ஐ.நா விசேட பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்-

mayilitti people Peyani (2) Peyaniஇலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியும், விசேட அறிக்கையாளருமான சலோகா பெயானி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றுகாலை விஜயம் செய்திருந்த பெயானி, அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து முல்லைத்தீவில் இறுதியாக மீள்குடியேற்றப்பட்ட கிராமமான கேப்பாபிலவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதாக மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னரான மக்களின் மீள்குடியேற்றம், மக்கள்நல மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஐ.நா விசேட பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தியதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கேப்பாபிலவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு சென்றிருந்த ஐ.நா விசேட பிரதிநிதி சலோகா பெயானி, அங்குள்ள மக்களுடன் உரையாடியதுடன், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்துள்ளார். ஐந்து நாள் விஜயத்தில் ஈடுபட்டு இலங்கை வந்துள்ள ஐ.நா விசேட பிரதிநிதி பெயானி, நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்ததுடன், வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமுக்கும் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.