குப்பிளானில் ‘பாலசங்கரின் பயங்கரம்’ குறுந்திரைப்படம் வெளியீடு-

யாழ், குப்பிளான் விநாயகர் ஆலய மண்டபத்தில் பாலசங்கரின் பயங்கரம் என்கின்ற குறுந்திரைப்படம் கடந்த 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்த குறுந்திரைப்படமானது பாலசங்கரின் பயங்கரம் என்ற பெயரில் உதயசங்கரின் நெறிப்படுத்தலின்கீழ் உருவான படமாகும். இது பாதீனியத்தினால் ஏற்படக்கூடிய பயங்கர அழிவுகள் மற்றும் ஆபத்துக்கள் சம்பந்தமாக அறிவுறுத்துகின்ற ஒரு படமாகும். வலிகாமம் மேற்கு கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொன். சந்திரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த குறுந்திரைப்பட வெளியீட்டு விழாவின் முதன்மை விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்;த்தன் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக வலிதெற்கு பிரதேச சபையின் தவிசாளர் ரி. பிரகாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இங்கு உரையாற்றிய அனைவரும், பாத்தீனியத்தின் விளைவுகள் பற்றியும் அதனை அழிக்க வேண்டியதன் அவசியம் தொடர்ப்பிலும் விளக்குவதாக இந்த குறுந்திரைப்படம் அமைகின்றது. எனவே இந்த முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகின்றோம் என்று தெரிவித்தனர்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் யாழ் விஜயம்-

nofigro kape japan thoothuvarஇலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். வடக்கு மாகாண உள்ளுராட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மாகாணத்தின் மருத்துவ தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-

afkhan1ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பிற்கிணங்க அவர் இங்கு வருகின்றார். ஆப்கான் ஜனாதிபதி கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தரவிருந்த போதிலும், அண்மையில் காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து கர்சாயின் விஜயம் பிற்போடப்பட்டிருந்தது. இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை-

ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சேவையின் கீழ், அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வரும் பலர், விண்ணப்பங்களை சமர்ப்பித்தும் தமக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என கூறுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத் குமார கூறுகையில், கடந்த 28ஆம் திகதிமுதல் இருமொழிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுவதால், சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழிமூல மொழி பெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றமை இதற்கான காரணமாகும். மூன்று வாரங்களுக்குள் இப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்து, தேசிய அடையாள அட்டையை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.

அம்பாறையில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு-

amparaiஅம்பாறையில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் கற்கை பிரிவு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள கற்குகை ஒன்றிலிருந்து இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவு பேராசிரியர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த கல்வெட்டு, சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் ‘பிறாக்மி’ எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலர் இலங்கைக்கு விஜயம்-

sujatha singhஇந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் இம்மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்தேவி ஜுன் மாதத்தில் யாழ்ப்பாணம் பயணம்-போக்குவரத்து அமைச்சர்-

yaal deviயாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை, செப்டெம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் காங்கேசன்துறைக்கும் யாழ்.தேவி புகையிரதம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் நேற்றுக்காலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் யாழ்.தேவி கடந்த 28 வருடங்களுக்கு பிறகு கொழும்பிலிருந்து பளை வரை தனது பயணத்தை நேற்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்திருந்தது. மேற்படி நிகழ்வினில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே போக்குவரத்துத் துறை அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7ல்; தமிழகத்தில் ஏப்ரல் 24ல் வாக்களிப்பு-

indiaஇந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது. டெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் வி.எஸ்.சம்பத் இதனை அறிவித்துள்ளார். தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்ட விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 7ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 24, 30 ஆகிய திகதிகளிலும், மே மாதம் 7,12 ஆம் திகதிகளிலும் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி ஆறாவது கட்ட தேர்தலின்போது வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணி மே 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்காக, இந்தியா முழுவதும் 9,30,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அரசியல் நோக்கம் கொண்ட சில நாடுகள் இலங்கைமீது அழுத்தம் – அமைச்சர் பீரிஸ்-

எவ்வித அடிப்படைகளும் இன்றி அரசியல் நோக்கங்களைக் கொண்டு சில நாடுகள் இலங்கைமீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும். யுத்தம் முடிந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய செயற்திட்டம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணையையும் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும் இலங்கை நிராகரிக்கிறது. இலங்கையின் வட பகுதியில் இன பாகுபாடு ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 75,000 முஸ்லிம்களும் 35,000 சிங்களவர்களும் வாழ்ந்தனர். தற்போது கொழும்பில் சிங்களவர்கள் அல்லாத 51வீத மக்கள் வாழ்கின்றனர். இலங்கையில் ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயார் இல்லை. வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு செய்யவில்லை. முழு சிவில் நிர்வாகம் அங்கு நிலவுகிறது. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காததால் நல்லிணக்க முனைப்புகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மத ஸ்தலங்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லை. அரசாங்கம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காணாமல் போனவர்கள் குறித்தும் இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என வெளிவிவகார அமைச்சர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.