Header image alt text

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் – தர்மலிங்கம் சித்தார்த்தன்.

Sithar ploteஎதிர்காலம் பற்றிய எண்ணங்கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

 தினக்குரல் நாளிதழின் வட மாகாணப் பதிப்பில், 18.09.2013 அன்று வெளியாகிய செவ்வி   (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெறவிருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக, ‘வீடு’ சின்னத்தின் கீழ், ’15’ குறியீட்டு இலக்கத்தில்; போட்டியிடுகின்றார்.)

தமிழ்த் தேசிய அரசியல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கான பயணத்தில் நிலைகொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு புறம் இலங்கை அரசின் மீதான ஜக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பிறிதொரு புறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றவாறன பிராந்திய அழுத்தமும் அதிகரித்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில், இவற்றைச் செவிமடுக்க வேண்டிய இக்கட்டு நிலையில் ஆளும் மகிந்த அரசாங்கம் சிக்குண்டிருக்கின்றது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இத்தகையதொரு முக்கியமான கட்டத்தில்தான் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. அதில் நீங்கள் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகின்றீர்கள். உங்களுக்கும் ஏனைய வேட்பாளர்களும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. நீங்கள் இலங்கையில் ஒரு மாகாண சபை முறைமை தோன்றுவதற்கான அடிப்படையை வழங்கிய திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட ஒருவர். திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர்களில் நீங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தான், இன்றும் அரசியலில் (யுஉவiஎந pழடவைiஉள) இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்வாறான அனுபவத்துடன் இன்றைய வடக்குத் தேர்தலின் முக்கியத்துவத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? Read more

தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்- மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை தேர்தல்கள் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளுக்காக 0112 877073 என்ற தொலைபேசி இலக்கத்தையும், மாத்தளை மாவட்டத்திற்கு என 0112 877074       என்ற இலக்கத்தையும், நுவரெலியா மாவட்டத்திற்கு என 0112 877075 என்ற இலக்கத்தையும் தேர்தல்கள் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. கண்டி மாவட்டத்திற்காக 0112 877047 என்ற தொலைநகல் இலக்கமும், மாத்தளை மாவட்டத்திற்காக 0112 877050 என்ற இலக்கமும், நுவரெலியா மாவட்டத்திற்காக 0112 877051 என்ற இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்திற்கான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காகவும் தேர்தல்கள் செயலகம் தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய யாழ் மாவட்டத்திற்கு 0112 877076 என்ற இலக்கமும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு   0112 877078  என்ற இலக்கமும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு  0112 877081 என்ற இலக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வட மாகாணத்திலிருந்து முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877053, 0112 877054, 0112 877056 மற்றும் 0112 877061 ஆகிய தொலைநகல் இலக்கங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877065  என்ற இலக்கமும், புத்தளம் மாவட்ட முறைபாடுகளை தெரிவிப்பதற்காக 0112 877069  என்ற இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலிருந்து தொலைநகல் மூலம் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877041  மற்றும்  0112 877042  தொலைநகல் இலக்கங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்- மாகாணசபைத் தேர்தலில் பெண்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக வட மாகாண கண்காணிப்புக்குழு புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல் வன்முறைகள், தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம் என்ற தொனிப்பொருளில் விசேட அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புடன் தொடர்புகொண்டு பெண் வேட்பாளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். முறைப்பாடுகளை மேற்கொள்ள 077 7298387, 077 3442895, 077 3153323 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும். தொலைநகல் ஊடாக 021 2224398 இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என வட மாகாண கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

534 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு– மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 534 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த முறைப்பாடுகளில் அரச சொத்துக்களை பயன்படுத்தல், சட்டவிரோத நியமனங்கள், இராணுவ பொலிஸ் தலையீடுகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 483 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 51 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் மத்திய மாகாணத்திலேயே 251 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்-தேர்தல் ஆணையாளர்- உரிய வாக்காளர் அட்டை இன்றியும் வாக்காளர்கள் தமது வாக்கினை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு மத்திய நிலையத்திற்குச் சென்று தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகங்களில் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாளை வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணையாளர் கூறியுள்hர்.

திருகோணமலை மாவட்ட செயலருக்கு அழைப்பாணை– திருகோணமலை மாவட்ட செயலாளரை மன்றில் ஆஜராகுமாறு குச்சவெளி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. புல்மோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நில அளவைக்கு எதிரான மனு இன்று திருமலை நீதவானுமான எஸ்.சசிதரன் முன்னிலையில் குச்சவெளி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பூஜாபூமி மற்றும் தொல்பொருள் என்ற போர்வையில் காணிகளை அளவையிடும் கட்டளையை பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர். எனினும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காமையால் திருமலை மாவட்ட செயலாளர் மேஜர்ஜெனரல் டி.ஆர்.டி.சில்வா மற்றும் குச்சவெளி பிரதேச செயலர் உமாமகேஸ்வரன் ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த காலப் பகுதியில் எந்தவொரு நிலத்தினையும் ஆதாரங்கள் சமர்ப்பிக்காமல் அளவைக்கான அனுமதியை வழங்க முடியாது எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ் மாணவன் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்பு- கைகள் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனை மீட்டுள்ள கொழும்பு மிரிஹான பொலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். கனடாவிற்கு விஸா பெறவென யாழ். நெல்லியடியிலிருந்து கொழும்புக்கு வருகைதந்திருந்த மாணவனே பொலீசாரினால் மீட்கப்பட்டுள்ளார். கொழும்புக்கு வந்த அந்த மாணவனை கல்கிசைக்கு கடத்திச்சென்று மதுபானத்துடன் போதைபொருளை கலந்துகொடுத்துள்ளனர். மயக்கமடைந்த அவரை கஹதுடுவ, வெனிவெல்கொலவில் வீடொன்றுக்கு கொண்டுசென்று அங்கு கைகளை கட்டி தடுத்துவைத்துள்ளனர். அதன்பின்னர் மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்திய சந்தேகநபர்கள் அவரை விடுவிக்க வேண்டுமாயின் 25 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளனார். அதில் 50 ஆயிரம் ரூபாவை அவ்விருவரும் பெற்றுகொண்டதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் மாணவனின் உறவினர் பொலீசில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மிரிஹான பொலீசார், அந்த மாணவனை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளனர்.