வட மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் இவ் கார்த்திகை மாதத்தில் 5000 பனம் விதைகளை நடும் திட்டத்தினை கடந்த 08.11.2014 சனிக்கிழமை அன்றுகாலை வலி மேற்கு பிரதேசத்தின் வட்டுக்கோட்டை கொத்தந்துறை மயானப்பகுதியில் ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய, கால்நடை மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் கௌரவ. பொ.ஐங்கரநேசன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டுக்கோட்டைப் பிரதேச மக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதன்படி குறித்த தினத்தில் மேற்படி மயானப் பகுதியில் 1500 பனம் விதைகள் நாட்டப்பட்டது. இத் திட்டம் தொடர்பாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட இடப் பெயர்வுகள் மற்றும் யுத்தங்களால் எமது தேசத்தின் அடையாளமான பனை பல அழிக்கப்பட்டு விட்டன. இவ் நிலையில் எமது தேசத்தின் கற்பக தருவாகவும் அட்சய பாத்திரமாகவும் உள்ள இவ் பனைகளை மீளவும் நடவேண்டிய தேவை உள்ளது. இந்த 5000 பனை மரங்களை நடும் திட்டம் இம் மாதம் முழுவதும் இடம்பெறும் எனக் குறிப்பிட்டார்.