வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய மணிவிழா-
யாழ்ப்பாணம் வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் மணிவிழா நிகழ்வுகள் இன்று (19.09.2014) வெள்ளிக்கிழமை தலைவர் திரு சாந்தலிங்கம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் நிகழ்வில் சமூகமளிக்க முடியாமற் போனதால் அவரது இடத்திற்கு கழகத்தின் (புளொட்) வன்னிப் பிராந்திய அமைப்பாளரும் மத்தியகுழு உறுப்பினருமான திரு சிவநேசன் (பவன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
(படங்கள் இணைப்பு)
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அம்பிகா விஜயகுமார் (பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு த.குமணன், திரு.க..கந்தசாமி (வடலியடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கம்) த.ஜெயராஜா (முன்னாள் நிலையத் தலைவர், சி.தவராசா (முன்னாள் நிலைய பொருளாளர்) உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தொடர்ந்து புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு சிவநேசன் (பவன்) அவர்கள், கலைவாணி சனசமூக நிலையத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட கலையரங்கினை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில்,
இந்த வடலியடைப்பு கிராமமானது எமது போராட்ட வரலாற்றிலே மிகவும் முக்கியமானதொரு இடமாக இருந்தது, ஏனென்றால் எமது கழகத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான ஜோதீஸ்வரன் அவர்கள், மணிவண்ணன் (தோழர் வசந்தி), கனககுலசிங்கம் (வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்டவர்) உட்பட பல கழகத் தோழர்களையும், அதேபோல ஏனைய இயக்கங்களுக்கு பல போராளிகளையும், மாவீரர்களையும் வழங்கிய கிராமம் இது.
இங்கு கலைவாணி சனசமூக நிலையம் தொடர்ந்து சிறப்புற இயங்கி வருகின்றது. யுத்தத்தினால் பல்வேறு பின்னடைவுகளை இக்கிராம மக்கள் சந்தித்தபோதிலும் ங்குள்ள இளைஞர்கள் இந்த சனசமூக நிலையத்தினை ஆரோக்கியமான வழியில் தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றார்கள். இக்கிராம மக்களுக்கு மிகவும் பயனள்ளதாக இந்த சனசமூக நிலையம் இருப்பதனை அவதானிக்க முடிகிறது.
இன்று 60ஆவது ஆண்டு மணிவிழாக் காணும் இச் சனசமூக நிலையம் தொடர்ந்து 75வது ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாக்களையும் காணும் என்பதிலே எந்த சந்தேகமும் இல்லை. இன்று இங்கே கலைநிகழ்ச்சிகளிலும், விளையாட்டுக்களும் பங்கு கொண்டிருக்கின்ற இந்த சிறார்கள் இதன் நூற்றாண்டு விழாவினை நடாத்துவார்கள் என்பதை இன்று இங்கிருக்கும் மக்களினதும் சனசமூக நிலையத்தினதும் செயற்பாட்டிலிருந்து தெரிந்துகொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. ஆகவே கலைவாணி சனசமூக நிலையம் தொடர்ந்து வெள்ளி விழாவினையும் நூற்றாண்டு விழாக்களையும் சிறப்புறக் கொண்டாட வாழ்த்துகின்றோம் என்றார்.
தொடர்ந்து சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏறத்தாழ அக்கிராமத்து மக்கள் அனைவருமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த மணிவிழாவின் நிகழ்வுகள் நாளையதினமும் தலைவர் திரு. சுதர்சன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.