நிறைந்த எதிர்பார்ப்புள்ள தமிழ் மக்களும் கூட்டமைப்பின் கருத்தியல் மோதல்களும்-கபில்- 

thamil thesiya koottamaippu indiaஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு அவ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் நியாயத்தை பெற்றுக்கொடுத்து அவ்வினத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் உரம் சேரப்பது உலக வரலாற்றில் நாம் கண்ட உண்மைகள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களுக்காக மாட்டின் லூதர் கிங் என்ற மனிதர் வழியிட்டமைபோன்ற உன்னத உதாரணங்களை கண்ணூடாக கண்ட சமூகமாக இன்று தமிழினமும் உள்ளது.  இவ்வாறான நிலையிலேயே ஒடுக்கபபட்ட அல்லது பெரும்பான்மை இனத்தால் நசுக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக நிலைபெறும் தமிழினமும் 60 வருட காலத்தில் சாதித்தவை எது என்ற கேள்விகளுக்கு அப்பால் அவ் இனத்தின நிலையை உலகிற்கு அறியத்செய்த பெருமை நிறைவேறியிருப்பது யதார்த்தம். இந் நிலையிலேயே நிர்க்கதியான தமிழனத்தின் இருப்புக்கு மீட்பராக தமிழ் மக்கள் கருதிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற கருவி இன்று உள்ளக கருத்தியல் மோதலில் சிக்கியிருப்பது பெரும் துர்ப்பாக்கிய தருணமாகவேயுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசன செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பல்வேறான சிக்கல் நிறைந்த பாதைகளை கடந்து இன்று ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய தருணத்தில் சிக்கல் நிறைந்த பாதையை மீள தெரிவு செய்து விடுமா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் கேள்விமேல் கேள்வியாக உருப்பெற்று வருகின்றது.

2013-07-28 18.35.09press conference Jaffna (1)இவ்வாறான நிலைக்கு கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள அகிம்சாவாதிகள் எதிர் இயக்கங்கள் என்ற கருத்தியலும் கூட்டமைப்பு பதிவு எதிர் பதிவின்மை என்ற கருத்திலுமே வலுப்பெற்று நிற்பது மறுப்பதற்கில்லை. இந் நிலையில் கூட்டமைப்பின் ஆரம்பம் முதல் அக் கட்சியின் வளர்ச்சிக்கு அங்கத்துவ கட்சிகளாக செயற்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் மீது கறை படிந்த கைகள் என்ற பல்வேறான விமர்சனங்களுக்கு மத்தியில் தம்மாலான விட்டுக்கொடுப்புகளை வழங்கியது மாத்திரமன்றி சகிப்புத்தன்மையையும் கைக்கொண்டிருந்தமை அவதானிக்கப்படவேண்டிய விடயமாகியுள்ளது. எனினும் அவை மறந்த விடயங்களாக பார்க்கப்பட்டு இற்றைக்கு 2004 தேர்தலுக்கு முன்னராகவிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பாக உருப்பெற்று வட மாகாணசபை தேர்தல் வரை சுமுகத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டிருந்தமை தமிழர்கள் மத்தியில் ஆறுதலையும் தமது ஆதங்கங்கள் வெளிப்படும் தளமாகவும் கூட்டமைப்பை பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

எனினும் வட மாகாணசபை தேர்தல் என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் பாரிய வாதச்சமர்களை உருவாக்கிய தேர்தலாக காணப்பட்டதன் வெளிப்பாடு இன்று போராட்ட இயக்கங்களாக இருந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய கட்சிகளை வஞ்சிப்பதற்கு காரணமாகியுள்ளதா என்ற கேள்வி எழவே செய்கின்றது.  ஏனெனில் வட மாகாணசபைத் தேர்தல் திருவிழா ஆரம்பமான காலத்திலிருந்தே முதலமைச்சர் வேட்பாளரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாடே இன்று வட மாகாண முதலமைச்சரின் பேச்சுக்களின் பிரதிபலிப்பா என்ற கோணத்தில் சிந்திக்க வைப்பதில் நியாயமும் உண்டு. இந் நிலையில் தொடர்ச்சியாக போராட்ட இயக்கங்கள் ஊடாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் பிரவேசித்த கட்சிகளை மேடைபோட்டு வஞ்சிப்பதும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளை கூவி விற்பதும் தற்கால சூழலில் ஏற்றதாக இல்லை என்பதனை கூட்டமைப்புக்குள் உள்ள பலரும் புரிந்து கொள்ளல் அவசியமாகியுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற கட்டுமானத்தில் இருந்து அதன் உள்ளக முரண்பாடுகளால் எவ்வாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக உருப்பெற்று இன்று தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளதோ அதே போன்றதொரு நிலைப்பாட்டை ஏனைய கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளை உருவாக்கிவிட தமிழரசுக்கட்சியோ அல்லது அதன் சார்ந்த உறுப்பினர்களோ முயற்சித்தால் அனைத்து தமிழர்களின் இருப்புக்கும் கேள்விக்குறியாக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இந் நிலையில் கட்சியின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வட மாகாண அமைச்சர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சரின் கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு இன்று அது பாரிய விடயமாக்கப்பட்டுள்ளதும் அதேபோல் புளியங்குளத்தில் இடம்பெற்ற வட மாகாணசபையின் நடமாடும் சேவை அங்குரார்ப்பண நிகழ்வில் முதலமைச்சரின் கருத்து புலிகள் அல்லாத ஏனைய கட்சிகளுக்கு மன அழுத்தத்தை கொடுத்தமை போன்ற நிகழ்வுகள் தொடராமல் பாதுகாக்க வேண்டியது முதலமைச்சர் மற்றும் தமிழரசுக்கட்சியின் பணிகளில் ஒன்றாக இருக்கவேண்டியது காலத்தின் தேவை.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்பது போல் கூட்டமைப்பாக ஒற்றுமையாக செயற்பட்ட ஒரு இயங்கு கருவியை இடையிட்டு வந்த சிலரின் கருத்துக்கள் சிதறடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகவே தமிழர் தரப்பாலும் பார்க்கப்படும். நிரந்தர அரசியல் தீர்வு, சுயநிர்ணய உரிமை என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் வரும் சில குழப்பங்கள் அரசுக்கும் அதன் சார் கட்சிகளுக்கும் தீனி போட்ட விடயமாக மாறும் என்பது உண்மையாக இருக்கும் போது தமக்குள்ளேயே குறை கூறுவதும் அவர்களை ஏட்டிக்கு போட்டியாக மேடைகளிலும் அறிக்கைகளிலும் சீண்டுவதும் தவிர்க்கப்படவேண்டும் என்பதே சாதாரண தமிழ் மக்களின் வேண்டுதலாக இருக்கின்றது. இவ்வாறான நிலையிலேயே அண்மையில் வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பதியப்படவேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தியதுடன் மாவை சேனாதிராஜா கூட்டமைப்பின் பதிவு விடயம் சொல்லியிருந்த விடயத்துக்கும் ஆட்சேபம் தெரிவித்திருந்ததுடன் உள்ளக முரண்பாடுகளை வெளியில் சொல்லி பெரிதுபடுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே இவ்வாறாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளக முரண்பாடுகள் என்ற விடயத்தை சொல்லும் அளவிற்கு உள்ளக மனக்கசப்புகள் வலுப்பெற்றுள்ளது என்பது உண்மை. இது மாத்திரமன்றி வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கும் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர் சந்திப்பில் காரசாரமான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தி தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே இவ்வாறான கருத்தியல் மற்றும் அறிக்கை முரண்பாடுகள் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் செயலாக மாறிப்போய் விடும் என்பதனை அரசியலாளர்கள் அல்லது தமிழர்கள் மீட்பர்களாக தற்போது எண்ணியிருக்கும் தலைமைகள் உணரவேண்டும் என்பது அவரவர்களுக்கு வெளிச்சம்.

இந் நிலையில் வட மாகாணசபை என்ற இயந்திரம் அரசுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில் அதன்மூலமான இத் தருணத்தில் தமிழர்களுக்காக சாதிக்க முயலவேண்டும் என்ற கனவு நிறைந்து இருக்கும் போது ஒருவருடைய கருத்தை வைத்து அதனை அரசியல் வியாபாரமாக்குவது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உணர்ந்துகொள்ள தலைப்பட வேண்டும். வெறுமனே தேர்தல்களை மாத்திரம் இலக்காகக் கொண்ட கட்சியில்லை கூட்டமைப்பு என வசனம் பேசுவதை விடுத்து அதனை செயல்வடிவில் காட்ட முயலவேண்டும் என்பதே ஏமாற்றமே மிஞ்சியுள்ள தமிழர்களின் அவாவாகவுள்ளது. இக் கால சூழலில் ஒரு தனிக்கட்சி என்ற எண்ணப்பாட்டுடன் செயற்பட முடியாதநிலை மெல்ல மெல்ல தோற்றம்பெறும் நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஏனைய அங்கத்துவ கட்சிகளுடன் கலந்துரையாடி கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இந் நடவடிக்கை ஜனவரி மாதத்தினுள் இடம்பெறாவிட்டால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற பெயருக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியின் காரணமாக வேறு நபர்களுக்கு இப் பெயரை வழங்கப்போவதாகவும் தேர்தல் ஆணையாளர் எச்சரித்துள்ளமையை செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியிருப்பதனால் கூட்டமைப்பு எதிர்வரும் மூன்று மாத காலத்தினுள் தமது திடமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளது. 

ஆகவே ஜனவரிக்காக காத்திருக்கும் கூட்டமைப்பாக இல்லாது முன்கூட்டியே தமது அங்கத்துவ கட்சிகளை கூட்டி முடிவெடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு போரினால் பாதிக்கபட்பட பிரதேச மக்கள் அமைப்பு என்ற வி.சகாதேவனின் அமைப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தாம் என கூறி சுவரொட்டிகளையும், பிரசாரங்களையும் முன்னெடுத்ததோ அதேபோல் பல கட்சிகள் செயற்பட முற்படும் என்பது மறுப்பதற்கில்லை. எனவே ஒரு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் பிரதிநிதிகள் குழப்பகரமான தருணத்தில் எடுக்கும் முடிவுகளே தாம் சார்ந்த மக்களின் கனவுகளை நனவாக்க வல்லவர்களாக உருவாகிக்கொள்ள முடியும். எனவே பலப்படும் சூழலில பலவீனப்படும் கூட்டமைப்பாக அன்றி நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வல்ல செயற்பாட்டை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுக்க வேண்டும். –கபில்- (வீரகேசரி 28.10.2014)