விரைவில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை-

untitledநீதிமன்றங்களில் சிங்களம் மற்றும் தமிழில் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மொழி பெயர்ப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ உறுதியளித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ இன்று யாழ். நீதிமன்றில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடினார். அச்சந்திப்பின்போது, பொலிஸாரினால் தாக்கல்செய்யப்படும் குற்றப்பத்திரங்கள் சிங்களத்தில் இருப்பதனால் மொழிபெயர்ப்பு செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் குற்றப்பத்திரம் மற்றும் ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இவ்வாறு மொழிபெயர்ப்பிற்கான காலம் நீடிப்பதால் வழக்குகளின் கால எல்லைகளும் நீடிக்கப்படுகின்றன எனவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொலிஸாரினால் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரங்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் ஆவணங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் விரைவில் நீதிமன்றங்களில் நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா பிரதேச செயலாளர் வீட்டின்மீது கல்வீச்சு-

avuniyavil kadum kaatruவவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசாவின் வீட்டின்மீது நேற்றிரவு 9.45மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா உத்யான வீதியில் அமைந்துள்ள பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ இலத்தின்மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலால் பிரதேச செயலருக்கோ எவருக்குமோ பாதிப்பு ஏற்படவில்லை. தாக்குதல் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதேச செயலாளர் கே.உதயராசா தெரிவித்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் சாரதியின்றி பயணித்த பஸ் மோதி வைத்தியர் பலி-

koneswaram aalaya valaakamதிருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென பள்ளத்தை நோக்கி நகர்ந்ததால் பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்றவேளை பஸ் இவ்வாறு பள்ளத்தை நோக்கி நகர்ந்தவேளை அதில் மோதுண்ட ஒருவர் பாதுகாப்பு கொங்றீட் தூணில் நசுங்குண்டு பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் சென்ற சீதுவ – ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து ஆலயத்தில் கூடியிருந்தவர்கள் பஸ்ஸின் சாரதியை தாக்கியுள்ளனர். காயமடைந்த சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வர் – சட்ட மா அதிபர் சந்திப்பு-

வடமாகாண முதலமைச்சரும், முன்னாள் உயர் நீதிமன்ற நிதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரனை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ சந்தித்து கலந்துரையாடினார். யாழிற்கு நேற்று சென்ற சட்டமா அதிபர் யாழ். நீதிமன்றிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், பொலிஸார் மற்றும் பல தரப்பினரை சந்தித்தார். இதன்போது, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று மாலை அவரைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more