மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சர்கள் பாதுகாப்பு நீக்கம்-
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்றையதினம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகி இருந்தார். இதனையடுத்தே அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறியுள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐhதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐhதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்-
பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்h சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் பதவிகளை வகித்து வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் வகித்து வந்த சுகாதார அமைச்சுப் பதவி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த பதவிகள் என்பனவற்றில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூடு – ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் காயம்-
களுத்துறை மாவட்டம் பேருவளை மக்கோனா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை குருநாகல் மாவத்தகம பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாகனங்கள் சில சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதுளை, இரத்தினபுரி மண்சரிவு அபாயம், 100ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு-
பதுளை, லுணுகல, சோலன்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 117பேர் இவ்வாறு இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக லுணுகல பிரதேச செயலர் டீ.எம்.எல்.எச் திசாநாயக்க கூறியுள்ளார். வெளியேற்றப்பட்ட அனைவரும் சோலன்ஸ் மேற்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, நேற்றுமாலை தொடக்கம் சோலன்ஸ் தோட்ட மக்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தெபலகலவத்தை பகுதியில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார். Read more