வெளிநாடுகளுக்கான இல்ங்கைத் தூதுவர்கள் யாழ் விஜயம்-
வெளிநாடுகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர்கள் 12பேர் இன்று யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். அவர்கள் இன்றுகாலை 8.30 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கச் சென்று வழிபாடுகளையும் மேற்கொண்டனர். அதன்பின்னர் யாழ். பொது நூலகத்திற்குச் சென்று அங்குள்ள ஏடுகளையும் பார்வையிட்டு அந்த ஏடு தொடர்பில் கேட்டறிந்தும் கொண்டனர். இவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகள் தொடர்பாக அரச அதிபரிடம்; கேட்டறிந்தனர். இதேவேளை இன்றுகாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்ற இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியதுடன புதிய கட்டடத்தையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அரச சேவையில் இணைக்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை-
2013ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களையும் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2013ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்ற 2013ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்சிடம் கையளித்துள்ளனர். சுமார் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று கோரிக்கை மகஜரை கையளித்துள்ளனர்.
மீண்டும் ரயில்கள் மோதி விபத்து-
அளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 12.50அளவில் இரு ரயில்கள் மோதியுள்ளன. காலியில் இருந்து பயணித்த எண்ணெய் ஏற்றிச் செல்லும் ரயிலும், அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளுடன் மோதியதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகின்றது..இந்த விபத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேதமடைந்துள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுக் பிரிவு கூறியுள்ளது. விபத்து இடம்பெற்றபோது ரயிலில் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்து தொடர்பில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் ரயிலின் சாரதி, உதவி சாரதி மற்றும் மற்றும் ரயில் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐந்து சிறுவர்களும் மண்டபம் முகாமில் தங்கவைப்பு-
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகுமூலம் அகதிகளாக இந்தியாவிற்குச் சென்றவர்களில் சிறுவர்கள் 5 பேரையும் சென்னை புழல் சிறையில் சேர்ப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் 5 பேரும் மீண்டும் இராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சிறுவர்களின் பெற்றோர் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுள் தாய்மார் இருவரையும் புழல் சிறையிலிருந்து பொலிஸ் பிணையில் எடுத்து சிறுவர்களுடன் மண்டபம் அகதிகள் முகாமில் சேரப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் கூறப்படுகிறது.
பளை சென்ற கடுகதி ரயிலில் மோதி யானை உயிரிழப்பு-
முல்லைத்தீவு மாங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் பளை நோக்கிப் பயணித்துக் கெர்ணடிருந்த கடுகதி ரயிலில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக வடக்கு மார்க்கத்தினூடான இரு ரயில் சேவைகள் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமடைந்ததாக மாங்குளம் ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர ரயிலும், கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்த ரயிலுமே தாமதமாகியுள்ளன. எவ்வாறாயினும் இன்றுகாலை முதல் ரயில் சேவைகள் வழமைக்கு வந்தன.
இலங்கை அகதிகளை உடன் விடுவிக்க வேண்டும்-ராமதாஸ்-
தமிழகத்தில் தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை காவல்துறை இரக்கமின்றி கைதுசெய்து சிறை வைத்திருப்பது வேதனை தருகிறது. அதேபோல் தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் தவறான அணுகுமுறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுடன், இவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத விவகார பொலிஸ் வேண்டாமென முறைப்பாடு-
மத விவகாரங்கள் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் பிரிவு வேண்டாம் என்று இராவண பலய அமைப்பு பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சில் இன்று முறையிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை-
கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம்; கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் நண்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.