மரண தண்டனைக் கைதிகளான இந்திய மீனவர்கள் விடுதலை

fishermendeathதமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் 2011ம் ஆண்டில் இலங்கைக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , கொழும்பு உயர்நீதிமன்றத்தால், மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த ஐந்து மீனவர்கள் தாக்கல் செய்த மேன் முறையீடு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
 மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் சிறையிலிருந்து விடுவித்துவிட்டதாகவும், அவர்களை இலங்கை குடிவரவு அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் இலங்கை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில், இந்த மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும், இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்ஹா விடுதலையான மீனவர்கள் தூதரகத்தில் சந்தித்தார் என்றும். விரைவில் அவர்களை இந்தியா அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் கூறியிருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி ‘மனிதநேய சமிக்ஞையாக’ இவர்களை விடுதலை செய்திருப்பது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஏற்கனவே நிலவும் உறுதியான மற்றும் பன்முகத்தன்மையுடைய இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று தூதரக செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்களின் வழக்கறிஞர் அனில் சில்வா, இலங்கை அரசியல் சட்டத்துக்கு அமைய, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் பேரிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 இதன்படி இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை முற்றாக நீக்கப்பட்டுள்ளதா? இல்லாவிட்டால் அந்த தண்டனை குறைக்கப்பட்டுள்ளதா? இது சம்பந்தமான விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

எங்கள் உறவுகளை விடுதலை செய்யாதது ஏன்?
இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டை தீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மற்றும் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரியிருக்கின்றனர்.
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்றும். இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும்போது ஆனால் எங்கள் உறவுகளை விடுதலை செய்யாதது ஏன்? அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை 
அவர்களை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது’