கூட்டமைப்புக்கெதிரான கூட்டணி தொடர்பான செய்திக்கு புளொட் மறுப்பு-
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாகவும், இக்கலந்துரையாடலில் புளொட்டின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தாகவும் ஒரு சில இணையத்தளங்கள் தவறான செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றார்கள். இந்தக் கூட்டத்தில் புளொட் அமைப்பைச் சார்ந்த எவரும் பங்குபற்றவில்லை என்பதை நாங்கள் அறியத் தருகின்றோம்.
ம.பத்மநாதன்,
ஊடகத் தொடர்பாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
12.01.2014.
வடக்கு முதல்வர் மகசின் சிறைச்சாலைக்கு விஜயம்-
தண்டணைக் காலத்திற்கு அதிகமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இன்றுகாலை கொழும்பு, மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் வடக்கு முதலமைச்சர் சந்தித்து பேசியுள்ளார். இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சீ.வி.விக்னேஷ்வரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு-
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 20 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய அவர்கள் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு தொழில் பயிற்சிகளுடன் வெளிநாட்டு மொழிகள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயாதீன, நம்பகரமான விசாரணைமூலம் உண்மையை கண்டறிய வேண்டும்-அமெரிக்கா-
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகரமானதுமான விசாரணைகளுடாக இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் சட்டத்தின் குற்றவாளிகளை முன் நிறுத்துமாறும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்க சிறப்புத் தூதுவர் ஸ்டீவன் ஜே. ரப் தெரிவித்துள்ளார். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் நேற்று 11ஆம் திகதிவரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஸ்டீவன் ஜே. ரப் தனது விஜய நிறைவின்போது இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்குமான சுபீட்சம் மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளது. சம்பவங்கள் அவற்றிற்கான ஏற்புடைய தீர்வுகள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வருவதும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சியின் கொள்கைகளை மதித்து ஒன்றிணைந்த நாடாக முன்னோக்கிச் செல்வதும் மிகவும் முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
நிரந்தர வீட்டுத் திட்டம்; தொடர்பில் சமயபுரம் மக்கள் விசனம்-
வவுனியா சமயபுரம் பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு இதுவரை நிரந்தர வீட்டுத் திட்டம் கிடைக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த சமயபுரம் பகுதி மக்கள் நிரந்தர வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாததால் தற்காலிகக் குடிசைகளில் வாழ்வதால் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்கள் நிவாரணத்தையே நம்பியிருக்கின்றனர். பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பியைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் இவர்கள் நிரந்தர வீடுகளை அமைப்பது என்பது சாத்தியமில்லாத விடயமாகவே காணப்படுகின்றது. இவர்கள் தமக்கும் நிரந்தர வீட்டுத் திட்டத்தை வழங்குமாறு பலரிடமும் கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆளுங் கட்சி கொழும்பு மத்தி அமைப்பாளராக ஹிருனிகா நியமனம்-
ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வழங்கியுள்ளார். இதேவேளை இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்களிலும் ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு நாணய தாள்களுடன் சீசெல்ஸ் பெண் கைது-
60 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சீசெல்ஸ் நாட்டைச்சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரை கைதுசெய்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவின் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். சந்தேகநபரான குறித்த பெண் இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தின் ஊடாக சிங்கபூருக்கு பயணமாவதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கபூர் டொலர், அமெரிக்க டொலர் மற்றும் யூரோ ஆகிய நாணயத்தாள்களே அவரிடமிருந்து மீட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நேற்றையதினமே அவர் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் இன்று அதிகாலை நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முயற்சித்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் சுங்கப்பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தைப்பொங்கலை முன்னிட்டு முத்திரை வெளியீடு-
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உழவர்களின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் முத்திரை மற்றும் கடிதவுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் இந்திகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தென்,மேல் மாகாண சபைகளை கலைக்குமாறு முதலமைச்சர்கள் கடிதம்-
தென் மற்றும் மேல் ஆகிய இரு மாகாண சபைகளையும் கலைக்குமாறு கோரி அந்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஆளுநர்களிடம் கடிதங்களை கையளித்துள்ளனர். தென் மாகாண முதலமைச்சர் சாந்த விஜயலால் டி சில்வா தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவிடமும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவிடமும் கடிதங்களை கையளித்துள்ளனர். இவ்வாறான நிலையில் 12ஆம் திகதி நள்ளிரவுடன் இவ்விரு மாகாண சபைகளும் கலைக்கப்படலாம் என்றும், அதன்பின்னர் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களுக்கான திகதியை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
லயன் எயாரில் பயணித்தோரின் ஆடைகள் அடையாளங் காணப்பட்டன-
இரணைதீவு கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏயார் விமானத்தில் பயணித்த 17 பேரது ஆடைகளை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். லயன் ஏயார் விமானத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டுக் கொள்வதற்காக, அந்த விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் இன்றும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இப்பொருட்கள் நேற்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தபோது குறித்த ஆடைகள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு முதன்முறையாக நடமாடும் வைத்திய வாகன சேவை-
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக நடமாடும் வைத்திய வாகன சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திடீரென இருதய நோய்க்குள்ளாகும் ஒருவருக்கு அவரது வீட்டுக்கு சென்று முதலுதவி வழங்கி அவரை பாதுகாப்பாக அழைத்துவரும் வகையில் இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதார அமைச்சு சகல வசதிகளையும் கொண்ட அம்பியுலன்ஸ் வண்டியும் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் க.முருகானந்தன் சுகாதார அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வைத்திய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருள்நிதியின் வழிகாட்டலில் இந்நடமாடும் வைத்திய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் சேவையை சகல பொதுமக்களும் பெறும்வகையில் அதற்கான தனியான அவசர தொலைபேசி சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் க.முருகானந்தன் தெரிவித்துள்ளார். வீட்டில் ஒருவர் இருதய நோயினால் (ஹார்ட் அட்டக்) பாதிக்கப்படும்போது 0652229154 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் உடனடியாக அவசரசேவை அம்பியுலன்ஸ் அங்கு சென்று தேவையான முதலுதவிகளை வழங்கி பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அழைத்துவரும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கென தாதியர் குழுவொன்றுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 24 மணிநேரமும் இந்த சேவையை வழங்க அவர்கள் தயாராகவிருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இந்த சேவையினை எந்தவேளையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.