நெடுங்கேணி, நயினாமடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி-
வவுனியா நெடுங்கேணி நயினாமடு ‘இணையும் கரங்கள்’ ஏற்பாடு செய்திருந்த ‘மாற்று வலுவுள்ளோர் தினம்’ இன்று நயினாமடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வுகளும், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன .
புங்குடுதீவைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து அமரத்துவம் அடைந்தவருமான மு.சொக்கலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரால் மாற்று வலுவுள்ளோருக்கு ரூபா 50,000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இதற்கு அதிரடி.கொம் இணையம் அனுசரணை வழங்கியிருந்தது.
இணையும் கரங்கள் என்கிற மாற்றுத் திறனாளிகளை கொண்டு இயங்கும் மேற்படி நிறுவனத்தின் செயற்பாட்டுக்கென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் 25,000 ரூபாவினை இந்நிகழ்வின்போது வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன்(விசு), வட மாகாணசபை உறுப்பினர்களான தியாகராசா, இந்திரராசா, புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான சந்திரகுலசிங்கம்(மோகன்), பிரதேசசபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், பிரதேசசெயலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.