Posted by plotenewseditor on 23 July 2014
Posted in செய்திகள்
கறுப்பு யூலையின் 31ம் ஆண்டு நினைவுதினம் 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 1983, ஜூலை 23ம் திகதி யாழ். திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதலில் 13படையினர் பலியானதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொண்டனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அராலி வடக்கு திருமகள் விளையாட்டுக்கழக ஆண்டு விழா-
யாழ். அராலி வடக்கு திருமகள் விளையாட்டுக் கழகத்தின் ஆண்டு விழா 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வில்; சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வெற்றிபெற்ற அணியினருக்கு வெற்றிக் கேடயத்தினை வழங்கிவைத்தார். இவ் நிகழ்வில் கலந்துகொண்ட தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, கடந்த காலங்களில் இவ் அராலிப பகுதியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். அராலிப் பகுதி இளைஞர்கள் விளையாட்டுத்துறைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் வழங்குபவர்கள். இதேபோல விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ரசிகர்களும் இங்கு அதிகமாக உள்ளனர். கல்விக்கு சமமான முறையிலும் இன்று நாம் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று திட்டமிட்ட வகையில் எமது இளைய தலைமுறையினை சீரழிப்பதற்கான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டநிலையில் உள்ளது. இளைய சமுதாயத்தினை திசை திருப்புவதற்கு ஏற்ற கவனக்கலைப்பான்கள் தாராளமான வகையில் எமது சமுதாயத்திலே உருவாக்கப்ப்டுள்ளது. இதன் வாயிலாக எமது இளைய சமுதாயத்தினை பலவீனப்படுத்தி கடந்தகால வரலாறுகளை மறக்க மறைக்க நடவடிக்கை ஏற்படுத்த திட்டமிப்பட்டுள்ளது. எமது இனத்தின் வரலாறு மிக நீண்டது. தனித்துவமான ஒன்றாகும். இந்த வரலாறு இன்று சர்வதேசமளவும் பரவுவதற்கு வழிவகுத்தது எமது இளைஞர்களே அன்று காணப்பட்ட கட்டுப்பாடுகள் ஒழுக்கநெறிகள் எமக்கென்ற தனித்துவத்தையும் சிறப்பையும் வழங்கி எமது இனத்தின் பெருமைகளை சர்வதேசத்திற்கும் எடுத்தியம்பியது. இளைஞர்கள் கைகளில் தான் அன்று எம் இனத்தின் மானம் தங்கியிருந்தது. ஆனால் இன்று இவ் நிலையினை மாற்றுவதற்கு எம் இனத்தின் எதிரிகள் எம் இனத்தின் துரோகிகளோடு கூட்டுச்சேர்ந்து பல நடவடிக்கைகளையும் தாய் மண்ணில் அரங்கேற்றுவதில் மிக வேகமாகவே செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான விடயங்களில் இன்றைய இளைஞர்கள் மிக அவதானமாக செயற்பட்டு எதிரியை விட மோசமான துரோகிகளை களைய முன்வரவேண்டும். எமது இனத்தின் மீதான அழிப்புகளும் ஆக்கிரமிப்புக்களும் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதற்கு அண்மையில் காரைநகரில் சிறுமிமீது மேற்கொள்ளப்பட் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் நில அபகரிப்பு நடவடிக்கைகள் மிக முக்கியமான ஒன்றாகவே கொள்ளமுடியும். இவ்வாறான விடயங்கள் எமது இனத்தை தொடர்ந்தும் புண்படுத்தும் நிகழ்வாகவே அமைந்துள்ளது. எனக் குறிப்பிட்டார்
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம், கையெழுத்துப் போராட்டம்-
கறுப்பு ஜூலை தினத்தில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என கோரி யாழில் இன்று கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்றுகாலை 10 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமானது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது கையெழுத்துக்களை இட்டுள்ளனர் இந்நிலையில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இல்லை என்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ், சிங்கள மொழிகளடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடக்கூடியது.
களவத்துறை விளையாட்டுக் கழக ஆண்டு விழாவும், சங்கானை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழாவும்-
கடந்த 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழகத்தின் 67ஆவது ஆண்டு விழாவின்போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கழகத்தின் செயற்பாடுகளினை மேலும் வலுவூட்டும் பொருட்டு நடாத்தப்பட்ட துவிச்சக்கரவண்டி ஓட்டத்திற்கு முதற்பரிசு வழங்கும் முகமாக தனது மாதாந்த கொடுப்பனவாகிய ரூபா 10000 ஐ கழகத்தலைவர் திரு.க.குகராஜனிடம் வழங்கினார். தவிசாளர் பதவி ஏற்ற காலம் முதலாக தனது கொடுப்பனவினை தொடர்ச்சியாக பொதுப்பணிக்கு வழங்கி வருவது குறிப்பிக்கூடிய ஒன்றாகும். இதேவேளை கடந்த 19.07.2014 அன்று சங்கானை ஞானவைரவர் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.