வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் மே தினச் செய்தி-
இன்றைய நாள் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன் பேனும் மகத்தான உன்னத நாள். உழைக்கும் தொழிலாளர்களின் கைகளில் தான் இந்த உலகம் தங்கியுள்ளது என்பதை உலகிற்கு தொழிலாளர் ஒன்றுபடுவதன் வாயிலாக பறைசாற்றிய நாள். இந் நன்நாளில் தொழிலாளர்கள் தமது கரங்களை இறுக்கிக் கொள்வதன் வாயிலாக இழக்கப்பட் இன்றும் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களது உரிமைகளை வென்றெடுக்க அடித்தளம் இடமுடியும். இதற்கும் மேலாக பால்நிலை வேறுபாட்டை காரணமாக காட்டி இன்றும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலை மாற்றப்படவேண்டும். யுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளாகி இன்றும் துன்பப்பட்டு வருகின்ற தொழிலாளர்களின் வாழ்வில் விடிவு ஏற்படவேண்டும். யுத்தத்தால் இழந்து போன எமது தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கும் நிலை அடைய வேண்டும். யுத்தத்திற்கு பிந்திய இன்றைய சூழலில் அரசியலுக்கு அப்பால் தொழில் வழங்கலில் சமநிலை பேணப்பட வேண்டும்.அரசியல் ரீதியான காரணங்களை அடிப்படையாக கொண்ட தொழில் ரீதியான பழிவாங்கல்கள் நிறுதப்படவேண்டும். அசாதாரண சூழ்நிலைகள் திட்டமிட்டவகையில் உருவாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.திட்டமிட்டு பறிக்கப்பட்ட எமது வயலும் வயல் சார்ந்த நிலமும் கடலும் கடல் சார்ந்த பகுதியும் மீளவும் எமதாக்கப்படவேண்டும். எங்கள் சுதந்திர வாழ்வதனை முற்றுப்புள்ளி வைத்ததாக எதிரி கருதுகிறான். அதனையே எமது முதற்புள்ளியாக்கி பீனிக்ஸ் பறவைகளாக ஒன்றிணைந்து ஒர் அணியில் உரிமைக்காக திரள்வோம்
(திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் – தவிசாளர், வலிமேற்கு பிரதேச சபை, சுழிபுரம்)
ஊர்காவற்றுறையில் பிளாஸ்ரிக் கொள்கலன்கள் வழங்கிவைப்பு-
யாழ். தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் இன்று (29.04.2014) 150க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 30 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய பிளாஸ்ரிக் கொள்கலன்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தீவகம் வடக்கு பிரதேசமானது அண்மைக்காலமாக வறட்சியால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வரும் பிரதேசங்களில் ஒன்றாகும். நீர்ப்பற்றாக்குறை என்பதற்கு மேலாக நீரைச் சேமித்து வைக்கக்கூடிய வழிவகைகள் கூட இப்பிரதேசத்தில் அரிதாக உள்ளது. இன்றைய இந்நிகழ்வானது பிரதேச செயலர் திருமதி. எ.அன்ரன் யோகநாயகத்தின் வழிகாட்டலின்கீழ் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வ.தர்சினி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மற்றம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை இன்று (29.04.2014) பிரதேச செயலர். திருமதி. எ.அன்ரன் யோகநாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யூ.என்.டீ.பி அமைப்பினரால் நடாத்தப்பட்டது. ஏராளமான பயனாளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பிரிட்டன் அமைச்சர் அரச சார்பற்ற அமைப்புகள் சந்திப்பு-
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், சில அரச சார்பற்ற அமைப்புகளுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. அரச சார்பற்ற அமைப்புகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பயன்மிக்கதாக அமைந்துள்ளதென அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் கூறியுள்ளார்;. இலங்கையின்; இறுதி யுத்தத்தின்போது சர்வதேச விதிமீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து சர்வதேச விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்;டது. அமெரிக்காவின் இப் பிரேரணைக்கு பிரித்தானியா இணை அணுசரணை வழங்கியிருந்தது. இதன்படி, இலங்கையரசு பதில்கூறும் கடப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், மனிதவுரிமைகளை மேற்ப்படுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிஷா தேசாய் பிஸ்வால் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு-
அமெரிக்கா உப ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவில் செயற்படும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களை இன்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுடன் தனியான சந்திப்பு ஒன்றையும் உப செயலாளர் பிஸ்வால் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனிதவுரிமை விடயங்கள் குறித்து இந்த சந்திப்புகளின்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது-
பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித் திரிந்த புலி உறுப்பினர் ஒருவரை இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேகநபர் இம்மாதம் முதலாம் திகதி வயிற்றுப்புண் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிறை காவலர்களின் பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிச் சென்றிருந்தார். வவுனியா குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயபாலன் ஸ்டேன்லி ரமேஸ் என்;ற இவரே இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகும்போது இவர் சிவப்புநிற சுடிதாரும், தொப்பியும் அணிந்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையில்-
காணாமல்போன மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்கு நீரிணையில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. காணமால்போன மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்குநீரிணை பகுதியில் தமது நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பகுதியிலிருந்து 5000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இந்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. காணாமல்போன எம்.எச் 370 மலேசிய விமானத்தினை தேடி தமது நிறுவனம் கடந்த மார்ச் 10ஆம்திகதி தனியான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்ததாக ஆஸியின் ஜியோறிசோனன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.