வடக்கு கிழக்கில் மேதின நிகழ்வுகள்-
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஊர்வலங்களும், பேரணிகளும் மேதினக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு யாழ். சாவகச்சேரி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. சாவகச்சேரி நகரிலிருந்து தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபம் வரை ஊர்வலமாக சென்று அங்கு மே தினக் கூட்டம் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன், மாவை சேனாதிராஜா, உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர்களும், மாகாணசபை மற்றும் பிரதேச சபை அங்கத்தவர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அத்துடன் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு இடம்பெற்றது. ஸ்கந்தபுரம் சந்தியில் ஆரம்பமான மேதின பேரணி பொதுமண்டபத்தில் நிறைவடைந்ததுடன் அங்கு மேதினக் கூட்டமும் நடைபெற்றது. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு மே தின நிகழ்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான மேதின ஊர்வலம் சாள்ஸ் மண்டபம்வரை சென்று அங்கு மேதினக்கூட்டம் நடைபெற்றது. இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் இணைந்து நடாத்திய மே தின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் கரவெட்டி ஞானவைரர் ஆலய முன்றலில் நடைபெற்றது. இதேவேளை வவுனியாவில் ஐக்கியப்பட்ட தொழிலாளர்களின் புரட்சிகர மேதின பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது, வவுனியா நகர இலங்கை போக்குவரத்து சபை தரிப்பிடத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி நகரசபை மண்டபத்தை அடைந்தது.