Header image alt text

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு இலங்கை ஜனாதிபதி அளித்துள்ள பேட்டி

வட பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோர முடியாது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். சிறிய நாடான இலங்கையை சில நாடுகள் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்த அவர் ‘இலங்கையை கொடுமைப்படுத்துவதை சில நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இது மிகச் சிறிய நாடு’ எனக் குறிப்பிட்டார்.
‘ஒரு சம்பவம் நடந்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது விரல்கள் நீட்டப்படுகின்றன. ஆனால், அதேபோன்ற சம்பவம் மேற்கு நாடுகளில் நடந்தால் அது கவனிக்கப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். நவநீதம்பிள்ளை எப்போதுமே தங்கள் மீது வருத்தத்துடன் இருப்பவர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைப் பயணத்தின் போது அரசாங்க உறுப்பினர்கள் தன்னை இலக்கு வைத்து அறிக்கைகளை வெளியிட்டதாக நவநீதம்பிள்ளை கவலை எழுப்பியுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜனநாயக நடைமுறையில் எவரும் எதையும் கூறும் உரிமையுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தனது வாய்மூல அறிக்கையில் நவநீதம்பிள்ளை எழுப்பியுள்ள பல கவலைகள் குறித்து கொழும்பில் தன்னைச் சந்தித்த போது அவர் எழுப்பவில்லை என்றும் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச அவரது எந்தக் கவலை குறித்து விசாரணை நடத்துவதானாலும் அதற்கு ஆதாரங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் இராணுவத்தை நிலை நிறுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி வடக்கில் உள்ள துருப்புகள் தொடர்பாக சில குழுக்கள் வெளியிடும் எண்ணிக்கை தான் பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார

வடமாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனின் பதவிப் பிரமாணம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் இது குறித்து அடுத்த ஓரிரு தினங்களுக்கிடையில் தீர்மானிக்கப்படும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்
வடமாகாண சபையின் முதலமைச்சராக திரு .விக்னேஸ்வரன் அவர்களை   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக தெரிவு செய்து கட்சிச் செயலாளர் திரு. மாவை சேனாதிராஜா ஊடாக மாகாண ஆளுநருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் நாடு திரும்பியவுடன், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆளுநர் தெரியப்படுத்தியதும். பதவிப் பிரமாணம் செய்வதற்கான அழைப்பு திரு.விக்னேஸ்வரனுக்கு அனுப்பப்படும்.
இதேவேளையில், பதவிப் பிரமாண ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர், முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. விக்னேஸ்வரனை அடுத்த வாரத்தில் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
இதேவேளையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாருக்கு முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.