மூன்று நாடுகளிலிருந்து இலங்கைக்கு எதிராக விசாரணை-

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையால் நடத்தப்படும் விசாரணைகள் மூன்று நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது. நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரசாங்கம் மற்றும் புலிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளது. இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதி கோரப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என இலங்கையில் எவ்வித சட்டங்களும் கிடையாது என்ற போதிலும், சாட்சிமளிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சாட்சியாளர்களின் பெயர் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கு இரகசியமாக பேணப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.