதல் நடததப்பட்டதுடன், அவருக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பதவி விலகுவதாக தயாசிறி எம்.பி அறிவிப்பு-

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது இராஜினாமாவை பாராளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 தோழர் குமரன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி

107664-274x300

யாழ். மாதகலைச் சேர்ந்தவரும், பிரான்ஸில் வசித்து வந்தவருமான விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்) அவர்கள் மரணமடைந்தமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
 
78களில் காந்தீயம் ஊடாக மக்கள் சேவையினை ஆரம்பித்த தோழர் குமரன், விடுதலைப் போராட்டத்தின்; ஆரம்பகாலங்களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு கழக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகித்தார்.
அத்துடன் ஆரம்ப காலங்களில் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்குபற்றியிருந்த அவர், பொதுவுடமை சித்தாந்தத்தில் தீவிர பற்றாளராகவும் திகழ்ந்தார்
புளொட்டின் மத்திய குழு உறுப்பினராகவும், தள அரசியல் செயலராகவும் 84 – 87 காலப்பகுதியில் செயற்பட்டு வந்த தோழர் குமரன், 1987 களின் இறுதிவரை தனது பணியினைத் தொடர்ந்தார்.
தோழர் குமரன் அவர்களின் மறைவு கழகத்திற்கும், அவர் நேசித்த மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். 
அன்னாரருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.
 
21.07.2013.         தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)
                         ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F).

கறுப்பு யூலையின் 30ஆம் ஆண்டு நினைவுகள்-

 

images 4

imagesimages 3

கறுப்பு யூலையின் 30ம் வருட நினைவுதினம் இன்று 23ம் திகதிமுதல் எதிர்வரும் 27ம் திகதிவரை அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியின்போது அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் ,இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் இணைந்தனர். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம்-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம் கூட்டமைப்பின் யாழ் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கட்சிகளுக்கான வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் இணக்கம் ஏற்பட்டது.இதன்படி வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3 ஆசனங்கள். இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலா 2 ஆசனங்கள், புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ் 4 ஆசனங்கள், ரெலோ 3 ஆசனங்கள், புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொடடுக்கு தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் நியமனத்தால் நாடு பிளவுபடுமென சந்தேகம் தேவையில்லை-அமைச்சர் ராஜித-

vigneshwaran--sambanthan-Flashதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை காரணமாக நாடு பிளவுபடும் என தென்னிலங்கையில் எவரும் சந்தேகம்கொள்ள வேண்டியதில்லை என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.விக்னேஸ்வரனின் வரலாறு, குடும்பப் பின்னணி மற்றும் கல்விப் பின்னணி ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணியமாட்டார் என்பது தெளிவாகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் முதலமைச்சராக வருவதன்மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடமாட்டாது. தமிழ் மக்களின் கோணத்திலிருந்து பார்க்கும்போது அவர் ஒரு மத்தியதஸ்தமான மனிதராகவே உள்ளார். அவரின் நேர்காணல்களை நான் அண்மையில் வாசித்துப் பார்த்தேன். தமிழ் மக்களின் ஜீவனோபாய மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். மாறாக அரசியல் போராட்டத்தை கட்சி முன்னெடுக்கும் என்பதே அவரின் நிலைப்பாடாக உள்ளது. சி.வி. விக்னேஸ்வரன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். சிங்கள சமூகத்துடன் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றார். அவரின் குடும்பமும் சிங்கள மக்களுடன் உறவு வைத்துள்ளது. அந்த வகையில் விக்னேஸ்வரனின் வரலாறு குடும்ப பின்னணி மற்றும் படிப்பு ஆகியவற்றை பார்க்கும்போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணியமாட்டார் என்பது தெளிவாகின்றது. அதனால் அவரின் வருகையினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தென்னிலங்கையில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ஐ திருத்தும் முயற்சியை கைவிடவில்லை-அமைச்சர் தினேஸ்-

13அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிடமில்லை. அந்த முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவுமில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளின் சட்டத் தேவைகள் குறித்து அவதானமாக ஆராய்ந்து வருகின்றோம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களின் தன்மை மற்றும் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளப்படவேண்டிய சட்டத் தேவைகள் என்பன தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம். உரிய நேரத்தில் தேவையான திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். 13இல் திருத்தங்களை மேற்கொள்ள முயன்ற அரசாங்கம் இந்தியாவின் கோரிக்கையையடுத்து அந்த முயற்சியை கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளமை பற்றி விபரிக்கையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் 143 பொலிஸ் நிலையங்கள் ஊடாக பாதுகாப்பு-

LK policeஎதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் ஒவ்வொரு மாவட்டங்களிற்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாகாணசபை தேர்தல் இடம்பெறவுள்ள சகல மாவட்டங்களிற்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல் இடம்பெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள 143 பொலிஸ் நிலையங்களினூடாக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இம் மாவட்டங்களிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் அமைதிங்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம்-

pikku.buddist monkபௌத்த பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்று வெகுவிரைவில் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான முறைப்பாடுகள், பிணக்குகள் போன்றவற்றைக் கையாள பொது நீதிமன்றங்களுக்கு செல்லாமல் தீரத்துக் கொள்ள இந்நீதிமன்றங்கள் உதவும். அத்துடன் பௌத்த மதகுருக்கள் கௌரவமிழக்காத வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு இத்தகைய நீதிமன்றங்கள் வழிவகுக்கும் என பிரதமர் டி.எம் ஜயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ். விஜயம்-

ukஇலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். இக்குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர். இக்காலப் பகுதியில் இந்த குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்க பிரதநிதிகள் மற்றும் எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பில் மினி சூறாவளி-

கொழும்பில் இன்றுகாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. டி சேரம் பிளேஸ், கொழும்பு தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மின்சார தடையும் ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தோழர் குமரன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி

107664-274x300 யாழ். மாதகலைச் சேர்ந்தவரும், பிரான்ஸில் வசித்து வந்தவருமான விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்) அவர்கள் மரணமடைந்தமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

78களில் காந்தீயம் ஊடாக மக்கள் சேவையினை ஆரம்பித்த தோழர் குமரன், விடுதலைப் போராட்டத்தின்; ஆரம்பகாலங்களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு கழக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகித்தார்.
அத்துடன் ஆரம்ப காலங்களில் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்குபற்றியிருந்த அவர், பொதுவுடமை சித்தாந்தத்தில் தீவிர பற்றாளராகவும் திகழ்ந்தார்
புளொட்டின் மத்திய குழு உறுப்பினராகவும், தள அரசியல் செயலராகவும் 84 – 87 காலப்பகுதியில் செயற்பட்டு வந்த தோழர் குமரன், 1987 களின் இறுதிவரை தனது பணியினைத் தொடர்ந்தார்.
தோழர் குமரன் அவர்களின் மறைவு கழகத்திற்கும், அவர் நேசித்த மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு-

சென்னை விமான நிலையம் உட்பட இந்தியாவின் ஏழு விமான நிலையங்களுக்குத் தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதாக புலனாய்வுக் குழுமம் (ஐ.பி) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அந்த விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. ஏழு விமான நிலையங்களும் சிறிய வகை விமானங்களால் மோதித் தாக்கப்படவோ, விமானங்கள் கடத்தப்படவோ, புதியவகை வெடிகுண்டுகள் மூலமாகவோ தாக்கப்படக் கூடும் என புலனாய்வுக் குழுமம எச்சரித்துள்ளது. புதுடில்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் குவஹாத்தி ஆகிய 7 நகர விமான நிலையங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் அரசு புலனாய்வுக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

50 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை-பவ்ரல்-

வட மாகாணத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் இருப்பதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான கபே, ஆள்பதிவு திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வு நிலையம் என்பன இணைந்து கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நடமாடும் சேவைகளை மேற்கொண்டிருந்தன. இதன்போNது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சேவைகளின்போதே, வட மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் பெருமளவு மக்கள் உள்ளமை தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும், எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் வாக்காளர் நலன்கருதி தற்காலிக அடையாள அட்டையினை பெற முடியும் என ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் புலி உறப்பினர்கள் மற்றும் விதவைகளுக்கு கடனுதவி-

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் விதவைகளுக்கான இலகுகடன் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்டையில் இந்த வருடத்திற்குள் புனர்வாழ்வு மற்றும் இலகுக்கடன் திட்டங்களுக்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 525 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 5ஆயிரம் பேருக்கு இவ்வருட இறுதிக்குள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அத்துடன் 1000 விதவைகளுக்கு சுயதொழிலுக்கான இலகுக்கடன்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை காலப்பகுதியினுள் 1750 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு அடையாளம்-

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல காணிகள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை அடையாளப்படுத்தும் வகையில் ‘இது இராணுவத்தினருக்கு உரிய காணி” என தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பெயர்ப்பலகைகள் காணிகளில் நடப்பட்டுள்ளன. மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் சௌத்பார் பிரதான வீதி மற்றும் பனை மரக்காடுகள், அடர்ந்த காடுகளிலேயே காணி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன. அதிகளவான தனியார் காணிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. போர் காலத்தில் பல ஆயிரக்கணக்காண தமிழ், முஸ்ஸிம் குடும்பங்கள் அகதிகளாக இந்தியாவுக்கும் ஏனைய இடங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தன. அவர்களில் அநேகர் தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அவர்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு காணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் தனியார், மற்றும் அரச காணிகள் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டு வருவது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவங்களை எடுத்துக்காட்டாக பெற்றுக்கொள்ள முடியும்-ரவிநாத ஆரியசிங்க-

உலகின் எந்தவொரு நாட்டினதும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போதும் இலங்கை அது தொடர்பில் பெற்றுள்ள அனுபவங்களை எடுத்துக்காட்டாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜெனீவா ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக பேரவையின் அமர்வில் கலந்து கொண்டபோதே இலங்கை பிரதிநிதி இந்த நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளார். 3 தசாப்த கால பிரிவினைவாத செயற்பாடுகளை எதிர்கொண்ட இலங்கை 2004ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்கும் முகம்கொடுத்தது. யுத்த சூழ்நிலைகளின்போது இலங்கை பெற்ற அனுபவங்களை ஏனைய நாடுகள் பயனுள்ள விடயங்களாக கருதவேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலக்கண்ணி வெடிகளை அகற்றல், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடிமர்த்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவைகளை இலங்கை முனைப்புடன் மேற்கொண்டுள்ளது என ரவிநாத ஆரியசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு விபரம் பெறுவதற்கு தொலைபேசி இலக்கம்-

1919 என்ற அரச தகவல் கேந்திர நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன்மூலம் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதற்குரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் 1919 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதன்மூலம் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

புலிகளுக்கு நிதி வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தல்-

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இயங்கிவரும் முன்னணி அமைப்புக்களால் புலிகளுக்கு நிதி வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தனது பங்கு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென இலங்கை கோரியுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு தற்போது சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஆறு பேரடங்கிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவுடன் கடந்த சனியன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது,

News

Posted by plotenewseditor on 21 July 2013
Posted in செய்திகள் 

யாழில் சிறீரெலோ அலுவலகம்மீது தாக்குதல்-

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறீரெலோ அலுவலகம்மீது இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரே இத் தாக்குதலை நடத்தியதாகவும், இதனால் அலுவலகம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதுபற்றி உடன் கோப்பாய் பொலீஸ் நிலையத்திற்கு சிறீரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் செந்தூரனால் தகவல் வழங்கப்பட்டு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் சிறீரெலோ கட்சியினர் ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஏற்கனவே இந்த அலுவலகம்மீது பெற்றோல் குண்டும் வீசப்பட்டிருந்தது. 
 
காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் என்ன தவறு?-சி.வி.விக்னேஸ்வரன்- 

13ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள குறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த திருத்தத்தை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கில் தற்போது நிலைகொண்டுள்ள 1,50,000 இராணுவத்தால் மக்களுக்கு அசௌகரியம் உள்ளது என தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மக்கள் ஒரே மொழியை பயன்படுத்துவதால் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் வழங்குவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இலங்கை – இந்திய நட்புறவை பிளவுபடுத்த முடியாது-யஷ்வர்தன் குமார் சிங்ஹா- இலங்கை

இந்தியாவிற்கு இடையில் காணப்படும் நட்புறவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் யஷ்வர்தன் குமார் சிங்ஹா தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக அமைச்சர் மைத்திரிபால கூறியுள்ளார்.நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டதாகவும், இலங்கை சுகாதார துறைக்கு இந்தியா வழங்கி வரும் உதவிக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறிய அமைச்சர் மைத்திரிபால, இந்தியாவின் உதவி தொடர்ந்தும் அவசியமென கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். 
 
பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீடுமீது தாக்குதல்-

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் தங்கிருந்த வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் தென்னிலங்கை மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு பின்புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கி கல்விகற்று வருகின்றனர்.இந்த வீட்டுக்கு நேற்று நள்ளிரவு மதுபோதையில் சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன் வாசற் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர். கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளனர். இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுநலவாய மாநாட்டின் பின் 13இல் திருத்தம்- 

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு முடிவடைந்த பின் 13ஆவது மாற்றங்களைச் செய்வதன்மூலம் அதில் அடங்கியுள்ள மாகாண சபைகளுக்கான பொலீஸ் காணி அதிகாரங்களை நீக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மறுபரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகளை நியமிக்காத காரணத்தால் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அரச கட்சிகளின் பிரதிநிதிகள் பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்குவதற்கு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடியதாகவிருக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எடுக்கும் முடிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. 
 
தேர்தலைக் கண்காணிக்க பவ்ரலுக்கு ஜப்பான் நன்கொடை-

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக வாக்காளர்களை அறிவூட்டும் செயற்பாட்டுக்கும், தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்குமாக பவ்ரல் அமைப்புக்கு 11 மில்லியன் ரூபாயை நன்கொடையாக ஜப்பானிய அரசு வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொஹிபுட்டோ ஹோபோ மற்றும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ஆகிய இருவருக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.வடமாகாண சபைக்கான தேர்தல் 1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வருடமே முதன் முறையாக இடம்பெறவுள்ளது. இதனால் வடமாகாண வாக்காளர்களை அறிவூட்டும் செயற்பாட்டை நோக்காகக் கொண்டு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.  அத்துடன் இடம்பெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் நீதியானதும்  சுதந்தி ரமானதுமான தேர்தல் இடம்பெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காகவே ‘பவ்ரல்’ அமைப்புக்கு மேற்படி நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு-

இலங்கையில் பெண்கள் மீதான வன்முறை 80 வீதத்தினால் அதிகரித்துள்ளது என மனித அபிவிருத்தி மற்றும் உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த ஆய்வின் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் 80 வீதத்தால் குடும்ப வன்முறைகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, உலகில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறை காரணமாக பாதிக்கப்படுகின்றார் என பெண்கள் உரிமைகள் தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தும் குழு குடும்ப வன்முறைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உரிமைகள் குழுவின் உப தலைவர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவிக்கையில், தற்போது அதிகரித்துள்ள மதுபானசாலைகள் வன்முறைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டவை. சந்திக்குச் சந்தி காணப்படும் மதுபானசாலைகள் வன்முறைகள் அதிகரிக்க காரணமாகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையங்களில் முறையிட முன்வராமை, அத்துடன் கிராமப் புறங்களில் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வின்மை ஆகியவை இலங்கையில் வன்முறைகள் அதிகரிக்க் காரணமாகின்றன. மேலும் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோருக்கு எதிராக இழப்பீடு வழங்குதல் அல்லது குறைந்தகால சிறைத் தண்டனையே. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

News

Posted by plotenewseditor on 20 July 2013
Posted in செய்திகள் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்றுமாலை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசு கட்சிக்கு 03 வேட்பாளர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 02 வேட்பாளர்களும், ரெலோ அமைப்புக்கு 01 வேட்பாளரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு 01 வேட்பாளரும் என பங்கிடப்பட்டது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 02 வேட்பாளர்களும், ரெலோவிற்கு 02 வேட்பாளர்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு 02 வேட்பாளர்களும், புளொட் அமைப்புக்கு 01 வேட்பாளரும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 01 வேட்பாளருமென பங்கிடப்பட்டது. யாழ்ப்பாணம் சம்பந்தமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டாலும் இறுதிமுடிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடி எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (21.07.2013) வவுனியாவில் கூடி இறுதி முடிவு எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

கப்பம் பெற முயன்றவர்கள் கைது-

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெறமுயன்ற நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் உரிமையாளரிடமே இவ்வாறு கப்பம் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பில் உரிமையாளர் கிண்ணியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்பின் குறித்த உரிமையாளர் கப்பம் கொடுப்பதற்கு இணங்கியுள்ளார். இதன்மூலமே கப்பம்பெற முயன்றவர்களை பொலீசார் சூசகமாக கைது செய்துள்ளனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 
 
பரமேஸ்வரா சந்தியிலிருந்து தோட்டாக்கள் மீட்பு- யாழ் –

பலாலி பிரதான வீதியின் பரமேஸ்வரா சந்தியில் மேற்கொள்ளப்பட்ட வீதி அகழ்வின்போது ஒருதொகை தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப் பகுதியில் வடிகான் நிர்மாணிப்பதற்காக பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோது பிற்பகல் 1மணியளவில் பொதியொன்று வெளிப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் வழங்கப்பட்டதையடுத்து கோப்பாய் பொலீசார் தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் ரி-56 ரக தோட்டாக்களும் எம்.பீ.எம்.ஜீ. ரக தோட்டாக்களும் இருந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோப்பாய் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்மஸ் தீவிற்கு அகதிப் படகு-

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா நேற்று புதிய நடைமுறையை அறிவித்ததைத் தொடர்ந்து, முதலாவது அகதிப் படகு கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது.  அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் க்ளேயர் இதனைக் கூறியுள்ளார்.  81 அகதிகளையும், 2 மாலுமிகளையும் கொண்ட இந்தப் படகு இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. படகில் சென்றவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சட்டவிரோதமான முறையில் படகுகள்மூலம் அவுஸ்திரேலியா செல்கின்ற அகதிகள் தொடர்பில் இன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதில் வீசா இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்தவர்களுக்கு நாட்டில் இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை அங்கத்துவத்தை கொண்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பகளுக்கு இந்த அழைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொதுநலவாய நாடுகள், ஆசிய தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தெற்காசிய வலய கண்காணிப்பு குழு என்பவற்றுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஜெனீவாவில் கடந்த மார்ச்சில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சார்பாக வாக்களித்த நாடுகளுக்கு கண்காணிப்பு பணிகளுக்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. எனினும் இத்தகவலை தேர்தல் ஆணையாளர் நிராகரித்துள்ளதுடன், தேர்தல் விடயத்தில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு கருத்தில் கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

நவுறு முகாமில் கலவரம்-

அவுஸ்திரேலியாவினால் நவுறு தீவில் நடத்தப்பட்டு வரும் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் நேற்று கலவரம் வெடித்துள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி கலகம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், முகாமின் மருத்துவ நிலையம் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இனிமேலும் அவுஸ்திரேலியாவில் மீள் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் அவர்கள் அனைவரும் பபுவா நியூகினியாவுக்கு அனுப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் நேற்று அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பு வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே இக்கலகம் இடம்பெற்றிருக்கின்றது. கலகத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஈரானியர்கள் எனவும், இலங்கைத் தமிழர்களும் இதில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
முன்னாள் புலி உறுப்பினர் கடத்தப்பட்டு சித்திரவதை-

வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பிரதீபன் என்ற நபரே இவ்வாறு கடத்தப்பட்டு கடும் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இவரைக் கடத்திய நபர்கள் நெடுங்கேணியில் உள்ள வீடொன்றினுள் வைத்து இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நெருப்பில் கம்பியை சூடாக்கி அவரின் முதுகு மற்றும் மார்புப் பகுதியில் சுட்டு காயப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

வட, கிழக்கு மாகாணங்களுக்கு புதிதாக 6 ரயில் சேவைகள்-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆறு ரயில் சேவைகளை தொடங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. 400 மில்லியன் ரூபா முதலீடு தேவையான இந்த புதிய ஆறு ரயில் சேவைகளும் அடுத்த ஏப்ரலில் அல்லது மே மாதம் தொடங்கலாம் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு – ஓமந்தை, மதவாச்சி – மடு ஆகிய இரண்டு ரயில் சேவைகளும் போரின் போது அழிந்த ரயில் பாதைகளை திருத்தி அமைக்கப்பட்டவையாகும். மக்களின் பயண வசதியை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் புதிய ரயில் சேவைகள் அவசியமாகின்றன என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.

News

Posted by plotenewseditor on 19 July 2013
Posted in செய்திகள் 

இலங்கை – இந்திய பலமான உறவு தொடரும்-சர்மான் குர்சித்-

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தொடர்ந்தும் பலமான நட்புறவு காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு செயற்பாடுகளில் இந்தியா வினைத்திறனாக செயற்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் இலங்கை அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் இந்தியா அச்சமடையவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்டதூரம் சென்றுள்ள நிலையில் புதிய போட்டிகள் குறித்து இந்தியா வருத்தமடையாது என அமைச்சர் சல்மான் குர்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது-அமைச்சர் பசில்-

மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவது 1987ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரானது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை உடன்படிக்கையின் 2ன் கீழ் 10ம் சரத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதியை பலப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், மத்திய அரசின் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்புகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, முழு இலங்கைக்கும் ஒரே காவற்துறையே தவிர, இரண்டு காவற்துறை பிரவுகள் இருக்க முடியாது. இந்நிலையில், இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக காவற்துறை அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 
 
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் விஜயம்-

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இந்த பிரதிநிதிகள் குழு விஜயம் செய்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் கண்காணித்ததுடன் சமூக நல்லிணக்கம் தொடர்பிலான விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர். இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய மாநாட்டை கெவின் ரட் புறக்கணிக்க வலியுறுத்தல்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாட்டை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின் ரட்டிடம் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கத்தை கருத்திற் கொண்டு கெவின் ரட் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எலெக்ஸ் வார்ட் தெரிவித்துள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள கெவின் ரட் எடுக்கும் தீர்மானங்கள் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை கேளிக்கையாக்குவதாக அமைந்துவிடக் கூடாதென அவர் கூறியுள்ளார். சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது. குறிப்பாக மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளது. இப்படியான நிலையில் கொழும்பில் பொதுநலவாய மாநாட்டினை நடத்துவது, இலங்கையின் குற்றங்களை மன்னிப்பதாக அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
ஆஸி வருவோர்க்கு புகலிடம் வழங்கப்படமாட்டாது – கெவின் ரட்-

எதிர்காலத்தில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்பவர்களுக்கு புகலிடம் வழங்கப்படமாட்டாது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார். படகுமூலம் வருகை தரும் அனைத்து புகலிட கோரிக்கையாளர்களும் பப்புவா நியுகினியா தீவுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புகலிடம் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகளை அறிவித்த போதே அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு இல்லை-

வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் வடமாகாண சபை தேர்தலை கண்காணிக்காது என்றும் அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலே தூதுக்குழுவின் தலைவர் ஜீன் லம்பட் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைத்தேர்தல் நடத்துவதையிட்டு சந்தோஷமடைகின்றோம். அங்கு நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பாகும். ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தல்களை மட்டுமே கண்காணிக்கும். எனினும், வடக்கு தேர்தலை கண்காணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 
 
வடக்கில் பிறப்புச் சான்றிதழ்பெற 2236பேர் விண்ணப்பம்-

வட மாகாணத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவையில் கடந்த ஆறு நாட்களில் 2236 பேர் பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனர். கபே இயக்கம், இலங்கை மனித உரிமைகள் கேந்திரம், வட மாகாண அனைத்து பிரதேச செயலாளர் அலுவலகங்கள் என்பவற்றின் ஒத்துழைப்பில் இந்நடமாடும் சேவை இடம்பெறுகிறது. கிளிநொச்சி, வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களை முன்னிலைப்படுத்தி இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதிவரை கிளிநொச்சி -கரச்சி பிரதேச செயலர் வலயத்திற்குள் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் 1584 பேர் பிறப்புச் சான்றிதழுக்காக விண்ணப்பித்ததுடன், ஜூலை 16 தொடக்கம் 18வரை யாழ். மாவட்டத்தில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் இதுவரை 649 பேர் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளனர். பிறப்பு அத்தாட்சி பத்திரம் இன்றி இப்பிரதேசங்களில் பலர் நீண்டகாலமாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தப்படாததால் இந்நிலை தோன்றியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிறப்புச் சான்றிழ் இன்றி அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாதிருந்த இம்மக்களுக்கு இதுவரை காலமும் வாக்குரிமையும் இல்லாதிருந்ததாக கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனால் இத்திட்டத்தை எதிர்காலத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

News

Posted by plotenewseditor on 18 July 2013
Posted in செய்திகள் 

தேர்தல்கள் தொடர்பில் சுற்றுநிரூபம்-

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியாவினால் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை, திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கான விசேட சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்கள் நிறைவடையும் வரையில், அரச அதிகாரிகளின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பதவியளிப்புகள் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ள அதிகாரங்களின் கீழ் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தப்படுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கை அகதிகள் விடயத்தில் ஆஸி கடும் தீர்மானம்-

இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்வரும் வாரம் அவுஸ்திரேலியா கடுமையான தீர்மானம் ஒன்றை அறிவிக்கவிருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கெவின் ரட் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நீண்டகாலமாக காணப்படுகிற அகதிகளின் நெருக்கடி குறித்த துரித தீர்மானம் ஒன்றை அமுலாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏற்கனவே தொழில்கட்சி இவ்விடயத்தில் மந்தமாக செயற்பட்டு வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த வாரம் அவர் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில் கடுமையான தீர்மானம் ஒன்றை அறிவிக்கவுள்ளார். 
 
தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வகட்சிக் குழு-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சர்வகட்சிக் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளை உள்ளடக்கிய  குழுவொன்றை நியமிக்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மாகாண சபைத் தேர்தலின்போது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து சர்வகட்சிக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் சர்வக்கட்சி குழு நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 
 
இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபட பரிசீலனை-

இணைத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்த நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுகிற காணிகளின் வரைபடங்களை பரிசீலிப்பதுடன் ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் அவற்றின் பிரதிகளை பெற்றுக்கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி அளவையியலாளர் பீ.எப்.பி.உதயகாந்த் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். றறற.ளரசஎநல.பழஎ.டம என்ற இணையத்தள முகவரி ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்க முடியும் என்றும் நில அளவையியலாளர் திணைக்களம் குறிப்பி;ட்டுள்ளது. 
 
அடுத்தவாரத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க பவ்ரல் நடவடிக்கை-

வடமாகாணத்தில், அடுத்த மாதம்முதல் தங்களின் உத்தியோகபூர்வ தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. அதன் வடமாகாண திட்டப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் இதனைத் கூறியுள்ளார். இதன்படி பவ்ரல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
 
தமிழகத்தில் இருந்து கைதிகள் பறிமாற்றம்-

தமிழகத்தில் இருந்து 11 சிறைக்கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர். கைதிகள் பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்களை கைமாற்ற அனைத்து சட்ட ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக எம்.எம்.கே. தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். குறித்த சிறைக்கைதிகளில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்றும் அவர்கள் இன்னோரன்ன உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய கைதிகள் பறிமாற்ற ஒப்பந்தம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜுன் 9 திகதி கைச்சாத்திடப்பட்டது. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து 20 கைதிகள் கைமாற்றப்பட்டனர்.