தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தனது பதவியை இழக்கும் நிலை-

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களுரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்றுகாலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுகாலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. 1 மணியளவிலேயே தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் இன்னும் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் உடனடியாக இழக்கிறதுடன். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்படுமென கூறப்படுகிறது.