தென்னாப்பிரிக்க பயணம் ஐநா விசாரணைகளை பாதிக்காது-இரா.சம்பந்தன்-
இலங்கை விவகாரம் பற்றி பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா செல்வது ஜெனிவா பிரேரணையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைக்கும் இந்த விஜயத்திற்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் சூமா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வந்திருந்தார். மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மாநாட்டின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தென்னாப்பிரிக்கா சென்று பேச்சு நடத்துவதாக முன்கூட்டியே முடிவாகியிருந்தது. அப்பேச்சுக்களுக்கான அழைப்பை தென்னாபிரிக்கா விடுத்திருந்த பின்னணியிலேயே, புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஆர்.சம்பந்தன் கூறியுள்ளார். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பில் சகலவிதமான விடயங்கள் பற்றியும் இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படும். சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல. அரசாங்கம் இத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு-
வடக்கு மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மிக விரைவில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசிமூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இவ் விடயம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது எமது கடமை. இருப்பினும் கடந்த காலங்களில் அவர்களால் கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை. எனினும் கடந்தவாரம் அவைத்தலைவரால் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் உறுப்பினர் அனந்தி சசிதரன் நேரடியாக என்னைச் சந்தித்து கடிதத்தினை ஒப்படைத்திருந்தார். இதன்படி அவற்றை நான் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரது பதில் கிடைக்கப்பெற்றதும் மிகவிரைவில் அவர்களின் பாதுகாப்புக்கு பொலிஸார் அமர்த்தப்படவுள்ளனர். மேலும் அனுமதி கோராதவர்களும் தமக்கு பாதுகாப்பு தேவை என அனுமதி கோரினால் நாம் வழங்கத் தயாராக உள்ளோம். மேலும் அமைச்சர்களுக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ ஏதாவது பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படுமானால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது எனக்கோ தகவல் தந்தால் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர் கைது-
வடக்கில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் முன்பு புலி உறுப்பினராக இருந்து புனர்வாழ்வு பெற்றவருமான பத்திரிநாதன் அலன்மன்ரோ (வயது-30) என்பவர் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். இவர் யாழ்.பருத்தித்துறை முனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஐந்து மீனவர்களை விட மேலதிகமாகத் தேடப்பட்டு வந்த நபர் இவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கிளிநொச்சிக்குச் சென்று கொண்டிருக்கையில் கைதுசெய்யப்பட்டதாகவும் இவரையும் வவுனியாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிறு இரவு பருத்தித்துறையைச் சேர்ந்த 5 மீனவர்களை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவிற்குக் கொண்டுசென்றனர். பத்திரிநாதன் ரெஜினோல்ட் (வயது 47), பத்திரிநாதன் வின்சன் பெனடிக் (வயது 38), செல்வராசா அன்ரன் இருதயராசா (வயது 32), அழகநாதன் வின்சன் மரியதாஸ் (வயது 45), நாகப்பு மிக்கல்பிள்ளை (வயது 53) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவிலுள்ள புலி உறுப்பினர்களிடம் நிதியினைப் பெற்று பலநாட்கலம் ஒன்றினை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வடக்கில் ரி.ஐ.டியினரால் சுமார் 50இற்கு மேற்பட்டவர்கள் கடந்த ஒருமாத காலத்திற்குள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை-
வவுனியா, கற்பகபுரத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு 15 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சிறிய துப்பாக்கிகளுடன் வந்த நால்வரால் நேற்றிரவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்தாகவும் வவுனியா தலைமையக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கட்சியில் முரண்பாடு இல்லை-மனோகணேசன்-
ஜனநாயக மக்கள் முன்னணியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மை இல்லை என கட்சியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்து;ளளார். கட்சியின் செயற்பாடுகளையும் தீர்மானத்தையும் விமர்சித்தமைக்காக கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து நல்லையா குமரகுரூபரன் பதவி விலக்கப்பட்டுள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் கட்சியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிரக்கின்றன. எனினும் இதனை நிராகரித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், இத்தீர்மானம் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒத்தூதி பதவியை தக்கவைக்க தயாரில்லை, ஆதலால் விலகுகிறேன்-குமரகுருபரன்-
ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகுவதாக அதன் முன்னாள் பிரதித் தலைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து தான் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மனோ கணேசனே தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் உள்ள ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து மனோ கணேசன் என்னை இடைநிறுத்தியுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறியக்கிடைத்தது. குறித்த இடைநீக்கமும், பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கலும் சட்ட ரீதியாகப் பிழையானது. இது போன்றதொரு முடிவெடுப்பதற்கான கூட்டம் இரவோடிரவாக கூட்டப்பட முடியாது. மாறாக குறித்த கால அவகாசத்தில் அரசியல் குழுவிலுள்ள யாவருக்கும் முறையான அழைப்பும், குறித்த பிரேரணை தொடர்பான முறையான அறிவித்தலும், நிகழ்ச்சி நிரலும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். Read more