சர்வதேச பொறிமுறை முன்பாக ஆஜராக சாட்சியாளர்கள் விருப்பம்-நவிபிள்ளை-
உள்ளக விசாரணையின் மூலம் உண்மையைக் கண்டறிய முடியாதுபோனதால், சர்வதேச விசாரணையொன்றின் ஊடாக பரந்தளவிலான செயற்பாட்டை நிறைவேற்ற முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, மனித உரிமைகள் பேரவையில் நவநீதம்பிள்ளை நேற்று சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இங்கு உரையாற்றிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களின் துக்கத்தையும், அதிர்ச்சியையும் அடையாளம் காண தவறியுள்ளமையின் ஊடாக அரசாங்கம் மற்றும் நல்லிணக்கம் மீதான நம்பிக்கை அற்றுப் போகின்றது. இந்தவேளையில் புதிய சாட்சியங்கள் தொடர்ந்தும் தோன்றுகின்றன. சர்வதேச பொறிமுறைக்கு முன்பாக ஆஜராகி சாட்சியமளிக்க சாட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த பொறிமுறைமீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவ்வாறானதொரு பொறிமுறையின்கீழ் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். இதன்மூலம் சர்வதேச விசாரணையின் அவசியம் மாத்திரமன்றி, அதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. புதிய தகவல்களை வெளிக்கொணரவும், உண்மையைக் கண்டறியவும் உள்ளக விசாரணை பொறிமுறைகளால் இயலாமல் போயுள்ளது என்பதுடன், சர்வதேச விசாரணையின்மூலம் பரந்தளவிலான பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்றார்.
யுத்தக் குற்ற விசாரணை முன்னெடுப்பதாக காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனம்-
இந்திய காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வெளியிட்டது. அதில் எதிர்வரும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கைக்கு எதிராக யுத்தக்குற்ற விசாரணை ஒன்றை முன்னெடுக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் முழுமையான அதிகாரப்பகிர்வுகளுடன் தன்னிச்சையாக இயங்கக்கூடிய மாகாண சபைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை இன மக்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வும் பெற்றுத்தரப்படும் என காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவை எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள வெற்று உறுதிமொழிகள் என தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதரவு தருமாறு பிரித்தானியா கோரிக்கை-
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் பிரேரணைக்கு ஆதரவு தருமாறு, தென்கொரியா, கசகஸ்தான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை தாம் வலியுறுத்தி இருப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார். ஹேக்கில் வைத்து அந்த நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, தாம் இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உள்ளக விசாரணை ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டிய செயற்பாடுகள் முழுமை பெறாத நிலையிலேயே சர்வதேச விசாரணையொன்று குறித்த பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்-
சீனாவின் வர்த்தக பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வாரம் இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதிமுதல் அந்த குழு இலங்கைக்கு விஜயம் செய்து, பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் ஆயு;வு செய்யவுள்ளது. இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் தரகு தொழில், இலத்திரனியல் உற்பத்திகள், இரும்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, தேயிலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் சீனா பிரதிநிதிகள் அவதானம் செலுத்தவுள்ளனர்.
இலங்கையருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிப்பு-
புலிகள் அமைப்பிற்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் எறிகணை என்பவற்றை கொள்வனவுசெய்ய முற்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு நிவ்யோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரதீபன் நடராஜா என்ற 37 வயதான இவர் விசாரணையின் பொருட்டு கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த ஆறுபேரில் தண்டனை வழங்கப்படாதிருந்த இறுதி நபர் இவராவர். இவர் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதன் பொருட்டு, எப்பிஐ உளவு சேவை அதிகாரியுடன் கலந்துரையாடி இருந்தார் என்று அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ரூ.100 கோடி கேட்டு பொன்சேகா வழக்கு-
பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தனவிடமிருந்து 100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஜனநாயக கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா கஸ்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். இராணுவ தலைமையகத்தில் வைத்து முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாமீது இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தனியார் வானொலியொன்றுக்கு பிரதியமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார். பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு பிஸ்கல் ஊடாக நோட்டீஸ் அனுப்புமாறு மாவட்ட நீதவான் நிஹால் சந்திர ரணவக்க பணித்துள்ளார்.
வவுனியாவிலும் இராணுவத்தினரின் துண்டுப்பிரசுரங்கள்-
வவுனியாவில் இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறன. இது உங்களதும் உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மூன்று தசாப்த மோதல்கள் நிறைவுபெற்று அபிவிருத்திமூலம் நன்மையை அனுபவிக்கின்றனர். கொடிய பயங்கரவாதிகளின் மோதல்களின்மூலம் கோடிக்கணக்கான சொத்திழப்புகள் உயிரிழப்புகள் விதவைத் தன்மை என பல இழப்புகள் ஏற்பட்டன. தற்போதைய சமாதான செயற்பாட்டின் மூலம் புலிப்பயம் நீங்கியுள்ளதோடு புலி ஆதரவு செயற்பாடுகளும் அற்றுப்போயுள்ளன. ஆனால் வெளிநாட்டில் வாழும் புலி ஆதரவாளர்களுக்கு இங்குள்ள மக்களின் புலி மறந்த தன்மை பிடிக்கவில்லை. அவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து புலி ஆதரவு இணையத்தளங்கள் மூலம் பரப்பி அந்த செயற்பாடுகளுக்கு ஆதரவு தேடுகின்றனர். இங்குள்ள வறிய இளைஞர்களுக்கு அதிகளவு பணம் அனுப்பி அழிவு வேலைகளுக்கு தூண்டி விடுகின்றனர். இந்த சிறிய குழுவின் வேலைகள் பற்றி அறிந்துள்ளோம். அண்மையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தவர்கள் பளையில் கைது செய்யப்பட்டனர். பாரிய விலை கொடுத்து பெற்ற சமாதானத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் உங்கள் பிரதேசத்திலும் இருக்கமுடியும். இந்நடவடிக்கைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன. இதற்கு துணைபோகாமல் ஒத்துழைப்பு நல்கவேண்டும்-(பாதுகாப்பு படையினர்) என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நாவை அல்ல அரசையே மாற்ற வேண்டும்-அத்துரலிய ரத்தன தேரர்-
நல்லிணக்க ஆணைக்குழுவின் காலவரையறைக்கு அடிபணியாமல் உடனடியாக செயற்திறன்மிகு உள்நாட்டு விசாரணையொன்றை நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதனைக் கூறியுள்ளனர். இங்கு கருத்துக் கூறிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உள்நாட்டு விசாரணையொன்றை விரைவில் நடத்துமாறு நாம் அரசிடம் கோருகின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் காலவரையறைக்கு அடிபணியாமல் அதனை நிறைவேற்ற முடியும். 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி பிரபாகரனுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர். 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி பிரபாகரன் உயிரிழந்தார். இந்த காலத்திற்குள் இடம்பெற்ற விடயங்களை மாத்திரமே தெளிவுபடுத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது. இவை அனைத்தும் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உள்நாட்டு விசாரணை அவசியமாகும் என்றார் அவர், ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கூறுகையில், இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதாக இருந்தால், அல்லது மனித உரிமைகளை மீறுவதாக இருந்தால், இலங்கையில் மக்களுக்கு வாழ முடியாது என்றால் இம்முறை தேர்தலில் அவர்களுக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். ஐக்கிய நாடுகளை அல்ல முதலில் இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரமுள்ளது-தமிழக அரசு-
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமக்குள்ளதாக தமிழக மாநில அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள்மீது முடிவெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதையடுத்து, அவர்களின் தூக்குத் தண்டனை இந்திய உச்ச நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ரொபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் முருகன் உட்பட ஏனைய மூன்று குற்றவாளிகளும் 23 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதை கருத்திற்கொண்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனையடுத்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள்மீது மத்திய அரசு சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், அவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையென தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகள் ஏழு பேரும் மத்திய அரசின் தடா சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து Read more