யாழ்ப்பாணத்தை அடைந்தது முதல் தபால் ரயில்-
24 வருடங்களுக்கு பின்னர் முதலாவது தபால் ரயில் இன்றுகாலை 7.25 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்தை அடைந்தது. முதலாவது தபால் ரயிலை வரவேற்கும் விதத்தில் வரவேற்பு நிகழ்வு மற்றும் தபால் ஊர்வலம் என்பவற்றை யாழ்.பிரதம தபால் நிலையத்தினர் நடத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தபால் ரயிலில் வந்த தபால் பொதிகளை பொறுப்பேற்ற இலங்கை தபால்மா அதிபர் ரோஹண அபேவர்த்தன, அவற்றை தபால் பொதி சுமப்பவரிடம் கையளித்தார். இதனையடுத்து, பாரம்பரிய தபால் காவும் முறையான, வண்டிலில் தபால் கொண்டு செல்லும் முறையில் தபால் பொதி சுமப்பவர் யாழ்.புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகளை யாழ்.பிரதம தபால் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இனிவரும் காலங்களில் பாரம்பரிய முறையன்றி, வாகனத்திலேயே தபால் நிலையம் வரை தபால்கள் கொண்டுசெல்லப்படும் என தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இராமர் பாலத்தைப் பாதிக்காத வகையில் கடல் வழிப் பாதை-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய கடல்வழிப் பாதையொன்றை அமைப்பது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பில் மேற்கொள்ளப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமையே இதற்கு காரணமாகும். இதற்கமைய இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கடல் வழிப் பாதையை அமைப்பதற்கு இந்தியா உத்தேசித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான பத்திரம் விரைவில் இந்திய மத்திய அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
வாக்காளர் இடாப்பில் பெயர்களை இணைக்க 80ஆயிரம் மேன்முறையீடு-
2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாத சுமார் 80,000 பேரிடம் இருந்து மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. தற்போது மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் பங்கேற்காதவர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் கருத்திற் கொள்ளப்போவதில்லை எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது. எவருக்கேனும் விசாரணைகளில் பங்கேற்க முடியாத பட்சத்தில், முன் அறிவிப்பின் ஊடாக திகதியை மாற்றிக்கொள்ள அல்லது கடிதம்மூலம் அதிகாரத்தை வழங்கி ஒருவரை விசாரணைகளில் கலந்துகொள்ளச் செய்யமுடியும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31ஆம் திகதி உறுதி செய்யப்படவுள்ளதுடன், அதனை கிராம உத்திகேத்தர் அலுவலகம், பிரதேச செயலர் அலுவலகம், உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு-
கடந்த 12.10.2014 அன்று மூளாய் ஊரைச் சேர்ந்த ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி றிச்வே மண்டபத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கினார். அவர் அங்கு உரையாற்றுகையில், ஆசு கவி அவர்கள் அவர்களது தொடர்ச்சியான கவி இயற்றும் தன்மையினால் ஆசு கவி எனப் போற்றப்படுகின்றார். நான் அறிந்த காலம்முதலாக அமைதியான சுபாவம் தழிழிலும் சைவத்திலும் தளராத பற்றுக் கொண்ட ஒரு பற்றாளனாகவே கண்டு கொண்டேன். இவற்றுக்கும் அப்பால் ஒரு மனிதத்துவத்தின் மகத்துவத்தை பிறருக்கு எடுத்துக்காட்டுவதற்காக வாழ்ந்து வரும் ஓருவராகவே அடையாளப்படுத்த முடியும். மூளாய் வதிரன் புலோ சித்திவிநாயகர்மீது கொண்ட மட்டற்ற ஈடுபாட்டினால் அவ் ஆலய முன்றலில் சிறிது சிறிதாக எழூதப்பட்ட கவிகளின் தொகுப்பாக ஒரு தழிழ் வழிகாட்டியாக எமது இவ் உலக வாழ்கையின் தத்துவங்களை செல்கின்ற ஒரு ஏடாக எமது வரலாற்றை எடுத்து இயம்பும் ஒரு நூலாக இது வெளிவருவது வரவேற்த்தக்கது போற்றத் தக்கது. இவ்வாறான நூல் காலத்தின் தேவைக்குரிய ஒரு நூலாக கருதுகின்றேன். Read more