வவுனியா தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் வாசிப்பு மாத நிகழ்வு-
வவுனியா தமிழ் பிரதேச சபையினரால் வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்றுக்காலை (05.11.2014) 09.30 மணியளவில் நடத்தப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் உரைநிகழ்த்தினார். அவர் தனதுரையில், வவுனியா தமிழ் பிரதேச சபையின் செயற்பாடானது வவுனியாவின் ஏனைய பிரதேசசபையினை விட முன்மாதிரியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு வருவதை கடந்த இரு வருட நிகழ்வில் கலந்து கொண்டபோது என்னால் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு முன்மாதிரியாக செயற்பட்ட இச்சபையின் தவிசாளர், உபதவிசாளர், செயலாளர், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளை கிராம மட்டத்திற்கு எடுத்துச்சென்று கிராம மக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என தெரிவித்தார் அத்தோடு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஊடாக 2015ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராமப்புர வீதிகளை மேம்படுத்துவதற்கான நிதியினைக் கோருவதற்கு பிரதேச சபை உறுப்பபினர்கள் முன்நின்று செயற்பட வேண்டும். வவுனியா மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்குமாகாணசபை உறுப்பினர் நால்வரிடமுமிருந்து வவுனியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஒருகோடி இருபது லட்சம் ரூபா நிதி பயன்படுத்தப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டிலும் இவ்வாறான நிதியினைப் பெற்று இம்மாவட்டத்தினை வளர்ச்;பாதையில் கொண்டு செல்வோம் என்றார். அத்துடன் வவுனியா பிரதேசசபையால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் அவர் வழங்கி கௌரவித்தார்.