நெடியவன் உள்ளிட்ட 96 பேரை கைது செய்ய இன்டர்போலின் உதவிகோரல் கே.பி பெயர் இல்லை  

untitledநெடியவன் உட்பட 40பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்களும், ஏனைய  பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் 56பேருமென  96 இலங்கையரைக் கைதுசெய்யவென சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதி முதல் இன்றுவரை கைது செய்யப்பட்ட 100பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும். இதேவேளை நோர்வேயில் உள்ள புலிகள் இயக்கத்தின் தற்போதைய சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருவதாகவும். நிதி திரட்டல் திரட்டப்படும் நிதியின் மூலம் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருப்பதற்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்றும். இவ் நடவடிக்கையின் பின்னால் நெடியவனே உள்ளார் என்றும். கடந்த சில தினங்களுக்கு சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும். தாக்குதல் ஒன்றின் மூலம், இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என வெளி உலகுக்கு காட்டுவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதே நேரம் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும். 2009ஆம் ஆண்டின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதாலேயே கே.பி மீதான அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியர்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இளம் வயது தமிழர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள ஆலோசனை.-

sri armyஇலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையில் நிலவுகின்ற வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக, வடமாகாணத்திலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும். இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பாரிய வெற்றிடம் நிலவுவதாகவும், அந்த வெற்றிடம் பெரும்பாலும் வடக்கினை சார்ந்திருப்பதினாலுமே வடமாகாண தமிழ் இளைஞர், யுவதிகளை படையில் சேர்ப்பதற்கு ஆலோசித்து வருவதாகவும். இதேவேளை, சிவில் பாதுகாப்பு படையில் வடமாகாண இளைஞர்களை சேருமாறு விண்ணப்பங்கள் விநியோகித்து வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், தமது பரிசீலனைகள் நிறைவடைந்ததும் உத்தியோகபூர்வமாகவே விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் படைத்தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை ராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை

imagesCAHNL3TZஇலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த அமைப்பு வெளியிட்ட விவரங்களில் இலங்கை ராணுவத்தினர் பலரது புகைப்படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா? என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டதற்கு பதிலளித்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆழியன் , இது குறித்த ஆதாரங்களை தாங்கள் ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தரவிருப்பதாக கூறினார்.

ஆனால் போரில் ஈடுபடாத ராணுவத்தினரின் குடும்பத்தினர் குறித்த தரவுகளை பிரசுரித்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன், ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது என்ற பின்னணியில் இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும், எனவே அந்தப் படங்களைப் பிரசுரித்த்தில் தவறில்லை என்றார். அது போல, அவர்களது அந்தரங்க உரிமைகளும் இதனால் மீறப்பட்டதாகக் கூறுவது தவறு, ஏனென்றால் சிங்கள படையினர் வன்னியில் போர் நடந்த போது இழைத்த மனித உரிமை மீறல்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர் என்றார் அவர்.

நிபுணர் குழுவிடம் இராணுவத்தினர் சாட்சி? இலங்கை இராணுவம் மறுப்பு

imagesCA0Q2ETUஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிட்டதன் பிரகாரம், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முன்னிலையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலரும் சாட்சியமளிக்கவுள்ளதாக நம்பகரமான இராஜதந்திர வட்டார செய்தி தெரிவிக்கிறது. புலிகளுக்கெதிரான யுத்தம் இடம்பெற்ற காலத்தில், படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலரே இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவுற்ற காலத்தில் அரசு தலைமையுடன் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அடுத்து இந்த அதிகாரிகள், நாட்டைவிட்டு வெளியேறி, பிறநாடுகளில் நிரந்தரமாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் குறைந்தது மூன்று அதிகாரிகளின் சாட்சியங்களை மேற்கு நாடுகள் சில ஏற்கனவே பதிந்து வைத்திருக்கின்றன என்றும், மேற்கு நாடுகளின் தொழில்நுட்ப சான்றுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களுடன் அந்த சாட்சியங்கள் சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் முன்னால் வலுவான ஆதாரங்களாக முன்வைக்கப்படும் என்றும் அந்த இராஜதந்திரமட்ட செய்தி மேலும் தெரிவிக்கிறது. சாட்சியமளிக்கத் தயாராக இருப்பவர்களுள் ஒருவர் இராணுவத்தின் மிக உயர்ந்த தர நிலையில் பதவி வகித்த, பௌத்தத்தைச் சாராத பிற மதம் ஒன்றைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. அத்தோடு, சில சாட்சிகளை ஏற்கெனவே பதிவுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக எவரேனும் செயற்பட்டால், அதற்கெதிராக எங்கும் தான் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளமையை முற்றாக மறுக்கின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய. இலங்கைக்கும் அதன் பாதுகாப்பு படைகளுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்த சர்வதேசம் முயற்சித்து வருகிறது. இதுவொன்றும் புதுவிடயமல்ல. இல்லாத ஒரு விடயத்திற்கு எவர் வந்து சாட்சி சொன்னால்தான் என்ன? முதலில், நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. இந்நிலையில், அந்த நிபுணர் குழுவிற்கு சாட்சி என்பது வேடிக்கையாகவிருக்கிறது. பொய்யான சாட்சிகளை எவர் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நடைபெறாத ஒரு செயலுக்காக பொய் சாட்சியங்களை உருவாக்க சர்வதேசம் முயற்சிக்கிறது. இதற்கு உண்மையான படையினர் எவரும் பலியாகமாட்டார்கள் என்று பிரிகேடியர் ருவான் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையில் பொதுமக்களின் பாவனையில் உள்ள காணி அரபடையால் சுவீகரிப்பு

trincomaleeதிருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள் அடையாளமிடப்பட்டு, முட்கம்பி வேலிகளும் போடப்பட்டு, இந்த நிலம் விமானப்படைக்குரியது என்கிற அறிவிப்பு பலகைகளும் அந்த பகுதியில் நடப்பட்டுள்ளன. இந்த காணிகள் எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளாக இருந்தாலும் அந்த காணிப்பிரதேசம் உள்ளுர் மக்களால் கால்நடை வளர்ப்பு , கருங்கல் உடைப்பு மற்றும் பயிர்ச்செய்கை என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. விமானப்படையின் இந்தக் காணி சுவீகரிப்பு காரணமாக அந்த பகுதி மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இழக்கப்படுவதோடு அவர்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான சுதந்திரமும் இழக்கப்படுவதாக வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பு குற்றம் சாட்டுகின்றது. வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பானது யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட கடும் போக்குடைய சிங்கள அமைப்பாக பார்க்கப்படுகிறது. விமானப்படையினரால் குறித்த காணி சுவீகரிக்கப்படுவது தொட்பாக கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அனுர பண்டார, 3500 தொடக்கம் 4000 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணி விமானப் படையினரால் அடையாளமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த பகுதியில் தற்போது விமானப்படைக்கு குழாய் நீர் விநியோக வேலைகளும் இடம் பெற்று வருவதால் நிரந்தர முகாமொன்று அமையலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார். வெள்ளைமணல் பகுதியை பொறுத்தவரை அநேகமாக முஸ்லிம்களே வாழந்து வரும் கிராமம் என்று கூறிய அனுர பண்டார, இந்த காணி சுவீகரிப்பு விடயத்தில் அவர்கள் பயம் காரணமாக வாய் திறக்க முடியாதவர்களாக காணப்படுவதாக கூறினார். போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் தேவைகளுக்கு காணி தேவைப்படுமானால், அதுகுறித்து மாகாண முதலமைச்சரின் ஆலோசனை பெறப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் ஆலோசனை பெறப்பட்டதா?