Header image alt text

உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்தன் (சிறப்புப் பேட்டி) 
1புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும்  என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும் மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அழிக்கப்பட்டிருக்கும் தமிழரின் பூர்வீகத்தை கட்டியெழுப்பவும் அவர்கள்  ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களை எவ்வாறு – எதனூடாக செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் அதேவேளை, இலங்கையில் தங்களுடைய உதவிகள் வந்து சேர்ந்து அது தமிழரின் நலனுக்கு பயன்படக்கூடியவாறான கட்டுமஸ்தானத்தை  உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார் புளொட் தலைவர் சித்தார்த்தன்.
 
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்புகளை நடத்திவிட்டு நாடு  திரும்பிய பின்னர் ஞாயிறு தினக்குரலுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் ரீதியாக மாகாண சபைக்கு மிகப் பெரியதொரு பின்னடவை கொடுத்திருக்கிறது. எனவே, கசப்புணர்வுகள், பகைமையுணர்வுகள் மறந்து சபையும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து நலிவடைந்து எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
 
அவருடனான நேர்காணல் வருமாறு;.. Read more

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்பு-

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள பாடசாலையின் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இன்று முற்பகல் 10.30 அளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள ஆயுதங்களை கிளிநொச்சி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய துப்பாக்கி பாகங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு-

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊவா தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பம்-

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பித்துள்ளனர். கிடைத்துள்ள விண்ணப்பங்கள் குறித்து பரீசிலனை செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இதன்பிரகாரம் பதுளை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 25,870 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 15,997 தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு , எதிர்வரும் தினங்களில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.