மீள்குடியேற்றத்தில் உதவக்கோரி சம்பூர் மக்கள் மனு-
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் பொருளாதார முதலீட்டு வலயத்திற்கு என அடையாளம் காணப்பட்ட காணிகள் தவிர ஏனைய காணிகளில் மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு சம்பூர் மக்கள் வலியுறுத்தி கேட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா ஊடாக ஜனாதிபதிக்கு இந்த மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்களுக்கு மேலாக தீர்வு இன்றி தொடரும் தங்களது மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி உதவ வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு போர் காரணமாக தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய சம்பூர் பிரதேச மக்கள் போர் முடிவடைந்த பின்னரும் மீள்குடியேற்றம் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்கள் உட்பட தற்காலிக குடியிருப்புகளிலே தங்கியுள்ளார்கள். சொந்த மண்ணில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட காலந்தொட்டே இவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ள போதிலும் சாதகமான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்வரை யாழ்தேவியை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை-
யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். யாழ். வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் செப்ரெம்பர் 15ம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். செப்ரெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
157 இலங்கை அகதிகளை நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸி முடிவு-
படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன், அவுஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படும் இந்த 157 பேரையும் இந்திய தூதரக அதிகாரிகள் வந்து சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்க்கும்வரை அவுஸ்திரேலிய மண்ணில் வைக்கப்படும் இவர்களை, அதன் பின்னர் எவ்விதமாக கையாள வேண்டும் என்பதை தமது கொள்கையின் அடிப்படையிலும் சட்டங்களின் அடிப்படையிலும் அவுஸ்திரேலியா முடிவுசெய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட் மாரிசன் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அங்கு இந்திய அதிகாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார். இந்தப் படகில் வந்தவர்களில் யார் யார் இந்தியப் பிரஜைகள் என்று உறுதிசெய்யும் பொருட்டு இந்தியத் தூதரக அதிகாரிகள் அவர்களைச் சந்திக்கப்பதற்கு அனுமதி வழங்க தான் சம்மதித்திருந்ததாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் கூறியுள்ளார்.
பொது பல சேனாவின் முகநூல் கணக்கை முடக்கவும் ; 50 லட்சம் முறைப்பாடுகள்-
கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் முகநூல் கணக்கை முடக்குமாறு கோரி 50 லட்சம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முகநூல் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் சிரேஸ்ட தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் முகநூல் கணக்கை முடக்குமாறு அமெரிக்காவில் அமைந்துள்ள முகநூல் நிறுவனத்திடம், 12 லட்சம் முறைப்பாடுகள் 24 மணித்தியாலத்திற்குள் செய்யப்பட்டுள்ளன. குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான பதிவுகள் காணப்படுவதனால் கணக்கை முடக்குவதாக முகநூல் நிர்வாகம் ஞானசார தேரருக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான பதிவுகள் தனது முகப் புத்தகத்தில் பதிவேற்றப்படவில்லை என ஞானசார தேரர் கூறியிருந்தார்.
வடக்கிலிருந்து வந்த ஊடகவியலளார்கள் தடுத்துவைத்து விடுவிப்பு-
கொழும்பில், இடம்பெறும் இருநாள் ஊடக பயிற்சிக்காக வடக்கிலிருந்து வந்த ஊடகவியலாளர்கள், ஓமந்தை பொலிஸாரால் 6 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏ-9 வீதியை மறித்து, ஊடகவியலார்களின் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் பயணித்த வாகனத்தில் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர், இரு வாகனங்களில் நேற்றிரவு கொழும்பை நோக்கி பயணித்துள்ளனர். முதலாவது வாகனம் வவுனியாவை கடந்து சென்ற நிலையில், இரண்டாவதாக வந்த வாகனம் மாங்குளம் பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் வழி மறிக்கப்பட்டு இராணுவ பொலிஸாரினாலும் சிவில் உடையில் இருந்தவர்களினாலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணத்தை தொடர்வதற்கு அந்த வாகனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் இரவு 9.30 மணியளவில் வாகன பதிவுகளை மேற்கொள்வதற்காக சாரதி, வாகனத்தை பதியும் இடத்திற்கு சென்றுள்ளார். அச்சந்தர்ப்பத்தில், அங்கு வந்த இராணுவத்தினர் அறுவர், சாரதியின் ஆசனத்திற்கு கீழ் சிறிய சிகரெட் பெட்டியில் கஞ்சா இருப்பதாக தெரிவித்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் மூவர், சாரதியையும் அதில் பயணித்த எஸ்.நிதர்சன், வி. கஜீபன், எஸ். சொரூபன், கே.கம்சன், எஸ்.பாஸ்கரன், மயூரபிரியன் மற்றும் கெனடி நியூமன் ஆகிய ஊடகவியலாளர்களையும் ஓமந்தை சோதனைச்சாவடியில் உள்ள பொலிஸ் காவலரனில் தடுத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஊடகவியலாளர்கள், Read more