யாழ் – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில்களை இணைக்க நடவடிக்கை-
யாழ் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளுக்கு, மேலதிக ரயில்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள ஆசனத் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. ரயில் போக்குவரத்தில் ஈடுபடும் யாழ். தேவி, கடுகதி, குளிரூட்டப்பட்ட கடுகதி, தபால் ரயில் சேவைகள்மூலம் அதிக பயணிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைக்கு அதிகமான பயணிகள் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்வதால், ஆசனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கமையவே, மேலதிக ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
யாழில் இளைஞரை காணவில்லையென முறைப்பாடு-
16 வயது இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். குருநகர் தொடர்மாடி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்ரியன் ஜீவன் (வயது 16 ) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 24 ஆம் திகதி காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. கடந்த 3 தினங்களாக உறவினர்களின் வீடுகளில் தேடி வந்த நிலையில் இளைஞர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண சபை காணி தொடர்பான தீர்மானம் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு-
காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தினை உள்ளடக்கி வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் எழுதிய கடிதம் விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் தமது அலுவலகத்தில் கிடைகப்பெற்றுள்ளதாகவும் அதனை கூடுமான விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கவுள்ளதாகவும் ஜானதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
யாழ். சிறையில் இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் நிறைவு-
யாழ். சிறையில் 24 இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தம்மை விடுவிக்க கோரி நேற்றுக்காலை முதல் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று முற்பகல் சிறைச்சாலைக்கு சென்று மீனவர்களுடன் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. மீனவர்களின் விடுதலை தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுத்தருவதாக தாம் இந்திய மீனவர்களுக்கு உறுதி வழங்கியதாக துணைத்தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி கூறியுள்ளார்.
இலங்கை திரும்ப விருப்பமில்லை -இலங்கை அகதிகள்-
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 67 வீதத்தினர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது டிஐஎஸ்எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவில் தங்கியுள்ள 520 குடும்பங்களில் 23வீதத்தினர் மாத்திரமே இலங்கைக்கு செல்ல விருப்பம் வெளியிட்டுள்ளனர் இவர்களில் 48.2 வீதமானோர் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை செல்லவே விரும்புகின்றனர். இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர் மீதமுள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வசிக்கின்றனர்.
தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அலுவலர் காயம்-
உப காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காலி – நெலுவ காவல்நிலையத்தில் பணியாற்றும் பிறிதொரு காவல்துறை அலுவலர் காயமடைந்துள்ளார். காவல்துறையினரின் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை பின்தொடர்ந்து சென்ற காவல்துறை குழுவினர் அதன் சாரதியை கைது செய்தனர் இதன்போது, முச்சக்கரவண்டி சாரதிக்கும், காவல்துறை உப அத்தியட்சகருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உப பரிசோதகரின் உத்தியோகபூர்வ துப்பாக்கி வெடித்ததன் காரணமாக அவருடன் சென்றிருந்த பிறிதொரு அலுவலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அலுவலர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கனடாவில் மூன்று தமிழர்கள் தேர்தலில் வெற்றி-
கனடாவின் ரொறொன்ரோ நகர தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல் மற்றும் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின் அடுத்த மேயராக ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றி ரொறொன்ரோ நகர சபையில் இடம்பெற்ற வோட் சகோதரர்களின் கொந்தளிப்பான ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இலங்கை தமிழர் பலி-
பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 43 வயதான ஜெயரட்னம் கந்தையா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்று 14 வருடங்கள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more