Header image alt text

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு-

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை யாழ். ரில்கோ விடுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் செனற்றர் லீ ரிகியோனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண சபை அமைச்சர் ஜங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், வலி வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வட மாகாண நிலைமைகள் மற்றும் வட மாகாணசபையின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும், வட மாகாணத்தில் மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் செனற்றர் லீ ரிகியோனன் ஆகியோர் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்கள்.

தமிழ் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் ஜனன தினம்-

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் 112ஆவது ஜனன தினத்தையொட்டி யாழ். குருநகரில் அமைந்துள்ள அன்னாருடைய உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி மேற்கு பிரதேசசபை தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன், கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான விந்தன், பரஞ்சோதி ஆகியோரும் ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பரஞ்சோதி, விந்தன் ஆகியோர் அமரர் ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களின் சிறப்புப்பற்றி உரையாற்றினார்கள்.

கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசாவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது-

யாழ். வலி. வடக்கு மக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதை கண்டித்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நேற்றுக் காலைமுதல் யாழ். கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள முனியப்பர் ஆலயம் முன்பாக இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா இன்றுமாலை 4மணியுடன் தனது போராட்டத்தினை நிறைவுசெய்து கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக முத்தையாப்பிள்ளை தம்பிராசா களமிறங்கியிருந்தார்.

புதுக்குடியிருப்பில் ஆயுதங்கள் மீட்பு-

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச கிணறு ஒன்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 அடி வரையிலான ஆழமுடைய இந்தக் கிணறை நேற்று முன்தினம் இறைக்கும்போது, பாவனைக்குட்படுத்தப்படாத ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கிய பெட்டி ஒன்றும், 50மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ரவைகளும் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் குறித்த கிணற்றில் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில், இராணுவத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நேற்றுமாலை அங்கு சென்ற இராணுவத்தினர் உரப்பை ஒன்றினுள் துருப்பிடிக்காதவாறு கிறீஸ் பூசப்பட்ட  நிலையில் வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

கல்முனை மேயர் சிராஸ் இராஜினாமா-

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா கடிதத்தினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே தனது இராஜினாமா கடிதத்தினை அவர் கையளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டைபெற கால அவகாசம்

இம்முறை க.பொ.த சாஃத பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைப் பெற்றுக்கொள்ள இரண்டுவாரம் விசேட காலஅவகாசம் வழங்குவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் இரண்டு வாரத்திற்கு இந்த கால அவகாசம் வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். அநேகமான மாணவர்களுக்கு தற்போது தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பனங்கட்டிகொட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வெளி மாகாண மீனவர்களின் வருகையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மன்னார் பனங்கட்டிகொட்டு மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினால் இன்றுமுற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வெளி மாகாண மீனவர்கள் அங்கு வருகை தந்து வாடிகளை அனுமதியின்றி அமைத்து இரவுநேர மீன்பிடியில் ஈடுபடுவதுடன், வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இந்த மீனவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். சுமார் 500 மீனவர்கள் இன்றைய தொழில் நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வெளி மீனவர்கள் தமது வாடிகளை அகற்றி, அமைதியான முறையில் தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜஸ்டின் சொய்ஸா தெரிவித்துள்ளார். மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

மாநாட்டை புறக்கணிக்கும் முடிவு சரியானதே-டேஸ்மன்ட டுட்டு-

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக உலக நாடுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நெருக்கடிகளைத் தந்து அந்த நாட்டை சரியான பாதைக்குத் திரும்பச் செய்ய வேண்டும். இலங்கை தீவிரமாக செயற்பட அதற்கு அழுத்தம் கொடுக்க உதவும் என்றால் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பு செய்யும் முடிவும் சரியானதுதான் என நோபல் பரிசு வென்ற தென் ஆபிரிக்க தலைவர் டேஸ்மன்ட் டுட்டு தெரிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள டுட்டு, அங்கு  செய்தியாளர்களைச் சந்தித்தபோது பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது குறித்த விவாதம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நல்ல களமாக பொதுநலவாய மாநாடு அமையும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் தமிழ் சமுதாயத்தினரின் உரிமைகள் குறித்தும் அவர்களது மறுவாழ்வு குறித்தும் மறுசீரமைப்பு தொடர்பிலும் இங்கு விவாதிக்க முடியும் தீர்மானங்கள் போட முடியும். Read more