யாழ். ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்-

IMG_4146இராணுவத்தினரால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படலாம் என யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றுபகல் இந்த ஊடகவியலாளர்கள் ஐவரும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜிடம் தமது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். முறைப்பாடு செய்ததன் பின்னர் மேற்படி ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், வலி.வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் இராணுவத்தினரால் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து நேற்று அங்கு நாம் சென்றிருந்தோம். அங்கு உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் உள்ள வீடுகளை இராணுவத்தினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி கொண்டு இருந்தார்கள். அதனை நாம் ஒளிப்படம் எடுத்தோம். அதனை அவதானித்த இராணுவத்தினர் எம்மை சுற்றிவளைத்து எம்மிடம் இருந்த ஒளிப்பட கருவி, ஒலிப்பதிவுக்கருவி என்பவற்றை பறித்து அதில் இருந்த சகலவற்றையும் அழித்தனர். அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக ஏதாவது படங்களோ செய்திகளோ ஊடகங்களில் வெளியானால் அதன் பின்னர் நடப்பதே வேறு அதன் பின்னர் நாம் இராணுவ பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என தன்னை இராணுவ பிரிகேடியர் என அறிமுகம் செய்த இராணுவ அதிகாரி மிரட்டியிருந்தார். நேற்றைய இச்சம்பவம் தொடர்பான செய்திகள், படங்கள் என்பன இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதனால் இராணுவத்தினரால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்பதனால் நாம் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேற்படி ஊடகவியலாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் மற்றும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களுடன் நேற்று கட்டுவன் பிரதேசத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.IMG_4147IMG_4124IMG_4135IMG_4137