சிவிலியனையே ஆளுநராக நியமிக்க கோரப்படுகின்றதே தவிர சிங்களவரை நியமிக்க வேண்டாமென கூறவில்லை இதில் எந்தப் பிழையையும் நான் காணவில்லை: வாசுதேவ நாணயக்கார

vaasudevaநாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சுக்களின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏகாதிபத்தியவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ அடிபணியவில்லை. அனைத்தையும் அவர் தோல்வியடையச் செய்தார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தமது சேவைகளை மக்களுக்காக மேற்கொள்வதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் கிராம ராஜ்ஜியத்தை போன்று பிரதேச சபை உறுப்பினர்கள் மக்களோடு மக்களாகவே இருக்க வேண்டும். ஆனால் கிராம வாழ்க்கையுடன் இவர்களை பிரித்துவிடாதீர்கள். மக்களோடு மக்களாக வாழவும் அவர்களுக்கு சேவை செய்யவும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளிலும் இளைஞர் யுவதிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஒரு சில பிரதேச சபை தலைவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அனைவரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது.
நிதிக் குழுவினால் தான் மாகாண சபைகளுக்கு நிதி வழங்கப்படும். வட மாகாண சபைக்கு அதனூடாகவே நிதி வழங்கப்படுகிறது. எனவே நிதி வழங்கப்படவில்லையென கூறமுடியாது.
வட மாகாண சபையும் அரசாங்கமும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். ஏகாதிபத்தியத்தின் கீழ் ஆட்சி செய்ய முடியாது இணக்கப்பாடு தேவை.
வட மாகாண சபை ஆளுநரை மாற்ற வேண்டுமென்றும் சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டுமென்றும் கோருகின்றதே தவிர, சிங்களவர் எவரையும் நியமிக்க வேண்டாமென கூறவில்லை. எனவே, இதில் எந்தப் பிழையையும் நான் காணவில்லை.
அதேபோன்று யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்படும் போது மாகாண சபையுடன் கலந்துரையாடவில்லை என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இதில் பிழையொன்றுமில்லை. எனவே எதிர்காலத்தில் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.
மக்களின் இதய துடிப்பை உள்ளூராட்சி சபைகளே அதிகம் தெரிந்து கொள்கிறது. எனவே ஏதாவது திட்டங்களை முன்னெடுக்கிறோம் என்றால் உள்ளூராட்சி சபைகளை இணைத்துக் கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே வெற்றிகரமானதாக அமையும் என்றார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார