மே 18 முள்ளிவாய்கால் தமிழர் நினைவுகளும் – அரச கொண்டாட்டங்களும்
இலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஆனாலும், பலத்த இராணுவ பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பதட்டமான சூழலிலும் இறுதி யத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அலுவலகங்களிலும் மற்றும் ஆலயங்களிலும் இறந்தவர்களுக்காக சுடரேற்றப்பட்டு, நினைவுகூரப்பட்டிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகம், தமிழ் தேசியக் மக்கள் முன்னணி அலுவலகம், அந்த முன்னணியிலுள்ள பொதுச் செயலாளர் கஜேந்திரகுமாரின் இல்லம் என்பன படையினராலும் சிவிலுடை தரித்த காவல்துறையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்தது.
அதேநேரம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள பகுதியும் படையினரால் முற்றுகையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றுகையிடப்பட்டுள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், உதயன் பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றுக்கு வெளியிலிருந்து எவரும் செல்ல முடியாததாகவும் உள்ளேயிருந்து எவரும் வெளியே வரமுடியாததாகவும் தடுக்கப்பட்டிருந்தது.
கீரிமலையிலும் தடை
இந்த நிகழ்வையும் தடுக்கும் வகையில் கீரிமலையை சுற்றியுள்ள மூன்று மைல் தூரத்தில் கீரிமலைக்கு செல்லும் வழிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தன.
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மாத்திரம் இவ்வீதித் தடைகளினூடாக போய் வர அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் வெளியார் எவரும் உள்ளே செல்ல விடாமால் தடுத்து நிறுத்தி, திருப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஞாயிறு அன்று கீரிமலையில் ஈமக்கடன்களை செய்வதற்காக சென்ற போது தடுத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் உயிரிழந்த ஒருவருக்கு முப்பத்தோராம் நாள் சமயக்கடன்களை செய்வதற்காக சென்ற குடும்பம் ஒன்று அங்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பல இடங்களிற்கும் பல வழிகளிலும் அலைந்து திரிந்து பின்னர் தாங்கள் கீரிமலைக்கு பதிலாக வேறு ஓர் இடத்தில் சமயக் கடன்களை நிறைவேற்றியதாகவும் அவர்கள் கூறினர்.
கீரிமலைக்குச் செல்லவிடாமல் வீதித்தடை போட்டு தடுத்த படையினருடைய செயலைக் கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தியிருந்தார்.
இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை இன்று அனுட்டிக்கிறது. அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. ஆனால், பல மேற்கு நாடுகளின் தூதுவர்கள் அந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளவில்லை. அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்பதால், இவை பொருத்தமற்றவை என்று கனடா கூறியுள்ளது.
இறந்தவர்களுக்காக, தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் மத வைபவங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் வட பகுதியில் சில குறிப்பிட்ட இடங்களில் இலங்கை இராணுவம், மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த தினத்தை குறிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் ஒன்று கூட நடக்க முடியாமல் போனது.
‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல’ -மஹிந்த
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த ஐந்து ஆண்டு நிறைவையொட்டி இன்று மாத்தறையில் நடைபெற்ற தேசிய ரீதியிலான யுத்த வெற்றி நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தேசியப் பிரச்சினைகளை பேச்சுவார்தை மூலம் தீர்பதற்குரிய இடம்தான் பாராளுமன்ற தெரிவுக்குழு என்றும் .
நடைபெற்று முடிந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, தமிழ் சகோதரர்களுக்கு எதிரானது அல்ல என்றும் 30 வருட பயங்கரவாதத்தினால் நாட்டில் சகல இன மக்களும் வேதனைகளை அனுபவித்தார்கள், குறிப்பாக தமிழ் மக்கள் பட்ட கஸ்டங்கள். துன்பங்கள் சொல்ல முடியாதவை என்று கூறினார் ‘இந்தப் பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்படாமல் இருந்திருந்தால் இன்னும் பல உயிரிழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கும். வெளிநாடுகளில் தீவிரப் போக்குடைய சிலர் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முற்படுகின்றார்கள். இந்நாட்டில் வாழும் மூவினங்களின் பாதுகாவலன் என்ற ரீதியில் இதற்கு இடமளிக்க மாட்டேன். தற்போது இலங்கை இராணுவத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்’ என்று மஹிந்த ராஜபக்ஷ உரையில் குறிப்பிட்டார்.
இன்று மே 18 இல் தெற்கில் இலங்கை ஜனாதிபதி வெற்றி விழாவில் கூறியவைக்கு எதிர் மறையான செயற்பாடுகளே வட-கிழக்கில் குறிப்பாக இன்று யாழ் குடாநாட்டில் நடைபெற்றிருக்கிறது. இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடித்த கதையாகவே இருக்கும். தமிழர்களின் உணர்வை ஒடுக்க மூலை முடுக்கெங்கும் இரானுவத்தை நிறுத்தி தடுப்பது எப்படி நல்லிணக்கத்திற்கான செயலாகும் என பலரும் கருதுகின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அந்த அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயலுவதாலேயே இந்தத் நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.