வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கி தொகுதி அன்பளிப்பு-
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக ஏற்பாட்டில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலைக்கு ஒலிபெருக்கித் தொகுதி இன்றையதினம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும், புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் ஸ்தாபகரின் மகளான செல்வி பூஜாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இந்த ஒலிபெருக்கித் தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டது.
இவ் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி கே.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலர் திரு எஸ்.தவபாலன் பாடசாலை ஆசிரியர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளையைச் சேர்ந்தவரும், கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகருமான திரு எம்.கண்ணதாசன், கோவில்குளம் இளைஞர் கழக செயலர் ஜனார்த்தனன், கழக இணைப்பாளர் காண்டீபன், கழக தொழில்நுட்ப இயக்குனர் சதீஸ், இளைஞர் கழக உறுப்பினர்களான சந்திரன், சுகந்தன் ஆகியோரும், பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் உரையாற்றிய வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள், பெறப்பட்ட வளங்களை சிறார்கள் உச்ச வினைத்திறனுடன் பயன்படுத்தி நாளைய வன்னி மண்ணின் சிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும். ஆரம்ப கல்வி என்பது ஆசான்களின் சிறந்த வழிகாட்டலில் தான் சிறப்புற அமையும் எனவே அவ்வாறான ஆசான்களின் நெறிப்படுத்தலில் எமது மாணவ செல்வங்கள் தமது கற்றல் ஒழுக்கம் என்பவற்றை சிறந்த பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.