Posted by plotenewseditor on 10 November 2014
Posted in செய்திகள்
கொழும்பில் இணைந்த எதிர்க் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாடு-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து 17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு, இரு வருடங்களுக்குள் தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இணைந்த எதிர்க்கட்சிகள், கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில், இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மதித்து, நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சீர்திருத்தங்களை பயன்படுத்த வேண்டும் என ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சீர்திருத்தங்களுக்கு ஐக்கியப்பட்ட முயற்சிகள் ஆதரவு வழங்கவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இணைந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்காத நிலையில் அவருடைய சட்டத்தரணி உபுல் குமாரபெரும் ஊடாக அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுபவர், தனது கட்சிக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும் நேர்மையானவராகவும் இருப்பாராயின், நிச்சயம் அவருக்கு ஆதரவளிப்பதாக, முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பாடு-
ஐக்கிய நாடுகள் ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையின் முன்னாள் தலைவர் கியாம்பாலோ பியோலி இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் என அது தெரிவித்துள்ளது. பியோலி தனது மேன்ஹட்டனில் உள்ள வீட்டை, ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹனவிற்கு வாடகைக்கு வழங்கியுட்டுள்ளார். போர்க்குற்றச் செயல்கள் நிராகரிக்கும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் காணொளியொன்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சில ஊடக நிறுவனங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட தடைகள் ஏற்படுத்தப்படுவதுடன் அனுமதி மறுக்கப்படுகின்றது. கடந்த சில காலங்களாகவே இன்னர் சிற்றி பிரஸ் நிறுவனத்திற்கு செய்தி சேகரிக்க தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. பியோலியின் நடவடிக்கைளுக்கு சில ஊடகங்கள் ஆதரவளித்து வருகின்றன எனவும் இன்னர் சிற்றி பிரஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை-
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிங்கள மொழியில் உள்ள தீர்ப்பாணை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சிறந்த சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மேன்முறையீட்டுக்கான செலவுக்காக தமிழக அரசு, 20 இலட்சம் ரூபாவை இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது என முதல்வர் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நேற்றுக்காலை தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது இதன்போது இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றுவதற்கு இணங்கிக்கொள்ளப்பட்டதாக ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மங்கள வந்தால் அமைச்சை விட்டுக் கொடுக்கத் தயார் – பிரியங்கர ஜயரத்ன-
கட்சியை விட்டுச் சென்ற மங்கள சமரவீர எம்.பி மீண்டும் கட்சிக்கு வருவாராயின் அவருக்கு தனது அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஆனமடுவ அலுவலக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் கூறுகையில், ´மங்கள சமரவீரவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி என்பது புதிய இடம் அல்ல. நாம் இருந்த இருப்பில் மன கசப்பு ஏற்பட்டால் எதிர்வீட்டுக்குச் செல்வோம். ஆனால் பின்னர் வீட்டுக்கு வருவோம். மங்கள மீண்டும் வர முடிவு செய்துள்ளமை சிறந்தது. தற்போது இருக்கும் இடத்தில் இருந்து வேலை செய்ய முடியாது என அவருக்குத் தெரியும். பழையதை மறந்துவிட்டு வாருங்கள் பெரிய வீட்டுக்கு. உங்களை வெறுமனே பொறுபேற்க மாட்டோம். பொறுப்பு கொடுத்து சேர்த்துக் கொள்வோம். அதற்கு நான் எனது அமைச்சுப் பதவியையும் விட்டுக் கொடுக்கத் தயார். நாம் நமது நாட்டுக்காக உயிரையே கொடுப்போம் என்றார் அவர். Read more