யாழ் ஜம்புகோளபட்டினத்தில் மீன்பிடிக்க தடை – கடற்படை

index(1027)யாழ்ப்பாணம், ஜம்புகோளப்பட்டினம் (மாதகல்) கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் முற்றாக தடை விதித்துள்ளனர் என்று கங்காதேவி மீன்பிடி சமாசம் தெரிவித்தது. சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 115 மீனவக் குடும்பங்கள், ஜம்புகோளப்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். எனினும், ஜம்புகோளப்பட்டினம் பகுதியில் சங்கமித்தை வந்திறங்கிய அடையாளமாக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, பௌத்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை சூழவுள்ள 2 கிலோமீற்றர் தூரத்திற்கு மீன்பிடிப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, புனித பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்டுப்புலம் மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொன்னாலை பகுதியிலிருந்த கடற்படை முகாம் ஒன்று தற்போது ஜம்புகோளப்பட்டினத்தை அண்மித்த திருவடிநிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேசமெங்கும் மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதுடன், மீனவர்கள் கடலில் போட்டிருந்த மீன்பிடி படுகைகளையும் அகற்ற உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் ஆனால் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், குறித்த பிரதேசத்தை புனித பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்த கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய, ஜம்புகோளப்பட்டின கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.  

சமாதான நீதவானை கடத்த முயற்சி – சுவிஸ்வாழ் தமிழர்

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவானான சி.சிதம்பரம் (வயது 63) என்பவரை, வானில் வந்தவர்கள் கடத்த முற்பட்டுள்ளதாகவும். ஊர் மக்கள் ஒன்று கூடியதையடுத்து வானில் வந்தவர்கள் தப்பி ஓடியதாகவும். பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது தூரத்து உறவினர்களில் ஒருவரே வானில் ஆட்களுடன் வந்து தன்னை கடத்த முற்பட்டதாக அவர் சமாதான நீதவான் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்ட போது, பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்திலேயே கடத்தல் முயற்சி இடம்பெற்றிருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட முனைந்தவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளார்

மட்டக்களப்பு சிவன் கோவில் தேர் திருவிழாவிலன்று மேலும் விபத்து

pati_accident_002கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த  முச்சக்கரவண்டியொன்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 04  பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த  நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். காயமடைந்தவர்களில் 03 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (15) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து நடத்துனர் பலி – முறிகண்டி

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, முறிகண்டி பகுதியிலுள்ள  வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்ட வேளையில் முன்வாசலில் நின்றிருந்த நடத்துனர் தவறி கீழே விழுந்தார் இதன்போது, பஸ்ஸின் முன் சில்லு, நடத்துனர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பலியான சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.  வவுனியா, கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் தனுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.

இரண்டு பேருந்துகள் மோதி பலபேர் காயம் – காலியில்

காலி, தடல்லை எனும் இடத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரா.சம்பந்தன், மாவை, அனந்தி ஆகியோரை கேலி செய்து சுவரொட்டிகள் – யாழில்

tna_poster_001தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சசிதரன் ஆகியோரை கேலி செய்து, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சர்வதேச ஜனநாயக தினம் இன்று திங்கட்கிழமை(15) கொண்டாடப்படும் நிலையில், அன்றைய ஜனநாயகம் – இன்றைய ஜனநாயகம் என பிரசுரிக்கப்பட்டு இரண்டு விதமான கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் கீழ் மேற்படி மூன்று அரசியல்வாதிகளும் செல்வ செழிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு அவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் – இந்திய பதில் துணைத்தூதர்

india_moorthy_001இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் மினிசூறாவளி

miniஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில்  வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் மினிசூறாவளி போன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள கெருடமடு மற்றும் மண்ணாங்கண்டல் கிராமத்தை சேர்ந்த மக்களதும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வசந்தபுரம் கிராம மக்களதும் 42 வீடுகள் சேதமடைந்துள்ளது. பலத்த காற்றுக்கு கூரைகள் மற்றும் கூரைத்தடிகள் தூக்கி வீசப்பட்டமையாலும் மரங்கள் முறிந்து கூரைகளின் மீது வீழ்ந்ததாலும் இவற்றில் 10 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.  mini2 மக்கள் சேமித்து வைத்திருந்த நெல் மூடைகள், பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் அத்தியாவசிய வீட்டு ஆவணங்கள்;, உடைகள், உணவுப்பொருள்கள் மழையினால் நனைந்து சேதமடைந்துள்ளன. வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு வீட்டு கட்டுமாணத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீமேந்து போன்ற பொருள்களும் மழை நீரில் கரைந்து போயுள்ளன. பயன்தரு நிலையிலிருந்த வாழை மரங்களும் முறிந்து போயுள்ளன. சனிக்கிழமை (13) காலை அப்பகுதிகளுக்கு சென்று அனர்த்த நிலைமைகளை பார்வையிட்டுள்ள கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் பிரதேச செயலர்களுடன் தொடர்பு கொண்டனர். இன்றும் மழை பெய்வதற்கான வானிலை அவதானிப்புகள் காணப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் இருப்பதால் அவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படும் அவலநிலை காணப்படுவதாகவும், ஆகையால் அவசர உதவிகளாக தறப்பாள்களையும், உலர் உணவுகளையும் வழங்கியுதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களும் தமது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக முடிந்தவரையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் போரினால் குடும்பத்தலைவர்களை இழந்து பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களும் காணப்படுவதால், ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் ஏனைய நலன் விரும்பிகளும் நல்லுள்ளம் கொண்டோரும் தம்மால் முடிந்த வகையிலான உதவிகளை, குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்