சேமமடு பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-
வவுனியா, சேமமடு பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யுத்தத்திற்குப் பின்னரான மீள்குடியேற்றக் கிராமமான சேமமடு (யூனிட்1, யூனிட்2) பகுதிகளின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. விஜயகுமார் (லயன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியுள்ளார்.
முன்னைநாள் வவுனியா உப நகரபிதாவும், புளொட் முக்கியஸ்தருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள், சேமமடு (யூனிட்1,) பாடசாலையின் அதிபர் செல்வரட்னம் சசிகுமார், (யூனிட் 2,) பாடசாலையின் அதிபர் சிவராஜா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னைநாள் வவுனியா உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் அவர்களுடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்)வவுனியா கிளையைச் சேர்ந்த கண்ணன், சதீஷ், ராஜா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.