பருத்தித்துறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

யாழ். பருத்தித்துறை மாலுசந்திப் பகுதியில் நேற்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. பிரதேச சபைத் தலைவர் வியாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலைகளில் மும்மொழி சங்கங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை-

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மும்மொழி சங்கங்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய மொழிகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. பாடசாலைகளுக்குள் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதன் நோக்கமென ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மும்மொழி பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பாடசாலைகளில் இந்த சங்கங்கள் முன்னெடுக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வித் துறைசார் பல்வேறு பிரிவினருடனும் கலந்துரையாடி, இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மொழிகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா பி.பி.சி செய்தியாளரிடம் பயங்கரவாத புலனாய்வினர் விசாரணை-

லண்டன் பி.பி.சி  தமிழோசையின் வவுனியா மாவட்ட செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் தலைமையகத்தில் சுமார் 3மணிநேரம் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. செய்தியாளர் பொ.மாணிக்கவாசகத்திற்கு வவுனியா சிறைச்சாலையிலிருந்து  வந்த தொலைபேசி அழைப்புக்கள் குறித்தே விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு செய்தியாளர் என்ற வகையில், பல ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து, இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வருவது சகஜம் என்று மாணிக்கவாசகம் விசாரணை மேற்கொண்டிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சுவிஸின் தமிழர்களை நாடுகடத்தும் திட்டம் இடைநிறுத்தம்-

சுவிஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதன் காரணமாக நாடுகடத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், கைதான தமிழர்களின் நிலைகுறித்து அறியும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும் சுவிஸ் சமஸ்டி குடியேற்றப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் மேலும் கூறியுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு-

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலைமை தொடர்பில் சமுர்த்தி பணிப்பாளருக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அரச சேவையுடன் தொடர்புடைய பட்டதாரிகள், கல்வி சேவையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.