வீமன்காமம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-
யாழ். தெல்லிப்பளை வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் கல்விபயிலும் பிள்ளைகளுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) யாழ் மாவட்ட பொறுப்பாளர் விஜயபாலன் (சின்ன மெண்டிஸ்) அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவிலிருந்து வருகை தந்திருக்கின்ற மனோகரன் (கண்ணன்) அவர்களின் உபயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலையின் அதிபர் திரு.இராமநாதன் அவர்களின் தலைமையில் நேற்றுப் பிற்பகல் 1மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அப்பாடசாலையின் பழைய மாணவர் மனோகரன் (கண்ணன்) திருமதி மனோகரன், பழைய மாணவர் சிவநாதன், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்கள். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், எங்களுடைய சமுதாயத்தின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலே தான் தங்கியிருக்கின்றது. ஏனைய எல்லா வளர்ச்சிகளைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி கூடினால்தான் சமுதாயம் முன்னேறும். ஆகவே தான் நாங்கள் மாணவர்களுக்காக எங்களால் இயன்றளவுக்கு தொடர்ந்து முயற்சித்து வெளிநாடுகளில் இருக்கக்கூடிய எங்களுடைய தோழர்கள் மூலமும், இங்கிருக்கக்கூடிய நிதிகளைக் கொண்டும் இப்படியான உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றோம். எனவே மாணவர்கள் செய்ய வேண்டிய கடமை என்னவென்றால், தங்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும், நலன் விரும்பிகளும் மகிழ்ச்சியுறும் வகையில் தங்களுடைய கல்வியிலே மிகவும் கவனம் செலுத்தி நல்ல பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்பதேயாகும் என்று தெரிவித்தார்.