பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனாலும், உள்ளூர் பத்திரிகையாளர்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
யாழ் நூலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது நூலகத்துக்கு அருகே ஒரு இடத்தில் கூடியிருந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திக்க அனுமதி கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், நூலக நுழைவாயிலுக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டவில்லை. இதற்கிடையே, திடீரென அரச ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பதாதைகளுடன் நூலக நுழைவாயிலுக்கு முன்னாக கூடி கோஷமெழுப்பினார்கள்.
காணாமல்போனவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டம் நடத்தினார்கள் பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமரன் இருந்த இடத்துக்கு காணாமல் போனவர்களின் உறவினர்களும் செல்ல முயற்சித்த போது அவர்களை பொலிஸார் தடுத்துவிட்டனர். அதனால் அந்தப் பகுதியில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டது.
அந்தச் சந்தர்ப்பத்தில் பிரித்தானிய பிரதமருடன் வந்திருந்த செய்தியாளர்கள் உட்பட சிலர் வெளியே வந்து, நிலைமைகளை அவதானித்தனர். அப்படியாக வந்தவர்களிடம் காணாமல் போனவர்களின் உறவினர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதற்கிடையே பிரதமரின் வாகனத்தொடரணி அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவே அதனை மறித்து, அவரிடம் புகார் செய்ய காணாமல் போனவர்களின் உறவினர்கள் முயற்சித்தார்கள். ஆனால், அதுவும் முடியாமல் போய்விட்டது.