காணாமல்போனோர் தொடர்பில் 11,000 முறைப்பாடுகள்-

unnamed 4காணாமல்போனோர் தொடர்பான சுமார் 11,000 முறைபாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுள் சுமார் ஆறாயிரம் முறைபாடுகள் பொதுமக்களிடம் இருந்தும், மேலும் 5000 முறைபாடுகள் முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களிடம் இருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எச்.டபிள்யூ. குணசேன குறிப்பிட்டுள்ளார். 1990ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகள் இந்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களிலும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை நாட்டின் எந்தவொரு பகுதியில் உள்ளவரும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவிற்கு முறைபாடுகளை தெரிவிப்பதற்காக இம்மாதம் 31 ஆம் திகதிவரை பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆயினும், கிடைக்கப்பெறுகின்ற முறைபாடுகளை கவனத்திற்கொண்டு ஆணைக்குழுவின் கால எல்லையை மேலும் ஆறு மாதத்தால் நீடிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்க முடியும் என காணாமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.