Header image alt text

யாழில் பத்திரிகையாளர் மாநாடு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்றுமுற்பகல் 10.30அளவில் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய இவர்கள், தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கைக் கண்டிக்கும் நோக்கிலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலுமே நாம் நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கு பற்றவில்லை. இதனை வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமதாக இருப்பதாகவோ மாகாண சபையை பகிஸ்கரிப்பதாகவோ கருதக்கூடாது. தமிழ் மக்கள் எங்களுக்கு தந்த ஆணையை மதிக்கின்றோம். நாம் வடக்கு மாகாண சபையை தனியே மாகாண சபையாக பார்க்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவே பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளார்கள். நாம் அவர்களுக்கு எமது ஒற்றுமையை காட்ட வேண்டும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழவில் தாம் பங்குபற்றாமல் விட்டது வட மாகாணசபையைப் புறக்கணிப்பதாகவோ, வட மாகாணசபையில் பங்குபற்றாமல் விட்டதாகவோ அர்த்தமில்லை என்றும், தாம் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களாக இருப்பதுடன், மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முழுமையாக பங்குபற்றி மகாணசபையை திறம்பட செயற்பட வைப்போம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் மேலும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் காரணங்களால் சத்தியப்பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை-குணசீலன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் நேற்றைய பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளதாக ரெலோ சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவான வைத்தியக் கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமைப்பின் பதவியேற்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமைக்கு எனது மனைவி விபத்தில் சிக்கியதே காரணமென வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை. எனது மனைவி அவ்வாறான விபத்தில் சிக்கவுமில்லை. நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

இறுதிப் போரில் மக்களை காக்கும் யோசனை ஏற்கப்படவில்லை-ஐ.நா பேச்சாளர்-

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனையை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களை அறிமுகம் செய்வது குறித்து ஐ.நா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. எனினும், அரசாங்கம் இந்த யோசனையை முழுமையாக அமுல்படுத்தவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வந்ததுடன் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வலயங்களை அறிவிக்குமாறு வலியுறுத்தியும் வந்தது. போரை நிறுத்துமாறும், பாதுகாப்பு வலயங்களை உருவாக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தத் தவறியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியின்போதே பர்ஹான் ஹக் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை: திஸ்ஸ விதாரண-

தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை. மாறாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதன் மூலமே தீர்வு என்பது சாத்தியமாகும் என அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். உலகில் இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினைகள் நிலவிய நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு மேடையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்பட்டுள்ளது. தனித்து இரு தரப்புக்கள் பேச்சுநடத்தித் தீர்வு எட்டப்படுவது சாத்தியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடமராட்சி கடல் கொந்தளிப்பில் 40ற்கும் மேற்பட்ட படகுகள் சேதம்- வடமராட்சி கடலின் மணற்காட்டுபகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் நாற்பதிற்கும் மேற்பட்ட மீன்பிடிப்படகுகளும் வலைகளும் நீரினுள் அடித்து செல்லபட்டுள்ளது. இதனால் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட அப்பகுதி மக்கள் தொழிலை இழந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட படகுகள் பாவனைக்குதவாத வகையில் உள்ளது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

 நாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் ?

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) விளக்கம்.
11-10-2013, அன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. மேற்படி முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

நாம் ஏன் இத்தகையதொரு முடிவை எடுக்க நேர்ந்தது?

வடமாகாணசபை என்பது, உண்மையில் வடக்கு மக்களுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமல்ல. இது – ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இலங்கைத் தீவில் கௌரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான, ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்செல்வதற்கான, ஆரம்ப புள்ளியாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையை, அவ்வாறானதொரு நோக்கில் கையாள வேண்டும் என்பதுதான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் அத்தகையதொரு நோக்கிலிருந்து கூட்டமைப்பு விலகிச் சென்றுவிடுமோ, என்னும் அச்சம் எமக்குள் எழுந்துள்ளது. எமது மக்கள், வடமாகாணசபை தேர்தலின் போது, எமக்களித்த பேராதரவை, வெறும் கட்சி அரசியலுக்குள் முடக்கி, கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழந்துவிடக் கூடிய ஆபத்தை, நாம் உணர்கிறோம். Read more