ராதிகா சிற்சபேசன்மீது குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விசாரணை-

fஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. அவர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் விரும்பிய இடங்களுக்கு சென்றுவருகின்றார் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவரை வீட்டுக்காவலில் வைக்க பொலிஸாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ எவ்வித அதிகாரங்களும் இல்லை என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை இலங்கை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியில் வைத்து இன்று விசாரணை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனையிறவு விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழப்பு-

aஆனையிறவுப் பகுதியில் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 1மணியளவில் இடம்பெற்று விபத்தில் இளம் தாயும் சிசுவும் உயிரிழந்துள்ளதுடன், கணவர் காயமடைந்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஆனையிறவுப் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே, இவர்கள் விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளதாக கூறப்படுகிறது. முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (வயது 22), செந்தூரன் கின்சிலி (பிறந்து 27நாட்கள்) ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – ஜி.கே. வாசன்-

cதமிழக மீனவர்கள் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், இந்தியா – இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஜனவரி 20ம் திகதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் நிச்சயம் சுமூக தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ். மீனவக் குடும்பங்களின் நிலைமை பரிதாபமானது-எமிலியாம்பிள்ளை-

bயாழ். மாவட்டத்திலுள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சம்மேளனத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினர்களிடமும் பல தடவைகள் கலந்துரையாடினோம். ஆனால், கலந்துரையாடல்களினால் எந்தவித முடிவுகளும் கிடைக்கவில்லை. மீனவர்கள் எல்லை தாண்டும்போது கைதுசெய்யப்படுகின்றார்கள். அவ்வாறான நிலையில்கூட அங்கத்துவ சமாசங்களிடம் கதைக்கவில்லை. இவ்வாறான சூழ்;நிலை வியப்படைய செய்கின்றது. மேலும், எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு வடபகுதி மீனவச் சங்கங்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படவுமில்லை. இவ்வாறான நிலைமைகள் வேதனை தருகின்றன என எமிலியாம்பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் விபத்துக்களால் 575 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி-

bகடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் திடீர் விபத்துக்களால் பாதிக்கப்பட்ட 575 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 217 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு தெற்கு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 131பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இதில் திடீர் விபத்துக்களால் பாதிக்கப்பட்ட 26பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் கொழும்பு தெற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைத் தொடர்பாடலுக்கான வரி 5 வீதத்தால் அதிகரிப்பு-

hதொலைத் தொடர்பாடலுக்கான வரி 5 வீதத்தால் இன்றுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான வரவுத் திட்டத்தின் ஊடாக, 20 வீதமாக காணப்பட்ட தொலைத் தொடர்பாடலுக்கான வரி 25 வீதமாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் மற்றும் ப்ரோட்பேன்ட் வலையமைப்புகளுக்கான 10வீத வரியில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார்.

விசேட பிரமுகர்களின் மேடை சரிந்ததில் பலருக்கு காயம்-

gகொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்தமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்துள்ளது. நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின்போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு சரிந்து வீழ்ந்ததாக கூறப்படுகிறது. கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர். இந்த மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்துள்ளனர். முழு மேடையும் சரிந்து விழுந்ததால் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகருக்கு முஸ்லிம் கவுன்ஸில் கடிதம்-

eஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்காவிற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது. முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்தே முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா இந்திய உயர் ஸ்தானிகருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், இலங்கையிலுள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற செய்தியை விரக்தியுடன் வாசித்தோம். இந்த செய்திக்கான ஆதாரமாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசுக்கு எழுதப்பட்ட கடிதம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த எந்தவொரு ஆயுத போராட்டத்திலும் முஸ்லிம்கள் பங்கேற்கவில்லை. பல ஆத்திரமூட்டல்கள் காணப்பட்டபோதும் முஸ்லிம்கள் அமைதியாகவே இருந்துள்ளனர். எனவே இது இலங்கை முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்க வைத்துள்ளது. ஆதலால் இயன்றளவு விரைவாக உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு-

dஎதிர்வரும் 2014ம் ஆண்டு மே 18ம் திகதி அன்று உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்குமாறு கரைச்சிப் பிரதேச சபை தீர்மானமொன்றை நிறைவேற்றி ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தது. இம்மகஜரில் தெரிவிக்கப்பட்ட விடயம் யாதெனில், ‘யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் இலங்கையின் பல்வேறு சிறைகளில் பல்லாண்டு காலமாக அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் விசாரணைகளின்றியும் விடுதலையின்றியு மிருக்கின்ற அவர்களதும் அவர்களது குடும்பத்தினரதும் நெருக்கடிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்புக்காக ஏங்குகின்ற அவர்களின் பிள்ளைகளின் ஏக்கங்களை உறவுக்காகக் தவிக்கின்ற தாய்மார்களதும் மனைவியர்களதும் ஏக்கங்களை நீங்கள் ஒரு தந்தை என்ற நிலையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். போருக்குப் பிந்திய இந்த ஐந்து ஆண்டுகளில் வன்முறைக்கான எந்தப் பிரதிபலிப்புகளும் எமது சமூகத்திலிருந்து நிகழவில்லை என நீங்கள் உணர்வீர்கள். கலாசாரப் பண்புகளாலும், மத விழுமியங்களாலும் உலகில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்ற நாங்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் நம்பிக்கையினையும் கட்டி வளர்ப்பதில் இவ் அரசியல் கைதிகள் விவகாரம் பெரும் தடையாக இருக்கின்றது. இதனால் ஏற்பட்டிருக்கின்ற தனி மனித உணர்வுகள், உள நெருக்கடிகள், பொருளாதார கலாசாரப் பாதிப்புக்கள், வறுமை, வெறுமை, விரக்தி போன்றவற்றால் ஏற்படுகின்ற ஒட்டுமொத்த சமூகத்தின் பாதிப்புகளை உணர்வதற்காக எதிர்வரும் 2014. மே. 18ம் திகதிக்கு முன்பதாக தங்களின் கருணை மிகுந்த பொது மன்னிப்பை தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்குமாறு மக்கள் சார்பில் தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய பொது மன்னிப்பு எமது நாட்டிற்கு உலகில் கீர்த்தியையும் பலத்தையும் பெற்றுத் தருமென்று எமது சபை திடமாக நம்புகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மகஜர் கையளிப்பு நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் செயலகத்தில் நடைபெற்றது. கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நாவை குகராசா ஜனாதிபதிக்கான மனுவினை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்களான சு.தயாபரன், மா.சுகந்தன், சி.சுப்பையா, செ.புஸ்பராசா, ப.குமாரசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.