Header image alt text

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை-கூட்டமைப்பு-

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நேற்றுமாலை யாழ். நகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை மற்றும் அதில் கலந்துகொள்ளும் நாடுகளை புறக்கணிக்கவில்லை. இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டையே எமது கட்சி புறக்கணிக்கவுள்ளது. இலங்கையின் இனப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. எனினும் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வரும் சர்வதேச தலைவர்களுடன் மாநாட்டிற்கு வெளியாக எமது கட்சி சந்தித்து கலந்துரையாடும். மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தலைவர்களுக்கு, கூட்டமைப்பு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளது என மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.

பொதுநலவாய மாநாடு; வருகைக்காக 13 நாடுகள் உறுதியளிப்பு-

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து 13 நாடுகளின் தலைவர்களே இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். அதன்படி பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என இந்தியாவில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் கூறுகின்றன. மேலும் உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. எனினும் பிரித்தானியா தலைமையிலான அரச தலைவர்கள் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கின்ற போதிலும் பொநதுநலவாய மாநாட்டில் இலங்கை அரசுமீது விமர்சனங்களையும் அழுத்தங்களையும் கொடுப்பதற்குமே கொழும்பு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அகதி முகாமில் துஸ்பிரயோகம்-

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் பாரிய பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் சுதந்திரத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவல்களை மேற்கோள்காட்டி, த கார்டியன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பலவந்த பாலியல் வன்புணர்வுகள், மற்றும் பாலியல் இம்சைகள் குறித்த முறைபாடுகள் பல பதிவாகியுள்ளன. 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 2011ம் ஆண்டு மேமாதம் வரையில் இவ்வாறான 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் 2011ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், இது சம்பந்தமாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்திய 200ற்கும் மேற்பட்டோர் கைது-

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்றையதினம் தமிழகம் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகரகம் மற்றும் மத்திய அரசாங்க அலுவலகங்களை அவர்கள் முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளில் இருந்து இலங்கையை நீக்குமாறு அவர்கள் இதன்போது வலியுறுத்தினர். அத்துடன் இலங்கையை தொடர்ந்தும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடாக கொண்டுள்ளமைக்கு எதிராக, பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்கக் கூடாது-மலேசிய எதிர்க்கட்சி வலியுறுத்தல்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் மலேசியா கலந்து கொள்ளக்கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற்கொண்டு மலேசிய அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி இந்த கோரிக்கையை விடுத்தள்ளது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம் இன்றுமாலை யாழ். நகரில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சரவணபவன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிங்கம் மற்றும் ஹென்ரி மகேந்திரன், ராகவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தின்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி; விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொதுநலவாய நாடுகளின் மகாநாடு சம்பந்தமான விடயங்கள் தொடர்பிலும் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தினை கொழும்பில் நடத்துவதென்றும் இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

தனது சம்பளத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார் திரு.சித்தார்த்தன் .

Sithar ploteவட மாகாணசபையின் கன்னி அமர்வு வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இன்றுகாலை ஆரம்பமானது. இதன்போது தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன. இதில் தவிசாளராக திரு. கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக திரு. அன்ரனி ஜெகநாதனும் தெரிவுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த மாகாண சபைக்கூடான தனது சம்பளத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவுள்ளதாகவும் அதுபோல் மற்றைய அங்கத்தவர்களும் மனம்வைத்து உதவினால் சுமார் 60 குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டுசெல்லக் கூடியதாய் இருக்குமென்றும் குறிப்பிட்டார்.

வட மாகாண சபையின் கன்னி அமர்வு-

யாழ். கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாணசபையின் புதிய கட்டிடம் மற்றும் பெயர்ப்பலகையை வட மாகாண முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இன்றுகாலை 8மணியளவில் வைபவரீதியாக திறந்து வைத்துள்ளனர். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து வடக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இன்றுகாலை 9.30 மணிக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. இதன்போது தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன. அதில் தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து தவிசாளர் தலைமையில் முதலாவது அமர்வு 12மணிக்கு நிறைவடைய இரண்டாவது அமர்வு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தனிமைப்படுத்த முடியாது-பாரதீய ஜனதா கட்சி-

எந்த விசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது என தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டிவரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். இந்நிலையில் தலைநகர் டெல்லியிலிருந்து இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் வெளியிட்டுள்ள கருத்து கண்டனத்துக்குரியது. எல்லா முனையிலும் தோற்றுப்போன மத்திய அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் அவர் பேசியிருக்கிறார். எந்த விசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது. பொருளாதாரம், மனித வளம், அறிவியல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் நம்மை சுற்றியே மற்ற நாடுகள் உள்ளன. சீனா, பாகிஸ்தானை நினைத்து மத்திய அரசு பயப்படுகிறது. இதனால் இலங்கை சீனாவின் தளமாக மாறி வருவதை மத்திய அரசு உணர வேண்டும். வெளிநாட்டு கொள்கையில் துணிச்சலும், சாதுர்யமும் வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டுகளில் தொழில் புரிவோர் நலன்கருதி புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்-

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஏதேனும் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கியிருப்பின், அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் கேட்டுள்ளது. 24 மணித்தியாலமும் இயங்குகின்ற தமது அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அத்தகைய நிலைமைகளை அறிவிக்க முடியும் என பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 0112 879900 அல்லது 0112 879902 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அத்தகைய நிலைமைகளை தெரிவிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை-பாதுகாப்பு செயலர்-

பொலீசாருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் கூறியுள்ளார். ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் போல, வடமாகாண முதலமைச்சருக்கும் காவற்துறையுடன் இணைந்து செயற்பட முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் வடக்கிற்கு விஜயம்-

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வடக்கிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டாலீயே வடக்கிற்கு வருகை தரவுள்ளார். மேலும் இவர் மன்னார் வவுனியா முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தவாரம் வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை டாலீ நேரில் பார்வையிடவுள்ளதுடன் இவ்வாறான உதவித் திட்டங்களில் நன்மை பெற்றுக் கொண்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடவும் உள்ளார்.

மானிப்பாய், போறான்தோட்டம் பகுதியில் மக்கள் சந்திப்பு-

Captureயாழ்.மானிப்பாய் போறான்தோட்டம் வைரவர்கோவில் முன்றலில் நேற்றுமாலை பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. மருதடி விநாயகர் சனசமூகநிலைய தலைவர் ஆ.வொஷிங்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான பெண்களும், ஆண்களுமாக கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கினர். இதன்போது மக்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்துக் கூறினார்கள். தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட அளவிற்குள் செய்யக்கூடிய விடயங்களை அவர்களுக்குச் செய்வதாக வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தர்ர்த்தன் உறுதியளித்தார். அத்துடன் பிரதேச சபையின் விடயங்கள் சம்பந்தமாக பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்கள் எடுத்துக் கூறினார். அத்துடன் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் மாகாணசபையின் அதிகாரங்கள் சம்பந்தமாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்களுக்கு விளக்கிக் கூறினார்.

பாதுகாப்பு செயலரின் பேச்சு நகைப்பிற்குரியது-சுரேஷ் எம்.பி.-

பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும். எனவே இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய கல்லறைகளை இடிக்க முடியாது. இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காவும் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டியது அவசியமானதாகும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து படையினரை அகற்றுமாறு கோர முடியாது-பாதுகாப்புச் செயலர்-

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு யாரும் கோரமுடியாது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கினார்கள் என்று கருதமுடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதவ வேண்டும். வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை நாம் படிப்படியாக விடுவித்து வருகின்றோம். யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் குறுகிய காலத்திற்குள் இத்தகைய பணியினை நாம் மேற்கொண்டுள்ளோம். இது குறித்து அறியாது தமிழகத்திற்கு சென்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேசுகின்றார் ஒரே இரவில் முழு இடத்தையும் நாம் விடுவித்து விட முடியாது என்று பாதுகாப்புச் செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தபோதே அவர் இவற்றை கூறியுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாதென சட்டசபையில் தீர்மானம்-

இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று கோரி, தமிழக சட்டசபையில் தீhமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த தீர்மானம் இன்றுமுற்பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்கள் நடத்தப்படவேண்டும் உட்பட்ட விடயங்கள் இந்த தீhமானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணைகளை ஏற்கமுடியாது – அமைச்சர் ஜி எல் பீரிஸ்-

எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே உள்ளக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், எனவே சர்வதேச விசாரணைக்காக யாரும் நியாயம் கூறமுடியாது என்று அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்குக்கு பயணம் செய்வேன் – கெமரோன்-

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் தாம் பங்கேற்கும்போது இலங்கையின் வட பகுதிக்கும் செல்லப்போவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனை நேற்று மியன்மாரின் எதிர்க்கட்சி தலைவி அங் சாங் சுகி லண்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் இதன்போது கருத்துரைத்த கெமரோன், பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் தாம் இலங்கைக்கு செல்வது தொடர்பிலான தீhமானத்தை நியாயப்படுத்தியுள்ளார் இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு செல்லும்போது தாம் இலங்கை அரசுடன் தீவிரமான பேச்சுக்களிலும் ஈடுபடப்போவதாக கெமரோன் குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் திருப்தியில்லை போருக்கு பின் அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் திருப்தியில்லை இப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசுடன் தெளிவான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளேன். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்துக்கு செல்லாது போனால் இவ்விடயங்கள் குறித்து யாருடனும் பேசமுடியாது என கெமரொன் கூறியுள்ளார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட அங் சாசுகி பிரதமர் கெமரோன், இலங்கை செல்லும்போது அரசுடன் மாத்திரமன்றி பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் சந்தித்து பேசவேண்டும் என்று கேட்டுகொண்டார் இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் கெமரோன், இதன்பொருட்டே தாம் போர் இடம்பெற்ற வடக்குக்கும் செல்லவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் உயர் சபை கூட்டப்பட வேண்டும்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி-

வடமாகாண சபையின் அமர்வு ஆரம்பகும் முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியின் தலைமை எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் கூட்டமைப்பின் ஒற்றுமை சிதைக்கப்படுவதுடன், மக்கள் மத்தியிலும் குழப்ப நிலை உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாண சபையில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றியை எவ்வாறு தமிழரசுக் கட்சியின் வெற்றியாக மாற்றுவது என்பதும், எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியை முன்னேற்றுவதற்கு இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையே தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சிந்தித்துச் செயற்படுகின்றார்கள். Read more

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு-

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு அடுத்த வருடம் ஜூலை மாதம் மொறீசியஸில் நடைபெறவுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனம், மொறீசியஸ் நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இது குறித்து சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல் கூறுகையில், ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இப்போதும் கல்வி, வேலை, ஆய்வு, வணிகம் போன்ற பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்காக அமெரிக்கா, வளைகுடா நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு சென்ற தமிழர்களின் வாழ்வியல் நிலை, பண்பாட்டுக் கூறுகள் போன்றவை புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் அந்த மக்கள் மத்தியில் எவ்வாறு உள்ளன என்பதை விரிவாக விவாதிக்கும் நோக்கிலும், அவற்றைப் பதிவுசெய்து ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நோக்கிலும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 2014-ஆம் ஆண்டு ஜூலை 16, 17, 18 ஆகிய திகதிகளில் மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு அறிஞர்கள் கலந்து ஆய்வுரைகள் வழங்க உள்ளனர். உலக வங்கியின் மூத்த ஆலோசகரும், யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குநருமான ஆறுமுகம் பரசுராமன் மாநாட்டு அமைப்புக் குழுவின் தலைவராக உள்ளார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஈரான், ஈராக், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதில் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டை புறக்கணிக்குமாறு ஏனைய நாடுகளிடம் கோரவில்லை-கென்யா-

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு தாம் ஏனைய ஆபிரிக்க நாடுகளிடம் கோரவில்லை என கென்யா அறிவித்துள்ளது. தமது நாடு கொழும்பு மாநாட்டை புறக்கணிக்குமாறு ஏனைய ஆபிரிக்க நாடுகளை வலியுறுத்தியதாக வெளியான செய்திதாள் தகவலை கென்யா மறுத்துள்ளது.  இதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டில் பங்கேற்ககூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலுவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோரிக்கையுடன் தங்கபாலுவும் இணைந்துள்ளார்.
 
கூட்டமைப்பின் வட மாகாண சபை பணிகள் வெள்ளியன்று ஆரம்பம்-

வடமாகான சபைக்கு தெரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது பணிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய கட்டடத்தில் உறுப்பினர்கள் தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளனர். யாழ் கைத்தடியில் நேற்றையதினம் இடம்பெற்ற கலாசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இதனை தெரித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் மலேசிய பிரதமர் பங்கேற்பு-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் மலேசியா பங்கேற்கும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா சார்பில் மாநாட்டில் பிரதமர் நஜிப் டன் ரசாக் கலந்து கொள்வார் என மலேசிய வெளிவிவகார செயலக தென்னாசிய பிரிவு உதவி செயலாளர் மசிதா அஹமட் தெரிவித்துள்ளார். 23 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நவம்பர் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் மீறல் நிலையை கருத்திற்கொண்டு மலேசியா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பல அமைப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் மாநாட்டை புறக்கணிக்காது அதில் கலந்து கொள்ள மலேசிய பிரதமர் தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்

நாட்டை மாற்றுவதற்கு நாட்டின் கல்வி முறைமையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பு புறநகர் தெஹிவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது உள்ள கல்வி முறைமையானது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க அதிபர் உறுதி-

வடமாகாணத்தில் ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் அரச நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டபோதும் வவுனியாவுக்கு அந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரச நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகள் மீது பிரதம நீதியரசர் சாடல்-

இலங்கைக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்றுத் தந்தது வெளிநாடுகள் அல்லவென பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் தீர்ப்பதன் பொருட்டு, கண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று எமது நாட்டின் அடிப்படை உரிமைகள் குறித்து பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எனினும், எமது நாட்டுக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்றுத் தந்தது வெளிநாட்டுகள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை குறித்து இந்தியா தொடர்ந்தும் கரிசனை-

ஐக்கிய இலங்கை குறித்து இந்தியா தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக இந்திய தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சிங்ஹா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அரசியல் ஸ்திரத் தன்மைக்கு இந்தியா தொடர்ந்து உதவியளிக்கும். இதன் ஊடாகவே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் இளைஞன் சவூதியில் வாகன விபத்தில் பலி-

மன்னார் பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20ஆம் திகதி சவூதி அரேபியா டமாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 28வயதான குலசிங்கம் சுரேஸ்குமார் என தெரியவந்துள்ளது. சுரேஸ்குமார் கடந்த 2006ஆம் ஆண்டு தொழில்தேடி சவூதி அரேபியா சென்றுள்ளார். அங்கு கடையொன்றிலும் சாரதியாகவும் கடமையாற்றி வந்துள்ளார். வெளிநாடு சென்று சுமார் 7 வருடங்களான நிலையில் இவர் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி நாடு திரும்பவிருந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி பகல் டமாம் நகரில் வாகன விபத்தில் சுரேஸ் குமார் உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

யாழில் குடும்பஸ்தர் குத்திக் கொலை-

யாழ். ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஒரு குழந்தையின் தந்தையான தங்கராசா சரத்பாபு (வயது  29) என்பவரே நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மதுபோதையில் மனைவியை கொடுமைப்படுத்தி வருவதாகவும், மனைவியின் தரப்பினர்களினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தமது ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நெடுங்கேணி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பங்கேற்பு-

IMG-20131022-00077வவுனியா நெடுங்கேணி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இதில் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வவுனியா வடக்கு பிரதேசத்தில் செயற்படுத்தப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், பிரதேச சபையின் நடவடிக்கைகள் பற்றியும் ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் பிரதேச சபை உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

தமிழர் பிரச்சினையில் இலங்கை ஆக்கபூர்வமாக செயற்படவில்லை-இரா.சம்பந்தன்-

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும். இந்த விவகாரத்தில் இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன், சென்னையிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து அவ்வலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை. 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தை இலங்கை அரசு முற்றிலுமாக கைவிடவில்லை. இதில் திருத்தத்தை மாற்றும் முயற்சி முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆலோசித்து சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு எதுவுமற்ற நிலையில் சன் சீ கப்பல் அகதிகள்-

சன் சீ கப்பலில் கனடா சென்றடைந்த இலங்கை தமிழ் அகதிகளின் அவலங்களுக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை என கனடாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கப்பலில் பயணம் செய்த மேரி கிறிஸ்துராஜ் என்ற பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கிய அதிகாரிகள், அவரது கணவருக்கு அகதி அந்தஸ்து மறுத்துள்ளனர். இதனால் குணா கிறிஸ்துராஜ் என்ற குறித்த நபர் நாடு கடத்தப்பட உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சன் சீ கப்பலில், 492 இலங்கை அகதிகள் கனடாவைச் சென்றடைந்தனர். இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை தமிழ் அகதிகளின் மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர்களின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை செல்ல வேண்டாம் என பிரித்தானிய தொழில்கட்சி அழுத்தம்

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை உரிய நடவடிக்கை எடுக்காததை கருத்திற் கொண்டு பிரித்தானிய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிற் கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் எலக்சேன்டர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டு பிரித்தானிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டிற்குச் செல்லக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். டேவின் கெமரூன் தனக்கு பதிலாக சிறிய அமைச்சர் ஒருவரை அனுப்பினால் தொழிற்கட்சி அவருக்கு ஆதரவு வழங்கும். கனடா இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறது. இந்தியா இது குறித்து கவனம் செலுத்தி வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க தடை கோரி வழக்குத் தாக்கல்-

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பேராசிரியை சரஸ்வதி கோவிந்தராஜன் என்பவர் இந்த பொதுநல மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். மனுவில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் இது குறித்து தனக்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரசாயன வாயு கசிவு: 70 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி-

கொழும்பு பிலியந்தலை பகுதியில் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியான இரசாயன வாயுவின் காரணமாக தொழிற்சாலைக்கு அருகில் வசித்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் களுபோவில பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பிலியந்தலை பொலிஸார் விசாரணைகள் நிறைபெறும் வரையில் குறித்த தொழிற்சாலை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கென்யா ஆலோசனை-

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க கென்யா ஆலோசனை செய்து வருகின்றது. இந்நிலையில், ஏனைய ஆபிரிக்க நாடுகளும் இதனை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கென்யா விடுத்து வருகின்றது. எனினும் ஏனைய ஆபிரிக்க நாடுகள் கொழும்பு மாநாட்டில் பங்குகேற்பதாக தீர்மானித்துள்ளன. கென்யாவின் ஸ்டார் என்ற இணையத்தளம் இந்த செயதியை வெளியிட்டுள்ளது. கென்யாவின் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுககு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்திலேயே கென்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர்பட்டியல் தொடர்பான ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்-

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை முறையிடுவதற்கு எதிர்வரும் 30ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. தற்போது இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராமசேவையாளர் காரியாலயம், பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், அத்துடன், மாவட்ட தேர்தல் காரியாலயங்கள் ஆகியவற்றில் தற்போது வாக்காளர் பெயர்பட்டியல்கள் திருத்தத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர் பெயர் பட்டியலில் இதுவரை தமது பெயர்கள் உள்ளடக்கப்படாதவர்கள் அதற்கான கோரிக்கையை விடுக்கவும், தகுதியானவர்கள் தமது பெயர்களை உள்ளடக்குவதற்கும், பெயர்களின் மாற்றங்கள் இருப்பின் ஆட்சேபனைகளை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களின் பொருட்டு 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கை வருவோர்க்கு ஆபத்து இருப்பதாக மனித உரிமைக்குழு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாக அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்று நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர்  கில்லியான் ட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளினால் இவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் அத்துடன் அவுஸ்திரேலியாவின் புதிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்திருத்தங்கள் அவர்களை மேலும் சிக்கல்களுக்குள் ஆழ்த்தியுள்ளது. எவ்வாறான வழிகளில் அவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தாலும் சகலரும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டியது அவசியமானது. எனினும் அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள் சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த நியதிகளுக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் 6579பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1428 பேர் சிறுவர் சிறுமியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 
 
கொழும்பில் ஹலாலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்-

பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிரான பேரணி இன்று காலை 9 மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு-06, கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இப்பேரணி ஆரம்பமாகியுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை செல்லும் இப்பேரணி அங்கு விசேட சமய வழிபாடுகளின் பின்னர் நிறைவடையவுள்ளது.

புளொட் முக்கியஸ்தர் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு விஜயம்-

sssssssssssssssssssபுளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் இன்றையதினம் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார். அவர் இந்த விஜயத்தின்போது ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் திரு. திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களையும், கல்லூரியின் நிர்வாகத்தினரையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து கல்வி செயற்பாடுகள், மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மாணவர்களின் கல்வி நிலைமைகளைக் கேட்டறிந்த அவர், எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலவச கருத்தரங்குகளை நடாத்துவதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் வறிய மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கற்றல் உபகரணங்கள் சிலவற்றையும் அவர் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்.

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி-

இந்திய இராணுவத்தால் 1987ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச் சுடரை வைத்தியசாலையின் வைத்தியர்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி பவானந்தராஜா, தாதியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம்-

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக 17 தற்காலிக ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களாக பல்கலைக்கழகத்தின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் தம்மை திடீரென பணிநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தாம் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். புதிய ஊழியர்களுக்கான நியமனம் வழங்குவதிலும் முறைகேடு இடம்பெற்றுள்ளது எனவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், இவர்கள் நாளாந்த சம்பள அடிப்படையிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும், உயர்கல்வி அமைச்சிடமிருந்து கிடைக்கும் பெயர்ப் பட்டியலுக்கு அமையவே ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மாநாட்டில் கனடா பங்கேற்க வேண்டும்-கனேடிய முன்னாள் பிரதமர்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை கனடா புறக்கணிக்கக் கூடாது என கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளை ஏனைய நாடுகள் இணைந்து பேசி தீர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கனடா பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் கனடாவின் 146 வருட ஜனநாயக பண்புகளை உள்நாட்டிலும் வெளி நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வது எவ்வாறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 1961ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய கனேடிய பிரதமர் ஜோன் டைபென்பேக்கர் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதை கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி நினைவுபடுத்தியுள்ளார். இதன் காரணமாக தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளிலிருந்து விலகி, 1990ஆம் ஆண்டு நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்து கொண்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கனடா இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் –

இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்கா இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனமும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நனோ தொழில்நுட்ப சிறப்பு மையம் என்ற பெயரில் ஜூன் 2012 இல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு ஹோமாகம பிட்டிப்பனவில் 50 ஏக்கர் காணியில் 2018.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டும் உள்ளது. இதற்காக அரசாங்கம் 1771.5 மில்லியன் ரூபாவையும் 310 மில்லியன் ரூபாவை தனியார் துறைப் பங்குதாரர்களான மாஸ் பிரன்டிக்ஸ் டயலொக் ஹேய்லிஸ் லொடிஸ்டர் மற்றும் லங்கம் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. மேலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் உலக சந்தைத் தரத்திற்கு ஏற்ப புதிய இயற்கை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளை விஸ்தரித்தல் உள்நாட்டு சர்வதேச பிரச்சினையான விவசாயம் உடல்நலம் சுகாதாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் தீர்வுகாணல் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துதல் போன்றன இவ்மையத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மக்கள் பார்வைக்கு-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள இந்தப் பாதையினை நாளைமுதல்; 24ஆம் திகதிவரை பொதுமக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினூடாக பயணிப்பதற்கான கட்டணங்கள் பற்றிய சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இவ் அதிவேகப் பாதையினூடாகச் செல்லும் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் அறிவிக்கப்படுமெனவும் இப் பாதையினூடாக பயணிப்பதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பாக வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் அமைச்சினால் அறிவூட்டப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 20நிமிட நேர இடைவேளையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லக்கூடிய அதிவேகப் பாதையினூடாக தினமும் 15ஆயிரம் வாகனங்கள் பயணிக்க முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பொன்னாவரசன்குளம் மக்கள் சந்திப்பு-

DSCF1512DSCF1510

வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வவுனிDSCF1502யா பொன்னாவரசன்குளம் பகுதிக்கு இன்றையதினம் விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைமைகளை அவதானித்துடன், அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்தும் கொண்டுள்ளார். அவர்களின் வீடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதைப் கண்ணுற்ற வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் இது விடயத்திலும், இம்மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.