அகில இலங்கை சிவாலய துவிச்சக்கர வண்டி யாத்திரை-
அகில இலங்கை சிவாலய துவிச்சக்கர வண்டி யாத்திரையானது யாழ். சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் கடந்த சிவராத்திரி தினத்தன்று ஆரம்பமாகியிருந்தது. இவ்வாறு புறப்பட்ட வீரர்கள் நேற்றைய தினம் 12.03.2014 மாலை ஏறத்தாழ 1700 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி முடித்து மீண்டும் சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் தமது யாத்திரையினை நிறைவு செய்துள்ளனர். இவர்களை வரவேற்ற வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்கினி ஐங்கரன் அவர்கள் இவ் வீரர்களை வாழத்தியதோடு அவர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் வழங்கி வைத்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறையில் பேரணி-
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு ஊர்காவற்றுiயில் இன்று பேரணியொன்று நடைபெற்றது. இன்றுகாலை 9.00 மணியளவில் (13.03.2014) ஊர்காவற்றுறை பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள், போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு ஒர் அணியில் இணைய வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து வளவாளராக கலந்துகொண்ட உழவள மருத்துவர் திரு ரவீந்திரன் அவர்கள், போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் விளைவுகள் தொடர்பாக மிகவும் தெளிவாக விளக்கவுரையாற்றினார் இந்நிகழ்வில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர்காவற்றுறை பனை தென்னை வள அபிவிருத்திச் சங்க முகாமையாளர் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைவரும் பிரதேச செயலர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இருந்து பேரணியாக சென்று ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலய வீதி வழியாக ஊர்காவற்றுறை சந்தியினை அடைந்து ஊர்காவற்றுறை சந்தியில் பேரணியினை நிறைவு செய்தனர். மேற்படி பேரணியில் போதை மற்றும் புகைப் பொருளுக்கு எதிரான பல்வேறு சுலோகங்கள் காணப்பட்டது.