Header image alt text

தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.  ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பதற்கு தீர்மானித்தால் அவர்கள் செய்வது ஒரு சிறந்த முடிவாக அமையும். மாறாக வட மாகாண முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
இதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விடுத்து ஆளும் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது. அவ்வாறு ஆளும் கட்சியினதும் தமிழ்க் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் மட்டும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்படமாட்டாது. தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும். அந்த வகையில் அவ்வாறான தீர்வுக்கான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாண சபை என்ற முறையில் வட மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். அது வழமையான விடயமாகும். நாட்டின் ஏனைய மாகாண சபைகளுடனும் ஜனாதிபதி அவ்வாறான பேச்சுக்களை நடத்திவருகின்றார். அதேபோன்று வட மாகாண சபையுடனும் பேச்சு நடத்துவார் என்றார்.

அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் முயற்சி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார

அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். இதனை அரசாங்கம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட்டமைப்பின் இம் முயற்சி நிறைவேறினால் ஆளுநரின் அதிகாரங்கள் சவாலுக்கு உட்படுத்தும் நிலை உருவாகும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது. மாகாண சபையொன்றின் முதலமைச்சர் ஒருவர் ஆளுநரின் முன்னிலையிலேயே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். ஏனென்றால் மாகாண சபைகளின் அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநரே நியமிக்கப்படுகின்றார். இதுதான் இலங்கையின் மாகாண சபைகளின் சட்டமாகும். ஜனாதிபதியின் முன்னிலையிலும் சத்தியப் பிரமாணம் செய்யலாம். ஆனால் ஆளுநரின் முன்னிலையிலேயே இதனைச் செய்வதே சிறந்ததாகும். இவ்வாறானதோர் நிலையில் வடகிழக்கு மாகாண ஆளுநரின் அதிகாரங்களை சட்டத்தின் சவாலுக்குட்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரான விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய முயற்சிக்கின்றார். தற்போதைய ஆளுநர் இராணுவ அதிகாரியென்ற கூட்டமைப்பின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனென்றால் தற்போது அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஆளுநரின் முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்வதை நிராகரித்தால், ஆளுநர் அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். அவர்களும் அழைப்பை நிராகரித்தால் வடமாகாண சபையை கலைத்து விடுமாறு ஆளுநரால் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்ய முடியும். இவ்வாறு குழப்பகரமான சூழலை ஏற்படுத்தி சர்வதேசத்தின் தலையீட்டை அதிகரிக்கச் செய்வதே கூட்டமைப்பின் திட்டமாகும். அரசுக்கு எதிராக சர்வதேசத்தினாலும் கூட்டமைப்பினாலும் நெருக்கடிகள் ஏப்ரல் மாதமளவில் உச்சக்கட்டத்தை அடையும். இதன்போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டங்களையும் சதித் திட்டங்களையும் உத்வேகப்படுத்தும். இதற்கான முதலாவது வேட்டே ஜனாதிபதி முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென்பதாகும் என்றார்.

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு இலங்கை ஜனாதிபதி அளித்துள்ள பேட்டி

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோர முடியாது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். சிறிய நாடான இலங்கையை சில நாடுகள் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்த அவர் ‘இலங்கையை கொடுமைப்படுத்துவதை சில நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இது மிகச் சிறிய நாடு’ எனக் குறிப்பிட்டார்.
‘ஒரு சம்பவம் நடந்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது விரல்கள் நீட்டப்படுகின்றன. ஆனால், அதேபோன்ற சம்பவம் மேற்கு நாடுகளில் நடந்தால் அது கவனிக்கப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். நவநீதம்பிள்ளை எப்போதுமே தங்கள் மீது வருத்தத்துடன் இருப்பவர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைப் பயணத்தின் போது அரசாங்க உறுப்பினர்கள் தன்னை இலக்கு வைத்து அறிக்கைகளை வெளியிட்டதாக நவநீதம்பிள்ளை கவலை எழுப்பியுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜனநாயக நடைமுறையில் எவரும் எதையும் கூறும் உரிமையுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தனது வாய்மூல அறிக்கையில் நவநீதம்பிள்ளை எழுப்பியுள்ள பல கவலைகள் குறித்து கொழும்பில் தன்னைச் சந்தித்த போது அவர் எழுப்பவில்லை என்றும் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச அவரது எந்தக் கவலை குறித்து விசாரணை நடத்துவதானாலும் அதற்கு ஆதாரங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் இராணுவத்தை நிலை நிறுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி வடக்கில் உள்ள துருப்புகள் தொடர்பாக சில குழுக்கள் வெளியிடும் எண்ணிக்கை தான் பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார

வடமாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனின் பதவிப் பிரமாணம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் இது குறித்து அடுத்த ஓரிரு தினங்களுக்கிடையில் தீர்மானிக்கப்படும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்
வடமாகாண சபையின் முதலமைச்சராக திரு .விக்னேஸ்வரன் அவர்களை   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக தெரிவு செய்து கட்சிச் செயலாளர் திரு. மாவை சேனாதிராஜா ஊடாக மாகாண ஆளுநருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் நாடு திரும்பியவுடன், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆளுநர் தெரியப்படுத்தியதும். பதவிப் பிரமாணம் செய்வதற்கான அழைப்பு திரு.விக்னேஸ்வரனுக்கு அனுப்பப்படும்.
இதேவேளையில், பதவிப் பிரமாண ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர், முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. விக்னேஸ்வரனை அடுத்த வாரத்தில் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
இதேவேளையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாருக்கு முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் செயற்பாடுகளில் செயற்திறன் இல்லை – பான் கி மூன்-

பாரியளவிலான மனித உரிமை மீறல்களை தடுத்தல் மற்றும் நிறுத்துவதற்கு உறுப்பு நாடுகளின் இயலாமை மோசமான பிரதிபலன்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பாரியளவிலான மனித உரிமை மீறல்களை தடுத்தல் மற்றும் நிறுத்துவதற்கு உறுப்பு நாடுகளின் இயலாமை மோசமான பிரதிபலன்களை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வுகளின்மூலம் ஒரு விடயம் புலனாகியுள்ளது. இலங்கையின் செயற்பாடுகளில் செயற்திறன் இல்லை என்பது புலனாகியுள்ளது. உறுப்பு நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்காக, சில நாடுகள் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில்லை. அதனால் நிறைவேற்றவுள்ள விடயங்களை பூர்த்தி செய்து கொள்வதற்கு முடியாமல் செல்கின்றமை துரதிஷ்டவசமான சம்பவமாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் அதிகாரப் பகிர்விற்கான மற்றுமொரு பாதை-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது இலங்கை  தொடர்பிலான வாய்மூல அறிக்கை நேற்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் ஆணையாளர், ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதால், அவருக்குப் பதிலாக பிரதி ஆணையாளர் பிளாவ்யா பென்சியேரி இந்த வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் உரையாற்றுகையில், செப்டம்பர் 21ஆம் திகதி வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டமையை ஆணையாளர் வரவேற்கின்றார். அதிகாரப்பகிர்விற்கான மற்றுமொரு பாதையாக இது அமையும் என ஆணையாளர் எண்ணுகின்றார். புதிதாகவோ அல்லது முழுமையாகவோ மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணைகளுக்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள விதம் தொடர்பில், துரதிர்ஷ்டவசமாக ஆணையாளரால் அவதானிக்க முடியவில்லை. தேசிய ரீதியான செயற்பாடொன்றை முன்னெடுப்பதற்காக இதிலிருந்து 2014ஆம் ஆண்டு மார்ச்மாதம் வரையான காலப்பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் இலங்கை அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எழுத்துமூலம் முறையான அறிக்கையொன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இந்த செயற்பாடுகளின்போது மனித உரிமை மீறல்கள் குறித்து  குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னேற்றம் காணப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணையொன்றை மேற்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஜனாதிபதி – ஐ.நா செயலாளருக்கிடையே சந்திப்பு-

ஐ.நா செயலர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  ஐ.நா பொதுச் சபையின் 68வது பருவகால கூட்டத்தொடரின் அமர்வின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. போருக்கு பின்னரான இலங்கையின் நிலவரங்கள், அண்மையில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர, இலங்கையும், ஐ.நா சபையும் இணைந்து பணியாற்றக் கூடிய வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், பான் கீ மூனும் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை, ஐ.நா பொதுச் சபையின் 68 ஆவது பருவகால கூட்டத்தொடரிலும் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார்.

தேர்தலுக்கு பின்னரும் ஆதரவாளர்கள் பாதிப்பு-

வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதி முதல் பெறுபேறுகள் வெளியான பின்னரும் தமது உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பின்னரான நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோதே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நேற்று முன் தினமும் கூட்டமைப்பு ஆதரவாளர்களை அச்சுறுத்தும் வகையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். இந்நிலையில், வடமாகாண சபை பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில் புதிய நிர்வாக அதனை கையேற்க வேண்டிய ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தல்-

13வது அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு தேர்தல் சுமூகமாக இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கின்றது. வடக்கு தேர்தல் நடத்தியுள்ளமையானது, இலங்கை சர்வதேசத்திற்கு அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றியமையாக அமைந்துள்ளது. அந்துடன், இத்தேர்தலில் மக்கள் அதிகளவில் பங்குகொண்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதன்மூலம் வடக்கு மக்களின் அபிலாஷைகளை ஓரளவு பூர்த்திசெய்வதாக அமையும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மல்லாகம் பகுதியில் கைக்குண்டு வீச்சு-

யாழ் மல்லாகம் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பாரிய இழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. மல்லாகம் மத்தியில் உள்ள அம்பனாக்கடவை வீதியென அழைக்கப்படும் சேச் வீதியில் உள்ள சுவாமி ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் மற்றும் நூலகக் கட்டிடத்திற்கு அருகாமையில் கைக்குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது. இதன்போது சனசமூக நிலையத்தின் கட்டிடச்சுவர் மற்றும் அருகில் உள்ள வீட்டின் கதவு, சுவர் என்பவற்றில் குண்டுச் சிதறல்கள் பறந்துள்ளதுடன் சேதமும் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவாகள் கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சனசமூக நிலைய முன்றலில் இரவு வேளையில் இளைஞாகள் அமர்ந்து கதைப்பதாகவும் அவர்களை இலக்கு வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வு விண்ணப்பங்கள் நிராகரிப்பு-

கிழக்கு மாகாணத்தில் பதவி உயர்விற்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பாடநெறியை பூர்த்திசெய்து ஆசிரியர் நியமனம் பெற்றவர்களின் பதவியுயர்விற்கான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ நிசாம் கூறியுள்ளார். பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் மாகாண கல்வி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்று காரணமாகவே ஆசிரியர் பதவியுயர்விற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தால் வழங்கப்பட்ட டிப்ளோமா சான்றிதழ், பட்டப்படிப்புக்கு சமநிலை ஆகாது என்பதை மேற்கோள்காட்டி மாகாண கல்வி அமைச்சுக்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சல்மன் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய ஏற்பாடு-

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் அடுத்த மாதமளவில் இலங்கை வரவுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இலங்கைவரும் முதல் விஜயம் இதுவாகும். அத்துடன், இலங்கையின் சிக்கலுக்குள்ளான நிலையில் இருந்து வடக்கு தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்திய ராஜதந்திரி ஒருவர் இலங்கை வருவதும் இதுவே முதல்முறையாகும். சமல்மன் குர்ஷித் எதிர்வரும 7ஆம் 8ஆம் திகதிகளில் இலங்கை வருவாரென கூறப்பட்டுள்ள நிலையில், அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட உயர் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்த நடத்தவுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு-

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 26.1 வீதத்தால் அதிகரித்துள்ளதென இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 79,256 ஆக இருந்தது. அத்தொகை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 100,224 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுவரையில் 711,446 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3 வீத அதிகரிப்பாகும். இந்தியா, ஜேர்மனி, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு ஒவ்வொரு மாதமும் அதிகரித்துள்ளது என அபிவிருத்தி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தலாம் – தேர்தல் ஆணையாளர்-

புத்தளம் சென்ற். அன்ருஸ் கல்லூரியில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள் நேற்று மீட்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு உரையாற்றும்போதே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  இதேவேளை, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மீண்டும் தேர்தல் நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரமே புத்தளத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், ராகவன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக சங்கையா ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான இரண்டு போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்த காரணத்தினால் இது தொடர்பாக உடனடியாக முடிவெதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளர் கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு இருவரைத் தெரிவுசெய்து பரிந்துரைக்குமாறு அறிவிக்கும்போது இதுபற்றி தீர்மானிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதுபோல் முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய நான்கு அமைச்சர்கள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பிலும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சிறுபான்மையினர் சமமாக மதிக்கப்படல் வேண்டும்- பா.சிதம்பரம்-

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தரத் தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுத் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். மாகாணங்களுக்கான அதிகபட்ச சுயாட்சி, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையினர் சமமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கான சமஉரிமை இதன்மூலம் கிடைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தாயகத்தில் தமிழர்களின் பாராம்பரிய உரிமைகள் ஏற்றுகொள்ளப்படுவதுடன் நாட்டின் ஆட்சியில் போதுமான பங்குபற்றுதலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த வெற்றியின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளதாகவும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

படகு அகதிகள் தொடர்பில் தகவல் வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலியா-

அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்களை இனிமேல் வழங்கப்போவதில்லை என அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின், விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால், படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டது ஆகவே தேவையேற்படும்போது மாத்திரம் சட்டவிரோத படகு அகதிகள் தொடர்பான தகவல்களை வழங்கவிருக்கிறோமென மொரிசன் கூறியுள்ளார் இதேவேளை கடந்த 12 மாதங்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு 400 படகுகளில் 45ஆயிரம் பேர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு நிர்வாகத்துக்கு அரசு ஆதரவு தரவேண்டும் -அமெரிக்கா வலியுறுத்தல்-

வடக்கில் மாகாண சபைமூலம் தெரிவாகியுள்ள புதிய குடியியல் நிர்வாகத்திற்கு இலங்கை அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தாமே தெரிவுசெய்துள்ளனர். எனவே, இலங்கையரசு வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திற்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜென் சாக்கி கோரிக்கை விடுத்துள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் மூன்று மாகாணசபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திமுடித்தமைக்கு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா நன்றி கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கால தாமதம்-

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் தொடர்ந்தும் கால தாமதம் நிலவி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை சில ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளது கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக இரட்டைக் குடியுரிமை வழங்குதல் குறித்த உத்தேச சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி சில ஆண்டுகள் கடந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றமையே கால தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என சூலானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நாவில் உரை- ஐக்கிய நாடுகள் சபையின் 62வது பொதுச் சபை மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் ஆறாவது தடவையாக இம்முறை ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் முதலாவதாக உரையாற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து இம்முறை ஆறாவது தடவையாக அவர் இன்றைதினம் உரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவாரென கூறப்படுகின்றது.

வட மாகாண முதலமைச்சராக சிவி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு-

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவுசெய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரு.சிவி.விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவுசெய்தார்கள். இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.