மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

mannar_1மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர்.
முதற்கட்டமாக குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் மற்றும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
13ஆவது தடவையாகவும் நேற்று வெள்ளிக்கிழமை  குறித்த மனித புதைகுழி தோண்டும் பணிகள் இடம்பெற்றது. ஆனால்  எதுவித மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்படவில்லை. எனினும் அடையாளப்படுத்தப்பட்ட சில மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இது வரை 10 பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெட்டிகளில் அடைக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை நீதவானின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் வைத்தியசாலையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 44 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று சனிக்கிழமை 14வது தடவை புதைகுழி தோண்டும் பணிகள் இடம்பெறும்.

திமுகவின்  உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்.

 140124081433_azhagiri_624x351_pti_nocredit‘கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் கட்சியின் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கட்சி அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, திமுக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க அழகிரி முயற்சித்ததாக’ குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கட்சிக்காரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கட்சியில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் – அது திமுகவின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் – , தி.மு.கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அன்பழகன் அறிவித்துள்ளார்.
ஒருபக்கம் திமுகவின் கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை கொண்டுவரும் முயற்சியில் கருணாநிதியும் அவரது மற்றொரு மகனும் திமுகவின் பொருளாளருமான மு க ஸ்டாலினும் பகிரங்கமாக முயன்றுவரும் நிலையில், விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து மு க அழகிரி அளித்திருந்த சமீபத்திய பேட்டியும், அதன் தொடர் நிகழ்வாக அவரது ஆதரவாளர்கள் செய்த சில செயல்களுமே இன்றைய அழகிரியின் தற்காலிக நீக்கத்தில் முடிந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
மேலும் கருணாநிதி காலத்துக்குப் பிறகான காலகட்டத்தில் அவரது அரசியல் வாரிசாக யார் வருவது என்பது தொடர்பில் அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கு இடையில் நிலவும் பதவிக்கான பனிப்போரும் இருவருக்கும் இடையிலான மோதலுக்கான மூலவேராகவும் பரவலாக பார்க்கப்படுகிறது.