வட மாகாண முதலமைச்சருக்கு நியமனக் கடிதம்-

வடமாகாண முதலமைச்சர் நிலைக்கு தாம் நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் நேற்று முற்பகல் வடமாகாண ஆளுநரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தமது அலுவலகத்தில் வைத்து இந்த நியமனக் கடிதத்தை விக்கினேஸ்வரன் அவர்களிடம் கையளித்துள்ளார்.

பாலித கோஹன தெரிவு

ஐ.நா பொதுச்சபையின் 6வது குழுவான சட்டக்குழுவின் தலைவராக இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுச்சபையின் 68வது அமர்வின்போதே அவர் இந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர், ஆசியா மற்றும் பசுபிக் குழுவினரால் இந்த நிலைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் பாலித கோஹன பொதுச்சபையின் 6வது குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது இலஙகையர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவிபிள்ளையின் காலக்கெடு முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கடந்த 25ம் நாள், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும் கருத்துக்கு அமெரிக்கா பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், இலங்கை தொடர்பான, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விபரிக்கப்பட்டுள்ளதாவது:- ‘ஐ.நா மனிதஉரிமை ஆணையர் பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் நீதித்துறையில் தலையீடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த உயர் ஆணையரின் கவலைகளில், அமெரிக்காவும் பங்கு கொள்கிறது. போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றம் காணப்படாவிட்டால், அனைத்துலக விசாரணை அழைப்புகள் தொடரும் என்ற, ஐ.நா உயர் ஆணையரின் மதிப்பீட்டை அமெரிக்காவும் சுட்டிக்காட்டுகிறது.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.