வலி தெற்கில் இளைஞர் கழகங்களின் வருடாந்த விளையாட்டு போட்டி-
யாழ். வலி தெற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களிடையேயான வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் யாழ். கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. உடுவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு.எஸ் விஜிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு ரி.பிரகாஷ், யாழ். தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி இயக்குநர் திரு.ஐ.தபேந்திரன், கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு. ஏ.கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் திரு ஆர்.ஈஸ்வரதாசன், முன்னைநாள் வலிதெற்கு பிரதேச சம்மேளனத் தலைவர் திரு.எஸ்பீஷ்மன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு. எஸ்.சண்முகவடிவேல், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திருஎஸ்.லக்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டதுடன், தொடர்ந்து, இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றன. இதனையடுத்து உடுவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இ.பிரணவரூபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று, பரிசில்களும்; வழங்கி வைக்கப்பட்டன.
பனிப்புலம் குஞ்சன்கலட்டியில் கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வு-
யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது ஏற்பாட்டில் பனிப்புலம் குஞ்சன்கலட்டியில் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் தோழர் செல்லத்துரை ஜேகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஜேர்மன் புலம்பெயர் உறவுகளால் தாயக உறவுகளின் கல்வி மேம்பாட்டிற்காக நடாத்தப்படும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்வு நேற்றையதினம் (27.04.2014) இடம்பெற்றது. இந் நிகழ்வானது வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ க.சபாநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. த.சசிதரன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கிராம பிரமுகரான திரு. சூரசங்காரம் மற்றும் பெரும்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. க.சபாநாயகம் அவர்கள் உரையாற்றுகையில், இந்த கிராமம் பல தேவைகளை கொண்டுள்ளது இந்த வகையில் மாணவாகளின் கல்விக்கு வழங்கப்படும் இவ்உதவி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாகாண சபை உறுப்பினரான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்றைய பாரிய பொருளாதார நெருக்கடி மக்களின் வயிற்றில் மட்டுமல்ல மாணவர்களின் மனங்களிலும் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது மாணவாகளின் கல்வி சார் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெற்றோர்கள் அதிகமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த வகையில் மாணவர்களை ஊக்குவிக்க இவ்வாறான உதவிகள் மிக முக்கியமானவை. புலம்பெயர் நாட்டில் உள்ளவர்கள் காலத்தின் தேவை அறிந்து உதவவேண்டும். கல்விக்கு உதவுவதே மிகப்பெரிய உதவியாகும். இந்த வகையில் இவ் உதவித்திட்த்தில் ஈடுபட்டுள்ள அன்பு உள்ளங்களை பாராட்டுகின்றேன் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.