ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்-

zeid_navi_001ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான தகவல்கள் இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 26ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை குறித்த முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பான தகவல்கள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த வருடத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடர் அமைந்துள்ளதென இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்து வந்த நவநீதம்பிள்ளை ஓய்வுபெற்றுள்ள நிலையில் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள ஜோர்தான் இளவரசர் ஷெய்த் அல் {ஹசைன் இன்று ஆரம்பவுரை நிகழ்த்தவுள்ளார். ஆணையாளர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை தொடர்பான விசாரணைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பயங்கரமான சூழல் தொடர்கிறது-ஐ.நா மனித உரிமை ஆணையாளர்-

Navaneethampillaiyin paathaiyilஇலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் 27ஆவது அமர்வு இன்று ஆரம்பமானபோது தனது ஆரம்ப உரையின்போது மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறையும் அரங்கேறி வருவதைக் கண்டிப்பதாக கூறிய அவர், முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பாதையில் தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிட கோரிக்கையாளர்களின் உரிமையை அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக மீறிவருவதையும், அடைக்கலம் கோருவோரை கடலில் வைத்து விசாரிப்பதையும் கப்பல்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதையும் கடுமையாக அவர் கண்டித்துள்ளார். எதேச்சாதிகாரமாக தடுத்துவைத்தல் சித்திரவதைக்கு உட்படும் சாத்தியம் ஆகிய மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொள்கை வழிவகுத்துள்ளது என ஷெயிட் அல் ஹூசேன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி ஆதரவு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல்-

மொனராகலை – மதுருகெட்டிய பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இன்றுகாலை 6.30 மணியளவில் இலக்கத் தகடு இல்லாத டிபென்டர் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு அதில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு இயக்கமான கபே தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி மொனராகலை மாவட்ட வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டில் குறித்த மாணவர்கள் தங்கியிருந்துள்ளனர். இன்றுகாலை முகம் கழுவவென நால்வரும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவருக்கு கழுத்து, தலை, கை பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டின்மீது இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதோடு துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பொதுமக்களின் காணிகள் கையளிப்பு-

mattakalapil pothumakkalin kaanikalமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த நிலைமையின்போது படைமுகாமாக படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த பொதுமக்களின் காணிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன. இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் படையினரின் முகாமாக இருந்த பொதுமக்களின் காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் உள்ள 18வது சிங்கபாகு படைப்பிரிவின் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் ஆலோசனையின்பேரில் கிழக்கு மாகாண கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம் இருந்த பொதுமக்களின் காணிகளின் ஒரு பகுதி இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்த பிரதான படைமுகாம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்டவெல்லாவெளியிலுள்ள படைமுகாம் என்பன அகற்றப்பட்டுள்ளன.

மாணவியைக் காணவில்லையென முறைப்பாடு-

நுவரெலியா தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கொடை -மடக்கும்புர கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். வட்டக்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் சக்திவேல் நித்தியா (வயது 15) எனும் மாணவியே கடந்த 5ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்த போதிலும் அவர் கிடைக்கவில்லை. அதன்பின் காணாமல் போன மாணவியின் தந்தை நேற்று 7ஆம் திகதி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழரசு கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-

itak_manadu_005ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு நேற்றிரவு வவுனியாவில் முடிவுற்றபோது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

01. 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு ஏறத்தாழ அறுபது வருடங்களாக இக்கட்சியின் கொள்கைகளுக்காக அயராது உழைத்தவர்களுக்கும் இதன் அடிப்படைக் கொள்கைகளை ஏற்று, ஆதரித்து, தொடர்ச்சியாக வாக்களித்து, இதுவே தமிழ் மக்களுடைய நிலைப்பாடு என்பதை ஜனநாயக முறைப்படி உறுதி செய்த எமது மக்களுக்கும், எம்முடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளையிலே அந்தக் கொள்கை – அதாவது, எமது இனத்தின் சுயநிர்ணய அடிப்படையிலே, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு – கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தின் மூலம் – வென்றெடுக்கப்படும் வரை போராடுவோம் என்று எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றது.

02. அதிகூடிய அதிகாரப் பகிர்வு முறையொன்றின் அடிப்படையிலே, புதியதோர் அரசியலமைப்பின் மூலமாக இந்நாட்டின் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்நாட்டிலுள்ள சகல தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், கட்டமைப்புகளையும், சக்திகளையும் மற்றும் அனைத்து முற்போக்கு சக்திகளையும் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு மிகவும் தயவாக அழைப்பு விடுக்கின்றோம். அத்தோடு சர்வதேச ஒப்பந்தமாகிய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்தும் இலங்கை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதை இனிமேலும் இந்தியாவும், சர்வதேச சமூகமும், இலங்கை மக்களும் அனுமதிக்கக்கூடாதென்றும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கின்றோம்.

03. இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் – போரை நடத்துகின்ற வேளையிலும் அதற்குப் பிறகும் இலங்கை அரசாங்கம், 01. போர்க் குற்ற விசாரணை – 02. மீள்குடியேற்றம், மக்களுடைய புனர்வாழ்வும் வாழ்வாதார வசதிகளும் – 03. அரசியல் தீர்வு சம்பந்தமாக இந்தியாவுக்கும் உலகுக்கும் கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றாமல் – மாறாக, எமது மக்களை அடக்கி, ஒடுக்கி, துன்புறுத்தி அவர்களது நிலங்களை அபகரித்து, தமிழ்ப் பிரதேசத்தை இராணுவ மயமாக்கி, எமது பெண்கள் மீதும், பிள்ளைகள் மீதும் பாலியல் மற்றும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, தமிழ் மண்ணின் இன, கலாசார, மத அடையாளங்களை அழித்து, இராணுவத்தினரையும், பெரும்பான்மை இனத்தவரையும் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகித்துக் குடியேற்றி, அரசியல் தீர்வொன்று ஏற்படுவதைத் தவிர்த்து, அது தேவையற்றதொன்றாக மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டித்து, இந்தியாவும் முழு சர்வதேச சமூகமும் இதற்கெதிராக அவசர நடவடிக்கை எடுத்து, தமிழினம் தமிழர் தாயகத்திலிருந்து இல்லாதொழிக்கப்படுவதை நிறுத்தி, இனவொழிப்பிலிருந்து எம்மைக் காப்பாற்ற வேண்டுமென்று அறைகூவல் விடுக்கின்றது.

04. ஐ.நா. மனித உரிமைப் பேரவை 2014 மார்ச் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்திற்காக அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் எமது புலம்பெயர்ந்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் இம்மாநாடு, அதனால் உருவாக்கப்பட்ட விசாரணை ஒழுங்காகவும் – முறையாகவும் – முழுமையாகவும் நடந்தேற எமது உதவிகளைக் கொடுப்போம் என்றும், மக்கள் தயங்காமல் இவ்விசாரணையில் சாட்சியமளிக்க முன்வருமாறும், அதற்கான வழிமுறைகளை நாம் அமைத்துக் கொடுப்போம் என்ற உறுதியையும் கொடுத்து, உண்மை கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் நீதியான தீர்வொன்று எமக்குக் கிடைப்பதற்கு அனைவரும் உதவ வேண்டுகோள் விடுக்கும் அதேவேளையில், கண் துடைப்புக்காக இலங்கை அரசாங்கம் நடத்துகின்ற உள்நாட்டு விசாரணையில் எமது மக்களுக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கின்றது. உண்மை கண்டறியப்படுவதன் அடிப்படையில்தான் இந்நாட்டில் நிலையான சமாதானமும் உண்மையான நல்லிணக்கமும் உருவாக முடியும் என்பதை எமது நாட்டின் சகல மக்களுக்கும் தாழ்மையாக அறிவிக்கின்றோம்.

05. போரின் இறுதியிலும் அதற்கு முன்பும், பின்பும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தும் இம்மாநாடு, இந்நிலைக்குப் பொறுப்பானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படவும், காணாமல் ஆக்கப்பட்டு இன்னமும் உயிரோடு இருப்பவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு தமது உறவினர்களோடு சேர்ப்பிக்கப்பட வேண்டுமென்று அரசுக்கும் சர்வதேச பொறிமுறைகளுக்கும் கோரிக்கை விடுக்கின்றது. உயிர் நீத்தவர்களின் உறவினர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கின்றோம்.

06. தமிழ் மக்கள் மீது பல தசாப்தங்களாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாகவும், போர்ச்சூழல் காரணமாகவும் எமது மக்கள் ஆயிரக்கணக்காக இடம்பெயர்ந்து அவர்களில் கணிசமானோர் புலம்பெயர்ந்தும் வாழ்கிறார்கள். இதன் விளைவாகவும் அரசின் குடியேற்றத் திட்டங்களின் காரணமாகவும் தமிழர் தாயகத்திலே எமது மக்களது குடிப்பரம்பலும், இன விகிதாசாரமும் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் இப்படியாக சனத்தொகை குறைந்ததை சாட்டாகக் கொண்டு அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 6 ஆகக் குறைந்திருக்கின்றது. இது, இப்படியான அசாதாரண, செயற்கைக் காரணிகளின் விளைவாகையால், மீண்டும் எமது மக்கள் தமது வாழ்விடங்களில் மீள் குடியேறும் வரையாவது நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது பேணப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது. வலி. வடக்கு, சம்பூர் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு, அங்கும், மற்றைய அபகரிக்கப்பட்ட நிலங்களிலும் எமது மக்கள் மீள்குடியேற உடனடியாக அனுமதிக்கப்பட்டு, இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு, எமது தாயகத்தில் தேவைக்கதிகமாக நிலைகொண்டிருக்கும் இராணுவம் வெளியேற வேண்டும் எனவும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

06. மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக நீக்கவேண்டுமென்றும், இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் குற்றஞ்சாட்டப்படாமல் பல காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டும், அதன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குகள் மீளப்பெறப்பட்டு, இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறையில் இருக்கும் எல்லோருக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது. விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, வளமான எதிர்காலத்தை வாழக்கூடிய விதத்தில் கல்வி மற்றும் ஏனைய உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.

07. இலங்கையில் தற்போது நிலவியிருக்கும் ஊடக அடக்குமுறை முற்றாகத் தகர்க்கப்பட்டு, அனைவருக்கும் கருத்துச் சொல்லும் சுதந்திரமும் அரசை விமர்சிக்கும் உரித்தும் மீளக் கொடுக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது. நாட்டில் தலைவிரித்தாடுகின்ற ஊழல், ஏகாதிபத்தியம், குடும்ப ஆட்சி ஆகியவை அகற்றப்பட்டு நல்லாட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தடையாக இருக்கின்ற 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீக்கப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டுமென்றும் அதிகாரங்கள் அனைத்தையும் ஒரு மையப்படுத்தும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

08. இலங்கையில் இன்று வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் இன, மத, மொழி அடிப்படையிலான சகியாத் தன்மையும் மாற்று இன, மத, மொழி கலாசாரங்களை வன்முறைக்குட்படுத்தி மத வழிபாட்டுத் தலங்களைத் தகர்த்து, பெரும்பான்மை இனத்துக்கும் சமயத்தாருக்குமே இந்நாடு சொந்தமானதென்ற தோரணையில் செயற்படும் பேரினவாத சக்திகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது! இச்செயற்பாடுகளைக் கண்டும் காணாதவாறும் இருந்தும், நேரடியாகவும் உற்சாகப்படுத்துகின்ற அரசின் போக்கையும் நாம் கண்டிக்கின்றோம். இந்த நிகழ்ச்சி நிரல் மூலமாக தமிழ்ப் பிரதேசங்களின் இன, மொழி, மத அடையாளங்களை அழித்து, எமது குடிப்பரம்பலையும் இன விகிதாசாரத்தையும் மாற்றி, அதன் மூலமாக அரசியல் தீர்வொன்றை தேவையற்றதாக ஆக்கும் அரசின் சூழ்ச்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். அரச அதிகாரத்துடன் மேற்கொள்ளப்படும் குடியேற்றத்திட்டங்கள் நிறுத்தப்படுவது மட்டுமல்லாது அவை பழைய நிலைக்கு மாற்றப்படவும் வேண்டும். வெளிநாடுகளில் குடியேறியுள்ள எமது மக்களும் மீண்டும் எமது தாயக பூமிக்குத் திரும்பி வரவேண்டும். அவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும்.

09. அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினாலும் மற்றும் வேண்டுமென்றே நடைமுறைப்படுத்தும் திட்டங்களினாலும் வீழ்ச்சியடைந்திருக்கின்ற தமிழர் தேசத்தின் பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமென்று இம்மாநாடு கோருகின்றது. தமிழ் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தொடர்ந்து பாரபட்சமாக நடந்துகொள்வதையும் இம்மாநாடு கண்டிக்கின்றது. அரச நியமனங்களில் தமிழ் இளைஞர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றனர். இளைஞர் சமுதாயத்தை சீரழிவான பாதைக்குள்ளாக அரசு வழி நடத்துவதையும் கண்டிக்கின்ற நாம், மதுபானக் கட்டுப்பாடு, போதைப் பொருள் பாவனைத் தடுப்பு ஆகியவற்றை அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

10. இலங்கை, இந்தியத் தமிழ் மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடரக்கூடாதெனவும் எமது கடற்பரப்பிலேயே கடல் வளத்தையும் கடற்படுக்கையையும் முற்றாக அழிக்கும் ´அடியோடு வாரியெடுக்கும் முறை´ முற்றாகத் தடைசெய்ப்பட வேண்டுமெனவும் கோருகிறோம். இந்தத் தீங்கான மீன்பிடி முறை கைவிடப்பட்டு இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரிய மீன்பிடி முறைகளையும் ஆழ்கடல் மீன்பிடியையும் செய்யக்கூடிய ஒழுங்குகளும் வசதிகளும் அவர்களுக்குச் செய்துகொடுக்கப்படவேண்டும். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசும், இலங்கை அரசும் தமிழ்நாடு மாநில அரசும், வட மாகாண சபை அரசும் ஒருமித்துச் செயற்பட்டு தீர்வொன்று உடனடியாகக் காணப்படவேண்டும். தமிழர் பிரதேசங்களில் தென்னிலங்கையில் இருந்து வந்து அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் இராணுவத்தினருடைய, கடற்படையினருடைய உதவியோடு செயற்படுவது நிறுத்தப்பட்டு, எமது மீனவர்கள் சுயாதீனமாகவும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும் தமது தொழிலில் ஈடுபட வசதி செய்யப்படவேண்டும்.

11. கற்பகதருவாம் பனை மரத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வோருடைய வருமானத்தை சுரண்டி அதைப் பாதிக்கும் நடவடிக்கைகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். அந்தத் தொழில்களில் இருந்து பெறப்படும் வருவாய் அந்தத்தொழிலாளருக்கே கிடைக்கும் வண்ணமாக மத்திய அமைச்சின் இடையீடு முற்றாக நீக்கப்பட வேண்டும். திக்கம் வடிசாலை தொழிலாளருக்கு மட்டுமே உரித்தாகவும் அதன் இலாபம் அவர்களிடமே பகிர்ந்தளிக்கும் முறை ஏற்படுத்தப்படவேண்டும். இந்த வடிசாலைகள் வட மாகாண சபையின் கூட்டுறவுத் துறை அமைச்சிடம் கையளிக்கப்படவேண்டும்.

12. தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக சுரண்டப்பட்டு அபகரிக்கப்படும் கனியவளம், வனவளம், மணல்வளம் மற்றும் மழைநீர் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும். சுயலாபத்துக்காக எமது சுற்றாடல் மாசுபடுத்தப்பட்டு அழிக்கப்படுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும். இரணைமடு குடி நீர்த் திட்டம் தற்போது வரையப்பட்ட விதத்திலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆற்றுமுகத் திட்டத்தை மீள அமுல்படுத்தி இரணைமடுக் குளத்தின் நீருக்கான முன்னுரிமை, அதையொட்டிய விவசாய நிலங்களுக்கு அதன் பின்னர் அதுவும் ஆறுமுகத் திட்டத்தின் மூலமாக பெறப்படும் நீரும் யாழ். குடாநாட்டிற்கான நீர்த் தேவைகளுக்கு உபயோகிக்கப்படவேண்டுமென்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

13. இணைந்த வடக்கு, கிழக்கிலே அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலமாகவே இந்நாட்டின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படலாமென வலியுறுத்தும் இம்மாநாடு, வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கம் சிறிதளவு கூட அரச அதிகாரங்கள் பகிர இடமாளிக்காமல் இராணுவ அதிகாரிகளை ஆளுநர்களாக வைத்துக்கொண்டு, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையும் முதலைமைச்சரும் அமைச்சரவையும் இயங்க முடியாமல் தடுத்து, மாகாண சபைக்குச் சமாந்தரமான இன்னொரு நிர்வாகத்தை தன்னிச்சையாக நடத்தும் ஜனநாயக விரோதச் செயலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அரசாங்கத்தின் இந்த நடத்தை, அரசியலமைப்பையும் மாகாண சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளையும் மீறும் செயற்பாடாகும். வட மாகாண முதலமைச்சர் மத்திய அரசோடு இணைந்து செயற்படுவதற்கு எடுத்த சகல உளமார்ந்த முயற்சிகளையும் அரசாங்கம் உதாசீனம் செய்வதையும் அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை தன்னிச்சையாக மீறுவதையும் இம்மாநாடு கண்டிக்கிறது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் கூடிய அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவை பலப்படுத்தப்படவேண்டுமென்றும் தீர்மானிக்கிறோம்.

14. தொடர்ச்சியாக எமது மக்களை அடக்கு முறைக்கு உட்படுத்தி, தமது நிலங்களுக்கு செல்ல முடியாமல் அவர்களைத் தடுத்து, அந்நிலங்களை அபகரித்து, எமது மக்களின் சொத்துக்களை அழித்து, எமது பெண்கள் மீதும் பிள்ளைகள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தாது, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி எமது இனத்தின் இருப்பை அழிக்கும் செயற்பாட்டிலிருந்து அரசாங்கம் இவ்வருட இறுதிக்குள் மாறாவிட்டால், 2015 ஆம் ஆண்டு தை திங்களிலிருந்து எமது இனத்தைப் பாதுகாப்பதற்காக மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டத்தை நாம் ஆரம்பிப்போம் என்றும், அப்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை நல்குமாறு எமது மக்களிடமும் இந்நாட்டிலுள்ள அனைத்து முற்போக்குவாதிகளிடமும் இந்தியா உள்ளிட்ட அனைத்து சமூகத்திடமும் 2014 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 5 ஆம், 6 ஆம், 7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடுகின்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.