போர்க் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்-

மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு விசாரணை நடத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற 2ஆவது தெற்காசிய டயஸ்பரா கன்வென்ஷன் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலிளித்து பேசிய அவர், தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இந்த விடயத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் பிரச்சினையைப் பொருத்தமட்டில் எந்த நாடு, எந்த மக்கள் என்ற எல்லைகள் கிடையாது. எனவே இதில் இலங்கை அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.